கால் பந்தை போல் பல முறை உருண்ட டாடா கார்... ஆனா பயணிகளுக்கு ஒன்னுமே ஆகல... டாடா, டாடாதாங்கோ!
டாடா நிறுவனத்தின் கார் பெரும் விபத்தில் இருந்து அதன் பயணிகளைப் பாதுகாத்திருக்கின்றது. இச்சம்பவம் பற்றிய தகவலைக் கீழே காணலாம்.

டாடா நிறுவனத்தின் தயாரிப்புகள் பாதுகாப்பிற்கு பெயர்போனவை என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. முன்னதாக டாடா கார்கள் சார்ந்து அரங்கேறிய விபத்து சம்பவங்களே இதற்கு சான்று. இந்த நிலையில், டாடாவின் தயாரிப்புகள் அதீத பாதுகாப்பு திறன் கொண்டவை என்பதை நிரூபனம் செய்யக்கூடிய மற்றுமொரு புதிய சம்பவம் பற்றிய தகவல் வெளியாகியிருக்கின்றது.

இதுவும் விபத்து பற்றிய தகவலே ஆகும். டாடா நிறுவனத்தின் தயாரிப்புகளில் ஒன்றான ஹாரியர் எஸ்யூவி காரே இம்முறை பயங்கர விபத்தில் சிக்கிய வாகனம் ஆகும். இக்கார் பல முறை உருண்டு நசுங்கிய பின்னரும் பயணிகளுக்கு எந்தவித பெரிய பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை என்பது ஆச்சரியமளிக்கக் கூடிய தகவலாக இருக்கின்றது.

தன்னையும், தன் குடும்பத்தினரையும் டாடா ஹாரியர் கார் மிகப்பெரிய விபத்தில் இருந்து காப்பாற்றியிருப்பதாக அக்காரின் உரிமையாளர் சஜீவ் பல்குன்னு தெரிவித்திருக்கின்றார். இவர் வெளியிட்டிருக்கும் தகவலின் அடிப்படையிலே ஹாரியர் கார் விபத்து பற்றிய தகவல் வெளியுலகிற்கு தெரிய வந்துள்ளது.

விபத்து எப்படி நடைபெற்றது என்பது பற்றிய தகவல் தெரியவில்லை. இருப்பினும், விபத்தின் காரணமாக காரின் மேற்கூரை முற்றிலுமாக நொறுங்கியிருப்பதை நம்மால் காண முடிகின்றது. அதிவேகத்தில் காரை திருப்பியதன் காரணத்தினால் இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என யூகிக்கப்படுகின்றது.

சுமார் 5 அடி பள்ளத்தில் ஹாரியர் கவிழ்ந்திருப்பதை புகைப்படங்கள் உறுதிப்படுத்துகின்றன. விபத்தில் சிக்கிய காரை க்ரேன் வாகனத்தின் உதவியுடன் பொதுமக்கள் சிலர் மீட்டெடுத்திருக்கின்றனர். டாடா காரில் பாதுகாப்பிற்காக பல்வேறு சிறப்பு அம்சங்கள் சேர்க்கப்பட்டிருக்கன்றன.

ஆறு ஏர்பேக், ஏபிஎஸ், இபிடி, டிராக்சன் கன்ட்ரோல், இஎஸ்பி, ஹில் ஹோல்ட் அசிஸ்ட், மல்டிபிள் டிரைவ் மோட், பிரேக் டிஸ்க் வைப்பிங் கருவி, க்ரூஸ் கன்ட்ரோல், ஸ்பீடு அலர்ட், சீட் பெல்ட் ரிமைண்டர், ரோல் ஓவர் மிடிகேஷன், கார்னரிங் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல் என பல்வேறு சிறப்பு பாதுகாப்பு கருவிகள் வழங்கப்பட்டிருக்கின்றன.

இவையனைத்தும் தற்போதைய விபத்து சம்பவத்தில் இருந்து ஒட்டுமொத்த குடும்பத்தையே காப்பாற்றியிருக்கின்றது. இக்கார் தற்போது ஒற்றை எஞ்ஜின் தேர்வில் மட்டுமே விற்பனைக்குக் கிடைக்கின்றது. இது, 2 லிட்டர் 4 சிலிண்டர் ஃபியட் மல்டிஜெட் டர்போ டீசல் எஞ்ஜின் ஆகும். இது, 170 பிஎச்பி மற்றும் 350 என்எம் டார்க்கை வெளிப்படுத்தும் திறன் கொண்டது.

இந்த எஞ்ஜின் 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் 6 ஸ்பீடு டார்க் கன்வெர்டர் ஆட்டோமேட்டிக் தேர்வில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. டாடா நிறுவனம் விரைவில் டாடா சஃபாரி காரை மீண்டும் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்த இருக்கின்றது. இதனை டாடா ஹாரியர் காரின் டிசைன் தாத்பரியங்களுடன் உருவாக்கியிருப்பது குறிப்பிடத்தகுந்தது.


Click it and Unblock the Notifications








