பாதுகாப்பான பயணத்திற்கு உகந்த கார்... என்ன நடந்தாலும் ஒன்னுமே ஆகாது... இதோ வீடியோ ஆதாரம்...
எம்ஜி நிறுவனத்தின் இசட்எஸ் மாடல் கார் பாதுகாப்புகுறித்து செய்யப்பட்ட மோதல் பரிசோதனையில் மிகச் சிறந்த கார் என்ற நற்சான்றை பெற்றிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

எம்ஜி நிறுவனத்தின் புகழ்வாய்ந்த தயாரிப்புகளில் இசட்எஸ் எஸ்யூவி ரக காரும் ஒன்று. இந்த காரையே விரைவில் இந்தியாவில் களமிறக்க இந்நிறுவனம் திட்டமிட்டிருக்கின்றது. இன்னும் ஒரு சில மாதங்களில் இக்காரை நாட்டில் விற்பனைக்கு எதிர்பார்க்கலாம். இம்மாதிரியான சூழ்நிலையில் மக்களைக் கவர்கின்ற வகையில் இக்கார் பற்றிய ஓர் சிறப்பு தகவல் வெளி வந்திருக்கின்றது.

அது, எம்ஜி இசட்எஸ் காரின் பாதுகாப்பு பற்றிய தகவலாகும். அண்மையில் ஏசியன் என்சிஏபி அமைப்பு இக்காரை மோதல் பரிசோதனைக்கு உட்படுத்தியது. இந்த பல பரீட்சையில், தனது உறுதியான கட்டுமானத்தின் வலிமையை அது நிரூபித்திருக்கின்றது. இதன் காரணமாக ஐந்திற்கு ஐந்து நட்சத்திர ரேட்டிங்கை மோதல் பரிசோதனைக் குழுவினர் வழங்கினர்.

இதற்கு, எம்ஜி இசட்எஸ் ஓர் மிகுந்த பாதுகாப்பு திறன் கொண்ட கார் என்பதே பொருள் ஆகும். ஆகையால், எம்மாதிரியான ஆபத்தான சூழ்நிலையாக இருந்தாலும் இக்கார் அதன் பயணிகளை பாதுகாக்கும் என்பது தெரிய வந்துள்ளது. காரின் பாதுகாப்பு மற்றும் உறுதித் தன்மையை ஆய்வு செய்யும் விதமாக பன்முக ஸ்டைலில் இக்காரை ஏசியன் என்சிஏபி கிராஷ் டெஸ்ட் செய்தது.

இதன்படி, பக்கவாட்டு பகுதி, முன்பக்கம் என அனைத்து நிலைகளிலும் இக்கார் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டிருக்கின்றன. இந்த அனைத்து சோதனைகளிலும் கார் நல்ல தர சான்றையேப் பெற்றிருக்கின்றது. குறிப்பாக, பயணிகளுக்கான பாதுகாப்பு பற்றிய செய்யப்பட்ட ஆய்விலும் நல்ல தர புள்ளிகளைப் பெற்றது.

அந்தவகையில், பெரியவர்களுக்கான பாதுகாப்பில் 44.82 புள்ளிகளையும், சிறுவர்களுக்கான பாதுகாப்பில் 20.90 புள்ளிகளையும் பெற்றிருக்கின்றது. இத்தகைய அதிகபட்ச புள்ளிகளை இது பெற்றதன் காரணத்தினாலயே ஐந்திற்கு ஐந்தி நட்சத்திரங்களை கிராஷ் டெஸ்ட் குழு வழங்கியிருக்கின்றது.

தற்போது பரிசோதனையில் ஈடுபடுத்தப்பட்ட எம்ஜி இசட்எஸ் காரானது தாய்லாந்து நாட்டு சந்தைக்கான ஸ்பெக் மாடலாகும். அங்கு இருவிதமான எஞ்ஜின் தேர்வில் மட்டுமே இக்கார் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இரண்டுமே பெட்ரோல் எஞ்ஜினைக் கொண்டவை மட்டுமே ஆகும். 1.5 லிட்டர் நேட்சுரல்லி அஸ்பயர்ட் மற்றும் 1.3 லிட்டர் டர்போசார்ஜட் ஆகிய எஞ்ஜின் திறன்களிலேயே அது விற்பனைக்குக் கிடைக்கின்றது.

இந்தியாவில் எம்ஜி இசட்எஸ் கார் 2021ம் ஆண்டிலேயே எதிர்பார்க்கப்படுகின்றது. புதுப்பிக்கப்பட்ட மாடலாக இது விற்பனைக்குக் களமிறங்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இக்காரைப் போன்று அதிக பாதுகாப்பு திறன் கொண்ட கார்கள் இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கின்றன.
மஹிந்திரா எக்ஸ்யூவி 300, டாடா நெக்ஸான் மற்றும் அல்ட்ராஸ் உள்ளிட்ட சில கார்கள் ஐந்திற்கு ஐந்து பாதுகாப்பு தர ரேட்டிங்கைப் பெற்ற கார்கள் என்பது குறிப்பிடத்தகுந்தது.


Click it and Unblock the Notifications








