நாடு விட்டு நாடு போக முதல் முறையாக ரயிலில் பயணிக்கும் ஹூண்டாய் கார்கள்... எந்த நாட்டுக்கு போகிறது தெரியுமா?..
நாடுவிட்டு நாடு போக முதல் முறையாக ஹூண்டாய் கார்கள் ரயிலில் பயணிக்கத் தொடங்கியிருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

சென்னையை அடுத்துள்ள ஸ்ரீபெரும்புதூரில் ஆலையை அமைத்து தனது உற்பத்தி பணிகளை மேற்கொண்டு வருகின்றது ஹூண்டாய் நிறுவனம். இங்கிருந்தே நாட்டின் அனைத்து மூலைகளுக்கும் கார்களை இந்நிறுவனம் ஏற்றுமதி செய்து வருகின்றது. நாட்டிற்கு மட்டுமின்றி சில அண்டை நாடுகள் மற்றும் உலக நாடுகளுக்கும் இங்கிருந்தே அது கார்களை ஏற்றுமதி செய்து வருகின்றது.

அந்தவகையில், இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்றான நேபாளத்திற்கும் இங்கிருந்தே புதிய கார்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. பொதுவாக சாலை மார்க்கமாகவே இதுவரை கார்கள் அனுப்பி வைக்கப்பட்டு வந்தன. ஆனால், இம்முறை தெற்கு ரயில்வேவைப் பயன்படுத்தி கார்கள் அனுப்பி வைக்கப்பட இருக்கின்றன.

ஹூண்டாய் நிறுவனத்தின் கார்கள் ரயிலைப் பயன்படுத்தி நேபாளம் செல்வது இதுவே முதல் முறையாகும். ஆகையால், ஏற்றுமதியில் புதிய வரலாற்றை ஹூண்டாய் படைத்திருக்கின்றது. தற்போது முதல் முறையாக 125 கார்கள் நேபாளத்திற்கு பயணிக்கத் தொடங்கியிருக்கின்றன.

இது முதல் முறை என்பதால் ஹூண்டாய் நிறுவனத்தின் கார் தயாரிப்பு பிரிவின் இயக்குனர் கணேஷ் மணி கொடியசைத்து ரயிலை வழி அனுப்பி வைத்தார். இந்த நிகழ்வின்போது தெற்கு ரயில்வேயின் கூடுதல் மேலாளர் எஸ் சுப்ரமணியம் அவர்களும் கலந்து கொண்டார்.

முதலில் ஹூண்டாய் கார்கள் இருங்காட்டுக்கோட்டையில் இருந்து வாலாஜாபாத் ரயில் முனையத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கிருந்தே நேபாளத்திற்கு ரயில் மூலம் அனுப்பி வைக்கப்பட்டன. இந்த ரயில் நேபாளத்தின் சோனாலி (Sonauli) எனும் நகரத்தை நோக்கி புறப்பட்டிருக்கின்றன. அங்கு கார்கள் இறக்குமதி செய்யப்பட்டு பின்னர் அந்நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் பகிரப்பட இருக்கின்றது.

இந்த ரயில் சென்று சேர 5 நாட்கள் வரை ஆகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. சாலை மார்க்கமாக அனுப்பி வைப்பதில் செலவீணம் அதிகம். அதுமட்டுமின்றி அதிக நாட்கள் மற்றும் கூடுதல் மாசுபடுத்துதலை ஏற்படுத்தும். எனவேதான் இதற்கு தீர்வு காணும் விதமாக ரயில் பாதை இம்முறை தேர்வு செய்யப்பட்டிருக்கின்றது.

இது செலவும் குறைவு. மேலும், சுற்றுச் சூழலுக்கும் எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாது. 88 நாடுகளுக்கு ஏற்றுமதி வாயிலாகவே கார்களை விற்பனைச் செய்து வருகின்றது ஹூண்டாய். அண்மையில்தான் 3 மில்லியன் கார்களை ஏற்றுமதி செய்ததற்கான கொண்டாட்டத்தில் நிறுவனம் மேற்கொண்டது.

இந்த நிலையிலேயே ஏற்றுமதி வரலாற்றில் புதிய நிகழ்வை எழுதும் விதமாக இந்த ரயில் வழி ஏற்றுமதி அமைந்திருக்கின்றது. இந்நிறுவனம் கப்பல் வாயிலாகவும் கார்களை அனுப்பி வைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தகுந்தது.


Click it and Unblock the Notifications








