இன்னும் ஒரு சில நாட்களில் ஓடப்போகுது... கோவா போனா கண்டிப்பா இந்த பஸ்ஸில் ஒரு தடவையாச்சும் போகணும்...
கோவாவில் எலெக்ட்ரிக் பஸ்களின் சேவை விரைவில் தொடங்கப்படவுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

கோவா மாநிலத்திற்கு எலெக்ட்ரிக் பஸ்கள் டெலிவரி செய்யப்பட்டுள்ளன. இந்த புதிய எலெக்ட்ரிக் பஸ்களின் சேவையை கடம்பா போக்குவரத்து கழகம் இன்னும் ஒரு சில நாட்களில் தொடங்கவுள்ளது. இதுகுறித்து கடம்பா போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறுகையில், ''இந்த புதிய எலெக்ட்ரிக் பஸ்களின் சோதனை ஓட்டத்தை நாங்கள் ஏற்கனவே நடத்தி விட்டோம்.

அவை நன்றாக இயங்குகின்றன. தற்போதைய நிலையில், இந்த எலெக்ட்ரிக் பஸ்களை வெர்னா தொழிற்பேட்டை பகுதியில் நிறுத்தி வைத்துள்ளோம்'' என்றனர். இந்த புதிய எலெக்ட்ரிக் பஸ்களின் சேவையை முதல் அமைச்சர் பிரமோத் சவந்த் தொடங்கி வைக்கவுள்ளார். இதற்கான நிகழ்ச்சி வரும் மார்ச் 23ம் தேதி காலை 10.30 மணிக்கு நடைபெறுகிறது.

இந்த நிகழ்ச்சியில் போக்குவரத்து துறை அமைச்சர் மவுவின் கோடின்ஹோ மற்றும் கடம்பா போக்குவரத்து கழக அதிகாரிகள் கலந்து கொள்ளவுள்ளனர். இதற்கு இன்னும் ஒரு சில நாட்களே உள்ள நிலையில், அனைத்து பஸ்களும் தற்போது தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. ஆனால் வரும் ஏப்ரல் 1ம் தேதியில் இருந்துதான் கோவாவில் இந்த எலெக்ட்ரிக் பஸ்களின் சேவை முழு வீச்சில் தொடங்கும்.

அதேபோல் எலெக்ட்ரிக் பேருந்துகளை ரீசார்ஜ் செய்வதற்கான சார்ஜிங் ஸ்டேஷன் வசதி கோவா முழுவதும் இன்னும் ஏற்படுத்தப்படவில்லை. தற்போதைய நிலையில் மார்கோவில் உள்ள கடம்பா போக்குவரத்து கழக டெப்போவில் ஒரே ஒரு சார்ஜிங் ஸ்டேஷன் மட்டுமே உள்ளது. பேருந்துகளை ரீசார்ஜ் செய்வது மற்றும் பராமரிப்பது ஆகிய பணிகளுக்கு இதுதான் முக்கியமான மையம் ஆகும்.

அதே சமயம் கோவாவின் மற்ற பகுதிகளில் சார்ஜிங் ஸ்டேஷன்களை கட்டமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. கடம்பா போக்குவரத்து கழகம் மொத்தம் 50 புதிய எலெக்ட்ரிக் பஸ்களை வாங்கவுள்ளது. இதில், தற்போது 30 எலெக்ட்ரிக் பஸ்கள் டெலிவரி செய்யப்பட்டுள்ளன. கோவாவில் காற்று மாசுபாடு பிரச்னையை குறைப்பதில் இந்த எலெக்ட்ரிக் பஸ்கள் முக்கிய பங்காற்றும்.

கோவா மட்டுமின்றி இந்தியாவின் மற்ற மாநிலங்களும் தற்போது எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவித்து வருகின்றன. எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்கும் விஷயத்தில், மற்ற மாநிலங்களுக்கு எல்லாம் வழிகாட்டியாக முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான டெல்லி அரசு திகழ்கிறது.

அங்கு எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்குபவர்களுக்கு, டெல்லி அரசின் எலெக்ட்ரிக் வாகன கொள்கையின் கீழ், மானியம் வழங்கப்பட்டு வருகிறது. அத்துடன் சார்ஜிங் ஸ்டேஷன்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு தேவையான அனைத்து முயற்சிகளையும் டெல்லி அரசு மிகவும் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.

டெல்லியின் காற்று மாசுபாடு பிரச்னைக்கு பெட்ரோல், டீசல் வாகனங்கள்தான் முக்கியமான காரணங்களில் ஒன்றாக பார்க்கப்படுகின்றன. எனவேதான் எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்கும் விஷயத்தில் டெல்லி அரசு ஆர்வம் காட்டி வருகிறது. டெல்லி தவிர, கேரளா, கர்நாடகா, தெலங்கானா, ஆந்திரா, மேற்கு வங்கம், குஜராத் ஆகிய மாநிலங்களும் எலெக்ட்ரிக் வாகனங்களை ஊக்குவித்து வருகின்றன.

அத்துடன் மத்திய அரசும் தன் பங்கிற்கு தேவையான முயற்சிகளை எடுத்து வருகிறது. இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைக்கும் விஷயத்தில் எலெக்ட்ரிக் வாகனங்கள் உதவியாக இருக்கும் என்பதால், அவற்றின் பயன்பாட்டை அதிகரிப்பதில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசும் மிகவும் ஆர்வமாக உள்ளது.
Note: Images used are for representational purpose only.


Click it and Unblock the Notifications








