சென்னையில் இன்னுமொரு ஷோரூமை திறந்த பிரபல கார் நிறுவனம்... இந்த முறை எந்த பகுதியில் தெரியுமா?
பிரபல கார் உற்பத்தி நிறுவனம் ஒன்று தலைநகர வாசிகளை கவரும் நோக்கில் புதிதாக ஓர் ஷோரூமை சென்னையில் திறந்து வைத்திருக்கின்றது. புதிய ஷோரூம் எங்கு திறக்கப்பட்டுள்ளது. என்பது பற்றிய விரிவான தகவலை இந்த பதிவில் காணலாம், வாங்க.

பிரபல கார் உற்பத்தி நிறுவனம் ஒன்று தலைநகர வாசிகளைக் கூடுதலாகக் கவரும் வகையில் புதியதொரு ஷோரூமை சென்னை நகரத்தின் குறிப்பிட்ட ஓர் பகுதியில் திறந்து வைத்திருக்கின்றது. சொகுசு வாகன உற்பத்தி நிறுவனமான ஜீப் இந்தியா நிறுவனமே தற்போது புதிதாக ஷோரூமை திறந்திருக்கும் நிறுவனம் ஆகும்.

ஓஎம்ஆர் எனப்படும் பழைய மஹாபலிபுரம் சாலையில் அமைந்துள்ள சோழிங்கநல்லூர் பகுதியிலேயே நிறுவனம் தனது புதிய ஷோரூமை திறந்து வைத்திருக்கின்றது. விடிகே ஆட்டோமொபைல்ஸ் (VTK Automobiles) என அறியப்படும் 3எஸ் வசதிக் கொண்ட ஷோரூமிலேயே ஜீப் நிறுவனம் அதன் கார்களை விற்பனைக்காக நிறுத்தி வைத்திருக்கின்றது.

இந்த ஷோரூம் சுமார் 16,500 சதுர அடி பரப்பளவு கொண்டது. இதில், எட்டு கார்களை வரிசையாக நிறுத்தி வைக்கும் வகையில் 4,000 சதுர அடியில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. பிரமாண்ட தோற்றம் கொண்ட எஸ்யூவி கார்களை இங்கு நிறுத்தி வைத்துக் கொள்ள முடியும்.

தமிழகத்தில் ஒட்டுமொத்தமாக ஜீப் நிறுவனம் ஆறு விற்பனையகங்களை செயல்படுத்தி வருகின்றது. சேலம் (1S), கோயம்பத்தூர் (1S), திருச்சி (3S), மதுரை (1S) மற்றும் சென்னை ஆகிய முக்கிய நகர்புற பகுதிகளில் மட்டுமே நிறுவனத்தின் ஷோரூம்கள் இயங்கி வருகின்றன.

இந்த நிலையிலேயே தனது ஷோரூமின் தொடரை பலப்படுத்தும் வகையில் புதிதாக சென்னை சோழிங்நல்லூர் பகுதியில் புதிய விற்பனையகத்தை நிறுவனம் திறந்து வைத்திருக்கின்றது. ஒட்டுமொத்தமாக இந்தியா முழுவதும் 65 விற்பனையகங்கள் மற்றும் சர்வீஸ் மையங்கள் ஜீப் நிறுவனத்தின்கீழ் செயல்பட்டு வருகின்றன எனப்து குறிப்பிடத்தகுந்தது.

ஜீப் நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு இந்தியாவில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகின்றது. அண்மைக் காலங்களாகவே இந்த நிலை நாட்டில் தென்படுகின்றது. இது இந்தியர்கள் மத்தியில் சொகுசு கார்களுக்கு நல்ல டிமாண்ட் நிலவி வருவதை உறுதிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

இந்த காரணத்தை முன்னிட்டே தனது விற்பனையகங்களை அதிகரிக்கும் முயற்சியில் ஜீப் நிறுவனம் ஈடுபட்டு வருகின்றது. ஆண்டுக்கு ஆண்டு விற்பனை ஒப்பீட்டில் நிறுவனம் சராசரியாக 144 சதவீத விற்பனை வளர்ச்சியை இந்தியாவில் பெற்றிருக்கின்றது.

இந்த ஒட்டுமொத்த விற்பனை வளர்ச்சியில் தமிழ்நாடு 7 சதவீத பங்கினைக் கொண்டிருப்பது குறிப்பிடத்தகுந்தது. இதனை நிறுவனத்தின் தலைமை அதிகாரி நிபுன் மஹாஜன் அண்மையில் உறுதிப்படுத்தினார். ஜீப் நிறுவனத்தின் ரேங்லர் மற்றும் காம்பஸ் ஆகிய எஸ்யூவி ரக கார் மாடல்களுக்கு நாட்டின் செல்வந்தர்கள் மற்றும் பிரபலங்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகின்றது.

அண்மையில் நிறுவனம் உள்ளூரில் வைத்து தயாரிக்கப்பட்ட ஜீப் ரேங்லர் எஸ்யூவி காரை நாட்டில் விற்பனைக்குக் களமிறக்கியது. இந்தியாவிலேயே வைத்து கட்டமைக்கப்பட்ட ரேங்லர் எஸ்யூவி காரை கடந்த மார்ச் மாதம் 17ம் தேதி நிறுவனம் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. ரூ. 53.90 லட்சம் என்ற விலையில் ரேங்லர் எஸ்யூவி விற்பனைக்குக் கிடைத்து வருகின்றது.

இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே. ஜீப் இந்தியாவில் கார் கட்டமைப்பைத் தொடங்கி விற்பனைக்கு வந்த முதல் கார் மாடல் இதுவே ஆகும். ஜீப் ரேங்லர் எஸ்யூவி காரில் 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்ஜின் அதிகபட்சமாக 262 எச்பி மற்றும் 400 என்எம் டார்க்கை வெளியற்றும் திறன் கொண்டது. இந்த எஞ்ஜினைக் கட்டுப்படுத்துவதற்காக 8 ஸ்பீடு தானியங்கி கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








