போக்குவரத்து விதி மீறலில் ஈடுபட்டால் வாகன காப்பீட்டு கட்டணம் அதிகரிக்கும்: ஐஆர்டிஏஐ அளித்த அதிரடி பரிந்துரை!
போக்குவரத்து விதிமீறினால் வாகன காப்பீட்டுக்கு கூடுதல் பிரிமீயம் தொகையை நிர்ணயிக்கும் வகையில், அதிரடி திட்டத்தை இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.

உலகிலேயே அதிக சாலை விபத்துக்கள் நடைபெறும் நாடுகளில் இந்தியா முதலிடம் வகிக்கிறது. சாலை விபத்துக்களை குறைப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது. சாலை கட்டமைப்பு தரத்தை உயர்த்தினாலும், வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிகளை மீறுவதாலும் பல விபத்துக்கள் நடக்கின்றன.

இதனை மனதில் வைத்து, போக்குவரத்து விதிகளை மீறும் போக்கை குறைப்பதற்கு அதிரடி திட்டம் ஒன்றை இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம்(ஐஆர்டிஏஐ) அமைப்பு பரிந்துரை செய்துள்ளது.

இந்த புதிய பரிந்துரையின்படி,"வாகனங்களின் போக்குவரத்து விதிமீறல்கள் குறித்த தரவுகள் தேசிய தகவல் மையத்தில் சேகரிக்கப்படும். ஒவ்வொரு விதிமீறல் வகைக்கு தக்கவாறு வாகனங்களுக்கு புள்ளிகள் வழங்கப்படும். உதாரணத்திற்கு மது அருந்தி வாகனம் ஓட்டினால், வாகனத்தின் கணக்கில் 100 புள்ளிகள் சேர்க்கப்படும்.

அதுவே, விதிமீறியை தவறான இடத்தில் பார்க்கிங் செய்தால் 10 புள்ளிகள் வாகனத்திற்கான கணக்கில் சேர்க்கப்படும். இவ்வாறு ஒவ்வொரு விதிமீறலுக்கு தக்கவாறு புள்ளிகள் சேர்க்கப்பட்டு வரும்.

வாகனத்திற்கான காப்பீட்டை புதுப்பிக்கும்போது, போக்குவரத்து விதிமீறல் புள்ளிகள் அடிப்படையில் காப்பீட்டை புதுப்பிக்கும்போது வழக்கமான பிரிமீயம் தொகையுடன் சேர்த்து, விதிமீறலுக்கான கூடுதல் பிரிமீயம் நிர்ணயிக்கப்படும்.

அதாவது, 20 புள்ளிகளுக்கு குறைவாக இருந்தால் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டியிருக்காது. ஆனால், இந்த புள்ளிகளை தாண்டும்போது, புள்ளிகளுக்கு தக்கவாறு கூடுதல் பிரிமீயம் தொகை நிர்ணயிக்கப்படும்.

இருசக்கர வாகனத்திற்கு ரூ.100 முதல் ரூ.750 வரையிலும், நான்கு சக்கர வாகனங்களுக்கு ரூ.300 முதல் ரூ.1,500 வரையிலும் காப்பீட்டு பிரிமீயத்தில் கூடுதலாக கட்ட வேண்டி இருக்கும். வாகனத்தை யார் ஓட்டினாலும், போக்குவரத்து விதிமீறல்களுக்கு வாகன உரிமையாளரே பொறுப்பேற்க வேண்டும்

வாகனத்தின் காப்பீட்டை புதுப்பிக்கும்போது இந்த கூடுதல் பிரிமீயம் தொகையை சேர்த்து செலுத்த வேண்டி இருக்கும். எனவே, ஓட்டுனர் வைத்திருக்கும் வாகன உரிமையாளர்கள் இனி கவனமுடன் இருப்பதும் அவசியமாகிறது. டெல்லியின் தேசிய தலைநகர எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இந்த திட்டம் சோதனை அடிப்படையில் செயல்படுத்தவும் ஐஆர்டிஏ பரிந்துரை செய்துள்ளது.


Click it and Unblock the Notifications








