புதிய எஸ்யூவி கார்களை களமிறக்க ஹூண்டாய் திட்டம்!
எஸ்யூவி கார்களுக்கு இருந்து வரும் வரவேற்பை கருத்தில்கொண்டு, புதிய எஸ்யூவி மாடல்களை விற்பனைக்கு அறிமுகம் செய்வதற்கு ஹூண்டாய் மோட்டார் திட்டமிட்டுள்ளது.

இந்தியாவின் இரண்டாவது பெரிய கார் நிறுவனமான ஹூண்டாய் மோட்டார் எதிர்கால வர்த்தக திட்டங்களை செயல்படுத்துவதில் தீவிரம் காட்டி வருகிறது. பல புதிய கார் மாடல்களுடன் விற்பனையை அதிகரிக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது.

இந்த நிலையில், தனது எதிர்கால வர்த்தகத்தை மனதில் வைத்து, புதிய எஸ்யூவி மாடல்களை இந்தியாவில் வரிசை கட்டுவதற்கு அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. விரைவில் க்ரெட்டா அடிப்படையிலான 7 சீட்டர் மாடலையும் இந்தியாவில் அறிமுகப்படுத்த ஆயத்தமாகி வருகிறது.

இந்த நிலையில், பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு ஹூண்டாய் இந்தியா நிர்வாக இயக்குனர் எஸ்எஸ்.கிம் பேட்டி அளித்துள்ளார். அதில்,"சந்தையில் எஸ்யூவி கார்களுக்குத்தான் அதிக வரவேற்பு உள்ளது.

உலக அளவில் எஸ்யூவி கார் விற்பனையில் நாங்கள் மிக வலுவாக இருந்து வருகிறோம். எனவே, இந்தியாவிலும் பல புதிய மாடல்களுடன் எங்களை வலுப்படுத்திக் கொள்வதற்கு திட்டமிட்டுள்ளோம்," என்று தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் எம்பிவி கார்களை களமிறக்கும் வாய்ப்பு இருக்கிறதா என்ற கேள்விக்கு,"7 சீட்டர் ரக கார்களுக்கு குறிப்பிடத்தக்க வரவேற்பு உள்ளது. அதற்கான சிறந்த தயாரிப்பை கொண்டு வரும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளோம். ஆனால், எம்பிவி மாடலா என்பதை குறிப்பிட்டு கூற இயலாது.

மேலும், சில மாநிலங்களில் டீசல் மாடல்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. எனவே, தொடர்ந்து டீசல் கார் மாடல்களை விற்பனை செய்வோம்," என்று கிம் தெரிவித்தார்.

ஹூண்டாய் நிறுவனம் வெனியூ, க்ரெட்டா மற்றும் டூஸான் உள்ளிட்ட எஸ்யூவி மாடல்களை இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது. கடந்த ஆண்டு மட்டும் 1.80 லட்சம் எஸ்யூவி ரக கார்களை விற்பனை செய்துள்ளது. எனவே, புதிய எஸ்யூவி மாடல்களுடன் தனது சந்தையை வலுப்படுத்திக் கொள்வதற்கு திட்டமிட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








