மஹிந்திரா தாரின் விற்பனை எண்ணிக்கை ஒரே மாதத்தில் 3 ஆயிரத்தை கடந்தது!! நவம்பரில் டெலிவிரிகள் அதிகரிப்பு
இரண்டாம் தலைமுறை மஹிந்திரா தார் இந்திய சந்தையில் கடந்த 2020 அக்டோபர் மாதத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. அறிமுகத்திற்கு முன்பே ஸ்பை படங்களின் மூலம் வாடிக்கையாளர்களின் கவனத்தை பெற்றிருந்த தாருக்கு, துவக்கத்தில் இருந்தே முன்பதிவுகள் குவிய ஆரம்பித்தன.

இருப்பினும் குறைக்கடத்திகளின் உலகளாவிய பற்றாக்குறையால் தார் வாகனங்களை தேவைக்கு ஏற்ப தயாரித்து, வாடிக்கையாளர்களுக்கு டெலிவிரி செய்ய முடியாமல் மஹிந்திரா தவித்து வருகிறது. இந்த நிலையில் கடந்த நவம்பர் மாதத்தில் விற்பனை செய்யப்பட்ட தார் வாகனங்கள் குறித்த விபரங்கள் தெரியவந்துள்ளன. அவற்றை பற்றி இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

மஹிந்திரா தார் வாகனத்தை பொதுவாக, அன்றாட பயன்பாட்டிற்காக அதிகளவில் யாரும் வாங்குவதில்லை. ட்ரெண்டிற்காகவும், ஆஃப்-ரோடு பயணங்களை மேற்கொள்பவர்களுமே இந்த எஸ்யூவி வாகனத்தை முன்பதிவு செய்கின்றனர். இருப்பினும் கடந்த நவம்பர் மாதத்தில் 3,181 தார் வாகனங்களை மஹிந்திரா இந்திய சந்தையில் விற்பனை செய்துள்ளது.

தற்போதைய சந்தை சூழலை பொறுத்து பார்த்தோமேயானால், தாரின் இந்த விற்பனை எண்ணிக்கை உண்மையில் ஆச்சிரியத்தை ஏற்படுத்துகிறது. ஏனெனில் 2020 நவம்பரில் 2,569 யூனிட்களிலேயே தார் விற்பனை செய்யப்பட்டிருந்தது. இந்த வகையில் பார்க்கும்போது, தார் எஸ்யூவியின் வருடம்-வருடம் ஒப்பிடுகையில் சுமார் 23.82% வளர்ச்சியை காண முடிகிறது.

மேலும் மாதம்-மாதம் ஒப்பிடுகையிலும், 18.16% வளர்ச்சியை விற்பனையில் மஹிந்திரா தார் கண்டுள்ளது. ஏனெனில் 2021 அக்டோபரிலும் 2,692 தார் வாகனங்களே விற்பனை செய்யப்பட்டு இருந்தன. இவ்வாறு அறிமுகம் செய்யப்பட்டு 1 வருடம் கடந்த போதிலும் தாருக்கு கிடைத்துவரும் அபரிதமான வரவேற்பினை மஹிந்திரா மகிழ்ச்சியோடு எதிர்கொண்டு வருகிறது.

அதேநேரம் உலகளாவிய குறைக்கடத்திகளின் பற்றாக்குறையால் தயாரிப்பு பணிகளில் ஏற்படும் தடைகளும் மஹிந்திராவிற்கு சற்று தலைவலியாக உள்ளது. தாரை முன்பதிவு செய்துள்ள வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை உடன் ஒப்பிடுகையில், இந்த வாகனத்தின் கடந்த மாத விற்பனை எண்ணிக்கையான 3,181 என்பது மிகவும் குறைவுதான். இருந்தாலும், குறைக்கடத்திகளுக்கு தேவை மெல்ல மெல்ல சரிச்செய்யப்பட்டு வருவதால், இந்த எண்ணிக்கை வரும் மாதங்களில் பெரிய அளவில் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏனெனில் ஒரு சில வாடிக்கையாளர்கள் தங்களுக்கான மஹிந்திரா தார் வாகனத்தை முன்பதிவு செய்து கிட்டத்தட்ட சுமார் 1 வருடம் வரையில் (வேரியண்ட்டை பொறுத்து) கூட காத்திருக்கின்றனர். அத்தகையவர்களுக்கும் டெலிவிரி செய்யப்பட்டால், தாரின் விற்பனை எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும். இதன் வெளிப்பாடாகவே இந்த ஆஃப்-ரோடு எஸ்யூவி வாகனத்தின் கடந்த நவம்பர் மாத விற்பனை எண்ணிக்கை 3 ஆயிரத்தை கடந்துள்ளது.

இந்தியாவில் தற்சமயம் இரு விதமான என்ஜின் தேர்வுகளில் விற்பனை செய்யப்படுகிறது. இதில் ஒன்றான 2.0 லிட்டர் டர்போ-பெட்ரோல் என்ஜின் அதிகப்பட்சமாக 150 பிஎஸ் மற்றும் 320 என்எம் டார்க் திறனையும் (மேனுவல் வேரியண்ட்களில் 300 என்எம்) வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது. இரண்டாவது என்ஜின் தேர்வான 2.2 லிட்டர் டர்போ-டீசல் என்ஜின் 130 பிஎஸ் மற்றும் 300 என்எம் டார்க் திறனை வழங்கக்கூடியதாக உள்ளது.

இவற்றுடன் 6-ஸ்பீடு மேனுவல் & 6-ஸ்பீடு டார்க்-கன்வெர்டர் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளை மஹிந்திரா வழங்குகிறது. மேலும் இந்த ஆஃப்-ரோடு எஸ்யூவி வாகனத்தில் ஷிஃப்ட்-ஆன்-ஃப்ளை டிரான்ஸ்ஃபர் கேஸ் உடன் நிலையாக 4x4 அமைப்பு மற்றும் மெக்கானிக்கல் லாக்கிங் பின்பக்க டிஃப்ரென்ஷியல் உள்ளிட்டவையும் வழங்கப்படுகின்றன.

இவற்றுடன் வாகனத்தின் ஆஃப்-ரோடு திறனை மேம்படுத்தும் வகையில் பிரேக் லாக்கிங் டிஃப்ரென்ஷியல்ஸ், மேடான பாதைகளில் ஏறுவதற்கான உதவி, மலை பாதைகளில் தடையில்லா பயணிக்க கண்ட்ரோல் உள்ளிட்டவற்றை மஹிந்திரா தார் ஏற்கிறது. தற்சமயம் மஹிந்திரா தாரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.12.78 லட்சத்தில் இருந்து ரூ.15.08 லட்சங்கள் வரையில் உள்ளன.

தற்போதைக்கு மஹிந்திராவின் இந்த ஆஃப்-ரோடு எஸ்யூவி வாகனத்திற்கு ஃபோர்ஸ் குர்கா மட்டுமே போட்டியாக விளங்குகிறது. மாருதி சுஸுகி ஜிம்னியும் விரைவில் இந்த வரிசையில் இணையவுள்ளன என்றாலும், இதுகுறித்த எந்தவொரு அறிவிப்பும் இதுவரையில் தயாரிப்பு நிறுவனத்தில் இருந்து வெளியாகவில்லை. தாருடன் ஒப்பிடுகையில், மாருதி சுஸுகியின் ஜிம்னி மலிவானதாக இருக்கும் என கூறப்படுகிறது.

அதேநேரம் மஹிந்திரா & மஹிந்திராவும் அதிக பயணிகள் அமரக்கூடிய வகையில் 5-கதவு தார் வாகனத்தை வடிவமைக்கும் பணியில் ஈடுப்பட்டு வருகிறது. ஆஃப்-ரோடு பண்புகளில் எந்தவொரு சமரசமுமின்றி கொண்டுவரப்படும் இந்த 5-கதவு தார் ஆனது தற்போதைய 3-கதவு தாரை காட்டிலும் மிகவும் செயல்முறைக்கு ஏற்றதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








