இந்தியாவின் முதல் சிஎன்ஜி டிராக்டர் அறிமுகம்... எரிபொருள் செலவில் ஆண்டுக்கு 1 லட்ச ரூபாய் சேமிக்கலாம்...
இந்தியாவின் முதல் சிஎன்ஜி டிராக்டர் வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவின் முதல் சிஎன்ஜி டிராக்டரை, மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்காரி இன்று (பிப்ரவரி 12) அறிமுகம் செய்தார். சிஎன்ஜி-யில் இயங்கும் இந்த டிராக்டர் மூலம் எரிபொருள் செலவில் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 1 லட்ச ரூபாய்க்கும் மேல் மிச்சமாகும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று அறிமுகம் செய்யப்பட்ட புதிய டிராக்டரானது டீசலில் இருந்து சிஎன்ஜி-க்கு மாற்றப்பட்டது ஆகும். இந்த டிராக்டரை மத்திய அமைச்சர் நிதின் கட்காரி வைத்துள்ளார். இதற்கான பதிவு சான்றிதழை இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், நிதின் கட்காரியிடம் வழங்கினார்.

ராவ்மட் டெக்னோ சொல்யூசன்ஸ் மற்றும் டோமசெட்டோ அச்சிலே இந்தியா ஆகியவை இணைந்து டீசலில் இயங்கும் டிராக்டரை, சிஎன்ஜி எரிபொருளில் இயங்கும்படி மாற்றியுள்ளன. டிராக்டரை இயக்குவதற்கான செலவை குறைப்பதன் மூலம் விவசாயிகள் தங்கள் வருமானத்தை உயர்த்தி கொள்ள முடியும் என அரசு தெரிவித்துள்ளது.

டிராக்டர்களில் சிஎன்ஜி கிட்களை பொருத்தும் மையங்களை அமைக்கும் பணிகளை அரசு தொடங்கவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. ஒவ்வொரு மாவட்டத்திலும் இத்தகைய மையங்களை அமைப்பதற்கு அரசு திட்டமிட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் நிதின் கட்காரி மற்றும் தர்மேந்திர பிரதான் மட்டுமின்றி, மத்திய அமைச்சரான நரேந்திர சிங் தோமரும் கலந்து கொண்டார்.

டீசலில் இருந்து சிஎன்ஜிக்கு மாற்றுவதன் மூலம் விவசாயிகள் எரிபொருளை செலவை குறைக்க முடியும் என்பதுடன், சுற்றுச்சூழலையும் பாதுகாக்க முடியும். ஏனெனில் சிஎன்ஜி சுத்தமான எரிபொருள் என்பது நம் அனைவருக்கும் தெரிந்த ஒரு விஷயம்தான். மேலும் டீசலை விட சிஎன்ஜி எரிபொருள் மிகவும் விலை குறைந்தது என்பதும் நமக்கு தெரியும்.

விலை குறைவு என்பதுடன், ஏற்ற இறக்கத்துடன் காணப்படும் டீசல் விலையுடன் ஒப்பிடும்போது, சிஎன்ஜி விலை பெரும்பாலும் சீராக இருக்கும் என்பதும் சாதகமான அம்சம். இதுதவிர பெட்ரோல், டீசலில் இயங்கும் வாகனங்களை விட சிஎன்ஜி எரிபொருளில் இயங்கும் வாகனங்களின் சராசரி மைலேஜ் சிறப்பானது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

எனவே பெட்ரோல், டீசலுக்கு மாற்றாக சிஎன்ஜி போன்ற மாற்று எரிபொருட்களின் பயன்பாட்டை மத்திய அரசு தொடர்ந்து ஊக்குவித்து வருகிறது. குறிப்பாக மத்திய அமைச்சர் நிதின் கட்காரி, மாற்று எரிபொருட்களில் இயங்கும் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்க வேண்டியதன் அவசியத்தை தொடர்ந்து எடுத்துரைத்து வருகிறார்.

சிஎன்ஜி வாகனங்கள் மட்டுமல்லாது, எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டையும் மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் காற்று மாசுபாடு மற்றும் கச்சா எண்ணெய் இறக்குமதி அதிகரிப்பு ஆகிய பிரச்னைகளை இதன் மூலமாக குறைப்பதற்கு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








