எகிறும் பெட்ரோல், டீசல் விலை! மக்கள் எடுத்த மாற்று வழி! இத எதிர்பார்க்கவே இல்ல!
இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருவதனால் மக்கள் மாற்று வழியைத் தேர்வு செய்ய தொடங்கியிருக்கின்றனர். இதுகுறித்த கூடுதல் தகவலைக் கீழே காணலாம்.

பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் விண்ணை எட்டும் வகையில் உயர்ந்து வருகின்றது. நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் விலை நூறை தாண்டி பெட்ரோல், டீசல் விற்பனையாகி வருகின்றன. இந்த நிலை ஏழை மற்றும் எளிய மக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக, தினசரி வாகன ஓட்டிகளை பெட்ரோல், டீசல் விலையுயர்வு கடும் இன்னல்களுக்கு ஆளாக்கி வருகின்றது. இந்த நிலையில் மக்கள் பலர் பெட்ரோல், டீசல் எஞ்ஜினைக் கொண்ட வாகனங்களுக்கு பதிலாக மாற்று எரிதிறன் கொண்ட வாகனங்களை வாங்க தொடங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பெட்ரோல், டீசல் எரிபொருளுக்கு மாற்று எரிபொருளாக சிஎன்ஜி தேர்வு இருக்கின்றது. இதனால் இயங்கும் வாகனங்களையே மக்கள் தற்போது அதிகம் வாங்கத் தொடங்கியிருக்கின்றனர். இதை உறுதிப்படுத்தக் கூடிய ஓர் தகவலே தற்போது வெளியாகியிருக்கின்றது.

வெளியாகியிருக்கும் தகவலின்படி கடந்த காலத்தைக் காட்டிலும் 2020-21 ஆண்டில் அதிக சிஎன்ஜி கார்கள் விற்பனையாகியிருப்பது தெரிய வந்திருக்கின்றது. உதாரணமாக, 2020-2021ஆம் ஆண்டில் மட்டும் 1,57,954 யூனிட் சிஎன்ஜி வாகனங்களை மாருதி சுசுகி விற்பனை செய்திருக்கின்றது.

நடப்பாண்டு தொடங்கி ஏழு மாதங்களே ஆகின்ற நிலையில் இத்தகைய அதிகபட்ச எண்ணிக்கையிலான சிஎன்ஜி கார்களை மாருதி விற்பனை செய்திருக்கின்றது. இது ஒட்டுமொத்த இந்திய வாகன சந்தைக்குமே ஆச்சரியத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

தற்போது நாட்டில் ஹூண்டாய், டாடா மற்றும் மாருதி சுசுகி ஆகிய நிறுவனங்களே சிஎன்ஜி வசதிக் கொண்ட வாகனங்களை விற்பனைச் செய்து வருகின்றன. இதில், அதிக சிஎன்ஜி தேர்வை வழங்கும் நிறுவனமாக மாருதி சுசுகி இருக்கின்றது.

இந்நிறுவனம், ஆல்டோ, எஸ் ப்ரெஸ்ஸோ, வேகன்ஆர், எர்டிகா, ஈகோ மற்றும் செலிரியோ ஆகிய மாடல்களை சிஎன்ஜி தேர்வில் வழங்குகின்றது. இத்துடன் இன்னும் சில மாடல்களை சிஎன்ஜி தேர்வில் வழங்குவதற்கான பணியில் ஈடுபட்டு வருகின்றது.

மக்கள் மத்தியில் சிஎன்ஜி வாகனங்களுக்கான வரவேற்பு அதிகரிக்கத் தொடங்கியிருப்பதால் இன்னும் சில நிறுவனங்களும் சிஎன்ஜி வாகனங்களை விரைவில் களமிறக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. டாடா நிறுவனம் அதன் டியாகோ மற்றும் டிகோர் ஆகிய மாடல்களை சிஎன்ஜி தேர்வில் களமிறக்குவதற்கான பணியில் ஏற்கனவே களமிறங்கிவிட்டது குறிப்பிடத்தகுந்தது.


Click it and Unblock the Notifications








