மிக மிக குறைவான விலையில் உச்சகட்ட பாதுகாப்பான கார்... டாடா நிறுவனத்தை அன்னாந்து பார்க்கும் உலக நாடுகள்!
மிக மிக குறைவான விலையில் உச்சகட்ட பாதுகாப்பான காரை டாடா நிறுவனம் தயாரித்துள்ளது. இன்னும் ஒரு சில நாட்களில் விற்பனைக்கு வரவுள்ள இந்த கார் குறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் உச்சகட்ட எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள டாடா பன்ச் (Tata Punch) கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் தேதி நெருங்கி வருகிறது. வரும் அக்டோபர் 18ம் தேதி டாடா பன்ச் கார் முறைப்படி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது. இதற்கு இன்னும் 4 நாட்கள் மட்டுமே உள்ளன.

இது மைக்ரோ எஸ்யூவி ரக கார் ஆகும். டாடா பன்ச் கார் பற்றிய நிறைய தகவல்கள் ஏற்கனவே அதிகாரப்பூர்வமான முறையில் வெளியாகி விட்டன. ஆனால் இந்த காரை பற்றிய அதிகாரப்பூர்வமற்ற தகவல் ஒன்று கடந்த ஒரு சில நாட்களாகவே ஆட்டோமொபைல் தளங்களில் தொடர்ந்து உலா வந்து கொண்டிருந்தது.

குளோபல் என்சிஏபி அமைப்பு நடத்திய மோதல் சோதனைகளில் டாடா பன்ச் கார் 5 நட்சத்திர பாதுகாப்பு ரேட்டிங்கை முழுமையாக பெற்றுள்ளது என்பதுதன் அந்த தகவல். இந்த தகவல், டாடா பன்ச் கார் மீதான எதிர்பார்ப்பை இன்னும் அதிகரிக்க செய்தது. ஆனால் இந்த தகவல் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகாமல் இருந்தது.

டாடா பன்ச் கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் நிகழ்ச்சியில்தான், இந்த தகவல் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதற்கு முன்பே தற்போது இந்த கேள்விக்கு நமக்கு விடை கிடைத்து விட்டது. ஆம், குளோபல் என்சிஏபி அமைப்பின் மோதல் சோதனைகளில் டாடா பன்ச் கார் முழுமையாக 5 நட்சத்திர பாதுகாப்பு ரேட்டிங்கை பெற்றுள்ளது.

இன்று (அக்டோபர் 14) மதியம்தான் இந்த தகவல் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டது. பொதுவாக டாடா நிறுவனத்தின் கார்கள் அனைத்துமே மிகவும் பாதுகாப்பானவை. சாலை விபத்துக்களில் இருந்து பல முறை பயணிகளின் உயிர்களை டாடா நிறுவன கார்கள் காப்பாற்றியுள்ளன. இதன் காரணமாகதான் சமீப காலமாக டாடா நிறுவன கார்களின் விற்பனை கிடுகிடுவென உயர்ந்து கொண்டே வருகிறது.

டாடா நிறுவனத்தின் நெக்ஸான் மற்றும் அல்ட்ராஸ் ஆகிய இரண்டு கார்களும் குளோபல் என்சிஏபி மோதல் சோதனைகளில் ஏற்கனவே முழுமையாக 5 நட்சத்திர பாதுகாப்பு ரேட்டிங்கை பெற்றுள்ளன. விரைவில் விற்பனைக்கு கொண்டு வரப்படவுள்ள டாடா பன்ச் காரும், தற்போது இந்த பெருமை மிக்க பட்டியலில் இணைந்துள்ளது.

இதன் மூலம் குளோபல் என்சிஏபி மோதல் சோதனைகளில் முழுமையாக 5 நட்சத்திர பாதுகாப்பு ரேட்டிங் பெற்ற 3 கார்களை விற்பனை செய்யும் ஒரே இந்திய நிறுவனம் என்ற பெருமையை டாடா பெற்றுள்ளது. டாடாவை தவிர்த்து விட்டு பார்த்தால், மஹிந்திரா நிறுவனம் இந்த வகையில் ஒரு காரை கைவசம் வைத்துள்ளது. அது எக்ஸ்யூவி300.

டாடா நெக்ஸான், அல்ட்ராஸ் மற்றும் பன்ச் கார்களை போன்று, மஹிந்திரா எக்ஸ்யூவி300 காரும் குளோபல் என்சிஏபி மோதல் சோதனைகளில் முழுமையாக 5 நட்சத்திர பாதுகாப்பு ரேட்டிங்கை பெற்று அசத்தியுள்ளது. பாதுகாப்பான கார்களை தயாரிக்கும் டாடா மற்றும் மஹிந்திரா நிறுவனங்களால் இந்தியாவிற்கு பெருமை என்பதில் துளியும் சந்தேகம் இல்லை.

குறிப்பாக பாதுகாப்பான கார்கள் விஷயத்தில் மஹிந்திராவை விட டாடா பல படிகள் மேலே போய் விட்டது.
தற்போது குளோபல் என்சிஏபி மோதல் சோதனைகளில் 5 நட்சத்திர பாதுகாப்பு ரேட்டிங்கை பெற்றுள்ள டாடா பன்ச் கார், ஆல்பா (ALFA - Agile Light Flexible Advanced) பிளாட்பார்ம் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டுள்ளது.

டாடா அல்ட்ராஸ் காரும் கூட இதே பிளாட்பார்ம் அடிப்படையில்தான் உருவாக்கப்பட்டுள்ளது. அட்டாமிக் ஆரஞ்ச், மீட்டியோர் ப்ரோன்ஸ், டேடோனா க்ரே, காலிப்ஸோ ரெட், டொராண்டோ ப்ளூ, ட்ராபிக்கல் மிஸ்ட் மற்றும் ஆர்கஸ் ஒயிட் என மொத்தம் 7 வண்ண தேர்வுகளில் டாடா பன்ச் கார் கிடைக்கும். டாப் வேரியண்ட்களில், ட்யூயல் டோன் வண்ண தேர்வும் வழங்கப்படும்.

டாடா பன்ச் காரில், 1.2 லிட்டர், மூன்று-சிலிண்டர், பெட்ரோல் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. டாடா நிறுவனத்தின் மற்ற தயாரிப்புகளான டியாகோ, டிகோர் மற்றும் அல்ட்ராஸ் ஆகிய கார்களிலும் இந்த இன்ஜின் தேர்வு வழங்கப்படுகிறது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 85 ஹெச்பி பவரையும், 113 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது.

டாடா பன்ச் காரில், 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஏஎம்டி என மொத்தம் 2 கியர் பாக்ஸ் தேர்வுகள் வழங்கப்படும். இந்த கார் குளோபல் என்சிஏபி மோதல் சோதனைகளில் 5 நட்சத்திர பாதுகாப்பு ரேட்டிங்கை பெற்றுள்ளதால், வாடிக்கையாளர்களை அதிகம் கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக டாடா நிறுவனத்திற்கு பன்ச் கார் சிறப்பான விற்பனை எண்ணிக்கையை ஈட்டி தரலாம்.

விலை மிகவும் குறைவாக இருக்கும் என்பதால், டாடா பன்ச் கார் விற்பனையில் சாதிப்பதற்கான வாய்ப்புகள் மிகவும் அதிகம். டாடா பன்ச் காரின் ஆரம்ப விலை வெறும் 4.99 லட்ச ரூபாயாக மட்டுமே இருக்கும் (எக்ஸ் ஷோரூம்) என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும்போதுதான், டாடா பன்ச் காரின் அதிகாரப்பூர்வ விலை அறிவிக்கப்படும்.

டாடா பன்ச் காருக்கு தற்போது அதிகாரப்பூர்வமாக முன்பதிவு ஏற்கப்பட்டு வருகிறது. விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட உடனேயே டாடா பன்ச் காரின் டெலிவரி பணிகள் தொடங்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த நாளுக்காக வாடிக்கையாளர்கள் அனைவரும் மிகவும் ஆவலுடன் காத்து கொண்டுள்ளனர்.


Click it and Unblock the Notifications








