வேற லெவல் அதிரடி காட்டும் கர்நாடகா போலீஸ்... இனி யாராக இருந்தாலும் வெளியில் வர யோசிப்பாங்க... வீடியோ!
கர்நாடகா காவல்துறை வேற லெவல் நடவடிக்கையில் ஈடுபடத் தொடங்கியுள்ளது. இதுகுறித்த வெளியாகியிருக்கும் வீடியோ பற்றிய தகவலைக் கீழே காணலாம்.

கொரோனா வைரஸ் இரண்டாம் அலை நாட்டையே உலுக்கிக் கொண்டிருக்கின்றது. ஆம்புலன்ஸ் பற்றாக்குறை, படுக்கைகள் தட்டுப்பாடு, அதிகரிக்கும் உயிரிழப்புகள் என அனைத்து நிலைகளிலும் நாடு மிக மோசமான நிலைமையைச் சந்தித்து வருகின்றது.

எனவே, வைரஸ் பரவல் வேகத்தைக் குறைக்க செய்யும் விதமாக மாநில அரசுகள் சில தன்னிச்சையாக முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளன. தமிழகத்தில் தளர்வுகளற்ற ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால், அத்தியாவசிய பொருட்களின் விற்பனைக்கூட நடைபெறாத நிலை தமிழகத்தில் உருவாகியுள்ளது.

தமிழகத்தில் மட்டுமின்றி நாட்டின் வேறு சில மாநிலங்களிலும் இதே நிலையே தென்படுகின்றது. குறிப்பாக, நமது அண்டை மாநிலங்களான ஆந்திரா, கேரளா மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களில் தீவிரப்படுத்தப்பட்ட முழு ஊரடங்கு அமலில் இருக்கின்றது.

கொரோனா வைரசைக் கட்டுப்படுத்தும் விதமாக அரசுகள் மிகக் கசப்பான மற்றும் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இருந்த போதிலும், ஒரு சிலர் மட்டும் விபரீதத்தை உணராமல் வெளியில் சுற்றி திரிந்த வண்ணம் இருக்கின்றனர். அந்தவகையில், விலையுயர்ந்த காரில் சுற்றி திரிந்த இளைஞர்கள் சிலருக்கே கர்நாடகா காவல்துறை தக்க பாடம் புகட்டியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மெர்சிடிஸ் பென்ஸ் எம்எல் கிளாஸ் மற்றும் சி கிளாஸ் கார்களில் வந்தவர்களுக்கே போலீஸார் தக்க பாடம் புகட்டியிருக்கின்றனர். தகுந்த காரணம் இன்றி வெளிய வந்த காரணத்தினால் இரு விலையுயர்ந்த கார்களையும் காவல்துறையினர் பறிமுதல் செய்திருக்கின்றனர். வாகன தணிக்கையின்போதே இரு சொகுசு கார்களும் சிக்கியிருக்கின்றன.

வெளியில் வந்ததற்கான காரணத்தைக் கேட்டபோது எந்த தகுந்த காரணங்களையும் அவர்கள் கூறவில்லை என கூறப்படுகின்றது. இதையடுத்தே இரு கார்களையும் காவல்துறையினர் பறிமுதல் செய்து காவல்நிலையம் எடுத்துச் சென்றிருக்கின்றனர்.

முழு முடக்கம் அமல்படுத்தப்பட்ட முதல் நாளிலேயே கர்நாடகா காவல்துறையினர் அதிரடி நடவடிக்கையாக சுமார் 2,000 வாகனங்களை பறிமுதல் செய்திருந்தனர். விதிமீறலில் ஈடுபட்டதாகக் கூறி பலர் மீது வழக்கு பதிவும் செய்யப்பட்டது. இந்த நடவடிக்கையை அவர்கள் மிக தீவிரமாக மேற்கொண்டு வருகின்றநிலையிலும் மக்கள் பலர் அத்தியாவசியமின்றி சுற்றி திரிந்த வண்ணம் இருக்கின்றனர்.

ஆகையால், லாக்டவுண் விதிமீறல் காரணமாக செய்யப்படும் வாகன பறிமுதல் மற்றும் வழக்கு பதிவுகள் தொடர்ந்த வண்ணமே உள்ளது. இந்த நிலையிலேயே இரு விலையுயர்ந்த கார்களை போலீஸார் கொத்தாக பறிமுதல் செய்திருக்கின்றனர். இது வாகன உரிமையாளர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, காரணமின்றி சுற்றி திரிவோர் வயிற்றில் புளியையே கரைக்கத் தொடங்கியுள்ளது.
கர்நாடகாவில் கோவிட்-19 விதிகளை மீறுவோர்களுக்கு என்றே பிரத்யேக சிறை வளாகத்தை காவல்துறை உருவாக்கியுள்ளது. உரிய காரணமின்றி வெளியில் சுற்றி திரிபவர்களை போலீஸார் இந்த சிறையிலேயே அடைத்து வருகின்றனர். ஆரம்பத்தில் மன்னிப்பு மற்றும் விநோத நடவடிக்கைகளுடன் அனுப்பி வைத்த காவல்துறையினர் தற்போது கொரோனா தீவிரத்தைக் கட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்பதற்காக மிகக் கடுமையான நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
மெர்சிடிஸ் பென்ஸ் சி கிளாஸ் ரக கார்கள் இந்தியாவில் ரூ. 49.99 லட்சம் என்ற ஆரம்ப விலையில் இருந்து விற்பனைக்குக் கிடைக்கின்றன. இதேபோன்று, மெர்சிடிஸ் பென்ஸ் எம்-கிளாஸ் ரக கார்கள் ரூ. 56.74 லட்சம் என்ற ஆரம்பவிலையில் இருந்து விற்பனைக்குக் கிடைக்கின்றது. இத்தகைய விலையுயர்ந்த கார்களையே லாக்டவுண் விதிமீறல்கள் காரணத்திற்காக அதன் உரிமையாளர்கள் போலீஸாரிடத்தில் பறி கொடுத்திருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications








