தீவிர பரிசீலனை... இந்தியாவில் எலெக்ட்ரிக் காரை விற்பனைக்கு அறிமுகம் செய்கிறது கியா...
இந்தியாவில் எலெக்ட்ரிக் காரை விற்பனைக்கு அறிமுகம் செய்வது தொடர்பாக கியா நிறுவனம் தீவிரமாக பரிசீலனை செய்து வருகிறது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

மேம்படுத்தப்பட்ட 2021 செல்டோஸ் மற்றும் சொனெட் கார்களை கியா நிறுவனம் வெகு சமீபத்தில் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. பல்வேறு புதிய வசதிகளுடன் புதிய கியா செல்டோஸ் மற்றும் சொனெட் எஸ்யூவிகள் விற்பனைக்கு வந்துள்ளன. அத்துடன் புதிய செக்மெண்ட் ஒன்றை விரிவாக்கும் பணிகளில் ஈடுபடுவது குறித்த விருப்பத்தையும் தெரிவித்தது.

கியா இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரும், தலைமை விற்பனை மற்றும் வணிக யுக்தி அதிகாரியுமான டா-ஜின் பார்க்கும், எஸ்யூவி மற்றும் எம்பிவி செக்மெண்ட்களில் கியா நிறுவனம் கவனம் செலுத்தவுள்ளதை, சமீபத்திய பேட்டி ஒன்றில் குறிப்பிட்டிருந்தார். இதுகுறித்து அவர் கூறுகையில், ''ஏதேனும் ஒரு வகையிலான எம்பிவியை அறிமுகம் செய்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராய்ந்து வருகிறோம்.

சாத்தியக்கூறுகளை ஆராய்வதுடன் அதற்கு நாங்கள் தயாராகியும் வருகிறோம்'' என்றார். கியா நிறுவனம் தற்போதைய நிலையில் செல்டோஸ் மற்றும் சொனெட் ஆகிய எஸ்யூவி கார்களை விற்பனை செய்து வருகிறது. இதுதவிர கார்னிவல் பிரீமியம் எம்பிவி காரையும் இந்திய சந்தையில் கியா நிறுவனம் விற்பனை செய்து கொண்டுள்ளது.

இதை தொடர்ந்து கியா இந்தியா நிறுவனம் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் 7 சீட்டர் பிரீமியம் எம்பிவி கார் ஒன்றை விற்பனைக்கு அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மாருதி சுஸுகி எர்டிகா மற்றும் டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா ஆகிய எம்பிவிகளுக்கு இடையில் கியா நிறுவனத்தின் இந்த புதிய எம்பிவி நிலைநிறுத்தப்படலாம்.

இதுதவிர இந்திய சந்தையில் எலெக்ட்ரிக் கார் ஒன்றை விற்பனைக்கு அறிமுகம் செய்வது குறித்தும் கியா நிறுவனம் பரிசீலனை செய்து வருகிறது. இதுகுறித்து டா-ஜின் பார்க் கூறுகையில், ''இந்திய சந்தையில் எந்த வகையான எலெக்ட்ரிக் காரை விற்பனைக்கு அறிமுகம் செய்ய முடியும் என்பதை தற்போது நாங்கள் ஆராய்ந்து வருகிறோம்'' என்றார்.

ஆனால் இந்திய சந்தையில் எந்த எலெக்ட்ரிக் கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என்பது இன்னும் இறுதி செய்யப்படவில்லை எனவும், அதற்கான சாத்தியக்கூறுகளை கியா நிறுவனம் ஆராய்ந்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்தியா உள்பட உலகின் பல்வேறு நாடுகளிலும் தற்போது எலெக்ட்ரிக் கார்கள் வேகமாக பிரபலமடைந்து வருகின்றன.

எலெக்ட்ரிக் வாகனங்களை அறிமுகம் செய்வதற்காக உலகின் முன்னணி நிறுவனங்கள் மிகப்பெரிய அளவில் முதலீடு செய்து வருகின்றன. இந்த நேரத்தில்தான் இந்தியாவில் எலெக்ட்ரிக் காரை விற்பனைக்கு அறிமுகம் செய்வது தொடர்பாக ஆராய்ந்து வருவதாக டா-ஜின் பார்க் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து இடி ஆட்டோ செய்தி வெளியிட்டுள்ளது. இந்திய சந்தையில் தற்போது கியா நிறுவனம் விற்பனை செய்து வரும் செல்டோஸ், சொனெட், கார்னிவல் ஆகிய கார்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், அதன் எலெக்ட்ரிக் காருக்கும் இந்திய வாடிக்கையாளர்கள் அமோக ஆதரவை வழங்குவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.


Click it and Unblock the Notifications








