சென்னை ஹூண்டாய் ஆலையில் மீண்டும் உற்பத்தி துவங்கியது... 3வது ஷிஃப்ட் கிடையாது
சென்னை ஹூண்டாய் கார் ஆலையில் உற்பத்திப் பணிகள் நேற்று முதல் மீண்டும் துவங்கி இருக்கின்றன. ஆனால், மூன்றாவது ஷிஃப்ட்டில் கார் உற்பத்திப் பணிகள் நடைபெறாது என்பது தெரிய வந்துள்ளது.

கொரோனா இரண்டாம் அலை தமிழகத்தை பாடாய்படுத்தி வருகிறது. கடந்த மாதம் கொரோனா பரவல் மிக மோசமான நிலையை எட்டியது. இதனையடுத்து, தமிழகத்தில் முழுமையான லாக்டவுன் அமல்படுத்தப்பட்டது.

எனினும், சில வழிகாட்டு முறைகளுடன் குறிப்பிட்ட தொழிற்சாலைகள் இயங்க அனுமதிக்கப்பட்டன. இதனால், சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அமைந்துள்ள கார் உள்ளிட்ட வாகன தொழிற்சாலைகள் தொடர்ந்து செயல்பட்டன.

கொரோனா பரவல் தீவிரமாக இருந்த நிலையில், தொழிற்சாலைகளை இயக்குவதற்கு வாகன தொழிற்சாலை பணியாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆயிரக்கணக்கானோர் பணிபுரியும் கார் தொழிற்சாலைகளில் கொரோனா எளிதாக பரவும் அபாயமும் இருந்தது. இதனை சுட்டிக் காட்டியே தொழிலாளர்கள் போராட்டத்தில் குதித்தனர்.

இதனால், ஹூண்டாய், ரெனோ - நிஸான், ஃபோர்டு, யமஹா உள்ளிட்ட நிறுவனங்கள் உற்பத்திப் பணிகளை தற்காலிகமாக நிறுத்தி வைத்தன. இந்த நிலையில், சென்னையிலுள்ள ஹூண்டாய் கார் ஆலையில் நேற்றுமுதல் உற்பத்திப் பணிகள் துவங்கப்பட்டுள்ளன.

ஆனால், இரண்டு ஷிஃப்ட்டுகளில் மட்டுமே உற்பத்திப் பணிகளை நடத்த ஹூண்டாய் முடிவு செய்துள்ளதாக எக்கனாமிக் டைம்ஸ்ஆட்டோ தளத்தின் செய்தி தெரிவிக்கிறது. வரும் ஜூன் 21ந் தேதி வரை மூன்றாவது ஷிஃப்ட்டில் உற்பத்திப் பணிகள் நடைபெறாது என்றும் அந்த செய்தி தெரிவிக்கிறது.

இதனால், ஹூண்டாய் நிறுவனத்தின் கார் உற்பத்தி இந்த மாதமும் இயல்பு நிலைக்கு திரும்பாது என்று உறுதி ஆகி உள்ளது. மேலும், லாக்டவுன் அமலில் இருக்கும் நிலையில், தூரத்தில் வசிக்கும் பணியாளர்களை அழைத்து வருவதிலும் பல சிக்கல்கள் உள்ளன. எனவே, குறைந்த தூரத்தில் வசிக்கும் பணியாளர்களை கொண்டு இரண்டு ஷிஃப்ட்டுகளில் உற்பத்திப் பணிகளை செய்து ஓரளவு இழப்பை தவிர்க்கும் முயற்சியில் ஹூண்டாய் ஈடுபட்டுள்ளது.

தமிழகத்தில் படிப்படியாக கொரோனா தாக்கம் குறையத் துவங்கி இருப்பதால் ஜூன் மாதத்தில் நிலைமை மேம்படும் என்றும் வாகன நிறுவனங்கள் எதிர்பார்த்து அதற்கு தக்கவாறு முடிவுகளை எடுத்து வருகின்றன.


Click it and Unblock the Notifications








