வாங்கிய பிறகு கார்னிவல் கார் பிடிக்கவில்லையா? பிரச்சனையே இல்லை... கியாவின் ‘திரும்ப கொடுக்கும்’ திட்டம்!
கார்னிவல் எம்பிவி காரை வாங்க திட்டமிட்டு வருபவர்களுக்காக ஓர் அட்டகாசமான திட்டத்தை இன்று (மே 26) கியா நிறுவனம் அறிவித்துள்ளது. அதனை பற்றி இந்த செய்தியில் பார்ப்போம்.

'திருப்தி உத்தரவாத திட்டம்' என்கிற பெயரில் கொண்டுவரப்பட்டுள்ள இந்த திட்டத்தின்படி, வாடிக்கையாளர்கள் கியா கார்னிவல் எம்பிவி காரை வாங்கிய பிறகு ஒருவேளை அந்த கார் அவர்களுக்கு பிடிக்கவில்லை என்றால் 30 நாட்களுக்குள் அதனை மீண்டும் டீலர்களிடமே ஒப்படைத்துவிடலாம்.

இதன் மூலம் வாடிக்கையாளர்கள் காருக்கு செலுத்திய பணத்தில் அதிகப்பட்சமாக 95 சதவீத பணத்தை திரும்ப பெற முடியும் என்று கியா தெரிவித்துள்ளது. அதாவது எக்ஸ்ஷோரூம் விலை மட்டுமின்றி, பத்திர பதிவு, நிதி உள்ளிட்டவற்றிற்காக செலுத்திய தொகைகளையும் மொத்தமாக சேர்த்து அதில் 95 சதவீதத்தை பெற்று கொள்ள முடியும்.

ஆனால் இதற்கு சில விதிமுறைகள் உள்ளன. அதாவது கார் 1,500கிமீ மேல் இயங்கி இருக்கக்கூடாது. அதேபோல் காரின் எந்தவொரு பகுதியோ அல்லது பாகமோ சேதமடைந்திருக்க கூடாது. ஆர்டிஒ அலுவலத்தில் அந்த கார்னிவல் கார் யாருடைய பெயரில் பதிவு செய்யப்பட்டு இருக்கிறதோ அவர் தான் காரை திரும்ப கொடுக்க வேண்டும்.

மேலும் காரின் மீது எந்தவொரு கடனும் இல்லை என தனக்கு பண உதவி அளித்த வங்கியிடம் இருந்து ஆட்சேபனை இல்லை சான்றிதழ் (NOC) வாங்கி வர வேண்டும். இதை எல்லாம் சரிப்பார்த்த பின்னரே கார்னிவலை டீலர் திரும்ப பெற்று கொள்வார்.

அதேநேரம் டீலர் தனது சேவைக்காக தனியாக கட்டணத்தை விதிப்பார். இந்த திட்டத்தின் மூலம், கார்னிவல் இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் எந்த அளவிற்கு வரவேற்பை பெறுகிறது? இந்த தயாரிப்பு வாகனத்தின் மீது நம்பிக்கை வைக்கலாமா? என்பது உள்ளிட்ட கேள்விகளுக்கு கியா நிறுவனத்திற்கு பதில் கிடைக்கும்.

இதுகுறித்து கியா இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் டே-ஜின் பார்க் கருத்து தெரிவிக்கையில், தயாரிப்புகள், சேவைகள் மற்றும் பிராண்ட் உடனான வாடிக்கையாளர்களின் அனுபவத்தின் மூலமாக அவர்களை கவரும் நோக்கில் புதிய லோகோ உடன் எங்களது புதிய பிராண்ட் கடந்த ஏப்ரல் மாதத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது.

'திருப்தி உத்தரவாத திட்டம்' இந்த திட்டத்தை உயிர்ப்பிப்பதற்கான முதல் படியாகும். மேலும் இது எங்கள் வாடிக்கையாளர்களுக்கு வேறுப்பட்ட கியா உரிமையாளர் அனுபவத்தை வழங்கும் விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது என கூறியுள்ளார்.

எப்படியிருந்தாலும் இந்த திட்டம் மற்ற போட்டி மாடல்களில் இருந்து கார்னிவல் எம்பிவி காரை தனித்து தெரிய வைக்கும் என்பது மட்டும் உறுதி. தென்கொரியாவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் கியா, கார்னிவல் காரை கடந்த ஆண்டு துவக்கத்தில் நடைபெற்ற 2020 ஆட்டோ எக்ஸ்போவின் மூலம் அறிமுகப்படுத்தியது.
செல்டோஸிற்கு பிறகு கியாவின் இரண்டாவது கார் மாடலாக இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட கார்னிவலை 7, 8 மற்றும் 9 என வெவ்வேறான இருக்கை தேர்வுகளில் பெற முடியும். இயக்க ஆற்றலை வழங்குவதற்கு இந்த எம்பிவி காரில் 2.2 லிட்டர் டீசல் என்ஜின் பொருத்தப்படுகிறது.


Click it and Unblock the Notifications








