புதிதாக திருமணமான இயக்குனருக்கு காரை ஆச்சரிய பரிசாக அளித்த தயாரிப்பாளர்... இந்த காரோட விலை எவ்ளோ தெரியுமா?
அண்மையில் திருமணம் செய்துகொண்ட இயக்குனரை ஆச்சரியப்படுத்தும் விதமாக திரைப்பட தயாரிப்பாளர் விலையுயர்ந்த காரை பரிசாக வழங்கியிருக்கின்றார். இதுகுறித்த கூடுதல் தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

வயகாம் 18 நிறுவனம் மற்றும் ஆண்டோ ஜோசப் தயாரிப்பில் வெளிவந்த திரைப்படம் 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'. 2020 பிப்ரவரியில் 28ம் தேதி இப்படம் திரைக்கு வந்தது. இதில் துல்கர் சல்மான், ரீத்து வர்மா, விஜய் டிவி புகழ் ரக்ஷன், நிரஞ்சனி கௌதம் மேனன் என பல முன்னணி நடிகர்கள் நடித்திருக்கின்றனர்.

ஆக்ஷன், த்ரில்லர், காதல், காமெடி என பல கலவையாக வந்திருந்த இப்படத்திற்கு தமிழ் திரையுலகில் நல்ல வரவேற்புக் கிடைத்தது. தெலுங்கிலும் இந்த படம் சூப்பர் ஹிட்டை அடித்தது. ஆம், தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் இப்படம் வெளியாகியது.

இப்படப்பிடிப்பின்போதே, படத்தின் இயக்குனரான தேசிங் பெரியசாமி மற்றும் நிரஞ்சனி இருவருக்கும் இடையில் காதல் மலர்ந்தது. இதனைத் தொடர்ந்து இரு வீட்டாரின் சம்மதத்துடன் இருவரும் மிக சமீபத்தில் திருமணம் செய்து கொண்டனர். இத்திருமண விழாவில், தமிழ் திரையுலகைச் சேர்ந்த பிரபலங்கள் பலர் நேரில் கலந்துக் கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.

இந்த நிலையிலேயே கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைப்படத்தின் தயாரிப்பாளரான ஆண்டோ புதுமண தம்பதிகளுக்கு ஆச்சரிய பரிசு ஒன்றை வழங்கியிருக்கின்றார். திரைப்படத்தின் வெற்றியைக் கொண்டாடும் விதமாகவும், புதுமண ஜோடிகளை மகிழ்விக்கும் விதமாகவும் ஃபோர்டு ஈகோஸ்போர்ட் காரை அவர் பரிசாக வழங்கியிருக்கின்றார்.

இப்பரிசு குறித்த தகவலை இயக்குநர் தேசிங் பெரியசாமி, அவரது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தின் வாயிலாக பகிர்ந்திருக்கின்றார். "மிக்க நன்றி சார். இது மிக பெரிய ஆச்சரிய பரிசு." என கூறி டுவீட் போட்டிருக்கின்றார். மார்ச் 5ம் தேதி அன்றே இந்த பதிவை அவர் பகிர்ந்திருக்கின்றார்.

ஃபோர்டு ஈகோ ஸ்போர்ட் கார் பற்றிய முக்கிய தகவல்கள்:
இயக்குநருக்கு பரிசாக வழங்கப்பட்டிருக்கும் ஃபோர்டு ஈகோஸ்போர்ட் கார், அதிக பாதுகாப்பு வசதிகள் கொண்ட காராகும். ஒட்டுமொத்தமாக ஒன்பது விதமான தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. ரூ. 7.99 லட்சம் தொடங்கி ரூ. 11,49 லட்சம் வரையிலான விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இதில் எந்த விலையுள்ள, என்ன வேரியண்டை இயக்குநர் தேசிங்கு பெரியசாமிக்கு பரிசாக பெற்றிருக்கின்றார் என்பது தெரியவில்லை.

ஜனவரி மாதம் 5ம் தேதி அன்றே இதன் 2021 வெர்ஷனை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது ஃபோர்டு நிறுவனம். ரூ. 35 ஆயிரம் விலையுர்வுடனே இக்கார் விற்பனைக்குக் கொண்டுவரப்பட்டது. இத்துடன், லேசான அப்டேட்டுகளும் இக்காரில் வழங்கப்பட்டன என்பது குறிப்பிடத்தகுந்தது.

8 இன்ச் தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆட்டோமேட்டிக் ஹெட்லேம்ப், ஸ்டார்ட்/ஸ்டாப் செய்யக்கூடிய புஷ் பட்டன், ஸ்டியரிங்க வீலில் பன்முக கன்ட்ரோல், மழை பெய்தால் தானாகவே நீரை வழிக்கும் வைப்பர்கள், ஆறு ஏர்பேக், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் மற்றும் ஃபோர்டுபாஸ் எனப்படக்கூடிய ஸ்மார்ட்போன் இணைப்பு என எக்கசக்க அம்சங்கள் இக்காரில் வழங்கப்பட்டிருக்கின்றன.

ஃபோர்டு ஈகோஸ்போர்ட் கார் 1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் எஞ்ஜின் தேர்விலே் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இதன் பெட்ரோல் எஞ்ஜின் 123 பிஎச்பி மற்றும் 150 என்எம் டார்க்கையும், டீசல் எஞ்ஜின் 100 பிஎச்பி மற்றும் 215 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறனைக் கொண்டது.

பெட்ரோல், டீசல் இரு எஞ்ஜின்களிலும் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் ஸ்டாண்டர்டு வசதியாக வழங்கப்படுகின்றது. அதேசமயம், பெட்ரோல் எஞ்ஜினில் மட்டும் 6 ஸ்பீடு தானியங்கி டார்க் கன்வெர்டர் கியர்பாக்ஸ் ஆப்ஷனாக வழங்கப்படுகின்றது.


Click it and Unblock the Notifications








