இவ்ளோ தரமானதா இருந்தா யாருதான் வாங்காம இருப்பா... 226 Tata Nexon EV காரை ஆர்டர் செய்த கொல்கத்தா காவல்துறை!
கொல்கத்தா காவல்துறை பயன்பாட்டிற்காக மேற்கு வங்க மாநில அரசு ஒட்டுமொத்தமாக 226 Tata Nexon EV கார்கள் வாங்கப்பட்டிருக்கின்றன. இந்த நிகழ்வுகுறித்த தகவலையும், டாடா நெக்ஸான் இவி காரின் சிறப்பு அம்சங்கள்குறித்த முக்கிய தகவலையும் இப்பதிவில் பார்க்கலாம், வாங்க.

டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனத்தின் பிரபல மின்சார கார் மடால்களில் நெக்ஸான் இவி (Nexon EV)-யும் ஒன்று. இந்தியாவின் மலிவு விலை மின்சார காராக இது இருந்தது குறிப்பிடத்தகுந்தது. அண்மையில் டாடா டிகோர் இவி (Tata Tigor EV)இன் வருகையால் நெக்ஸான் இவி சற்று காஸ்ட்லியான எலெக்ட்ரிக் காராக தென்படத் தொடங்கியிருக்கின்றது.

ஆம், டாடா நெக்ஸான் இவி-யைக் காட்டிலும் மிக மிக குறைவான விலையில் டாடா டிகோர் இவி இந்தியாவில் விற்பனைக்கு வந்திருக்கின்றது. ஆனால், இதைக் காட்டிலும் பிரீமியம் தரம் மற்றும் ரேஞ்ஜ் விஷயத்தில் அதிக சிறப்புகள் நிறைந்த வாகனமாக டாடா நெக்ஸான் இவி இருக்கின்றது.

எனவேதான் இதைவிட மலிவு விலை எலெக்ட்ரிக் கார் விற்பனைக்கு வந்திருக்கின்ற போதிலும் டாடா நெக்ஸான் இவி-க்கு இந்தியாவில் நல்ல டிமாண்ட் கிடைத்து வருகின்றது. இதை உறுதிப்படுத்தும் வகையில் தற்போது கொல்கத்தா காவல்துறையிடம் பெரிய ஆர்டர் டாடா மோட்டார்சுக்கு கிடைத்திருக்கின்றது.

காவல்துறை பயன்பாட்டிற்காக 226 அலகுகள் டாடா நெக்ஸான் இவிக்கு ஆர்டர் கொடுக்கப்பட்டிருக்கின்றது. டாடா நெக்ஸான் இவி கார் காவல்துறை பயன்பாட்டிற்காக நமது நாட்டில் வாங்கப்படுவது இது முதல் முறையல்ல. இதற்கு முன்னதாக கேரள மாநில அரசு அதன் மோட்டார் வாகன துறை (MVD) பயன்பாட்டிற்காக வாங்கியிருந்தது குறிப்பிடத்தகுந்தது.

இதைத் தொடர்ந்து, தற்போது மேற்கு வங்க மாநில அரசு கொல்கத்தா காவல்துறையினரின் பயன்பாட்டிற்காக எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்க இருக்கின்றது. இதன் வாயிலாகக் கணிசமாக மாசு வெளிப்பாட்டைக் கட்டுப்படுத்த முடியும் என மாநில அரசு நம்புகின்றது.

தற்போது வாங்கப்படும் அனைத்து மின்சார கார்களும் காவல்துறையினரின் பயன்பாட்டில் 15 ஆண்டுகளுக்கும் அதிகமாக இருக்கும் கார்களை அப்புறப்படுத்தி, அவற்றிற்கு பதிலாக புதிய டாடா நெக்ஸான் இவி-க்கள் பயன்படுத்தப்பட இருக்கின்றன. பழைய வாகனங்களினால் அதிக எரிபொருள் செலவு மற்றும் மாசு உமிழ்வு போன்ற பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன.

அவற்றைக் குறைக்கும் பொருட்டே மேற்கு வங்க மாநில அரசு இத்தகைய பெரிய ஆர்டரை டாடா மோட்டார்சுக்கு வழங்கியிருக்கின்றது. கொல்கத்தா காவல்துறையின் பல்வேறு துறைகளுக்காக நெக்ஸான் இவி வாங்கப்பட்டிருக்கின்றது. போக்குவரத்துத்துறை மற்றும் ஒயர்லெஸ் பிரிவு படையைச் சேர்ந்தவர்களின் பயன்பாட்டிற்கும் நெக்ஸான் இவி வழங்கப்பட இருக்கின்றது.

புதிய மின்சார வாகனங்களுக்காக ரூ. 8.82 கோடிகள் ஒதுக்கப்பட்டிருக்கின்றது. இதுபோன்ற மேற்கு வங்க அரசு பெருமளவில் மின் வாகனங்களை வாங்குவது இது முதல் முறையல்ல. இதற்கு முன்னதாக சில வருடங்களுக்கு முன்னர் மஹிந்திரா இ2ஓ (Mahindra e2O) எலெக்ட்ரிக் ஹேட்ச்பேக் ரக காரை அரசு வங்கியிருந்தது குறிப்பிடத்தகுந்தது.

மஹிந்திரா இ2ஓ எலெக்ட்ரிக் கார் தற்போது இந்தியாவில் விற்பனையில் இல்லை என்பது குறிப்பிடத்தகுந்தது. அதேவேலையில், நாட்டின் குறிப்பிட்ட சில பகுதிகளில் இன்றளவும் பலர் இக்காரை பயன்படுத்தி வருகின்றனர். இக்காரைக் காட்டிலும் பல மடங்கு அதிக பயன் உள்ள எலெக்ட்ரிக் காராக டாடா நெக்ஸான் இவி காட்சியளிக்கின்றது.

இக்கார் அதிகபட்சமாக 312 கிமீ தூரம் வரை ஒற்றை முழுமையான சார்ஜில் பயணிக்கும் திறன் கொண்டது. இது அராய் அமைப்பு வெளியிட்ட அதிகாரப்பூர்வ தகவல் ஆகும். இக்காரை வீடுகளில் இருக்கும் 15A சாக்கெட்டுகளில் வைத்துக்கூட சார்ஜ் செய்துகொள்ள முடியும். அவ்வாறு சார்ஜ் செய்யும்போது 8 மணி நேரங்கள் வரை முழுமையாக சார்ஜாக நெக்ஸான் இவி எடுத்துக் கொள்ளும்.

அதுவே டிசி ஃபாஸ்ட் சார்ஜிங் பாயிண்டின் வாயிலாக சார்ஜ் செய்யும் பட்சத்தில் இக்காரை வெறும் 60 நிமிடங்களில் சார்ஜ் 80 சதவீதம் வரை சார்ஜ் செய்து கொள்ள முடியும். இத்துடன், சார்ஜ் அளவு மிகக் குறைவாக இருக்கும்போது தானே ஆற்றலை மீட்டமைக்கும் வசதியும் இக்காரில் வழங்கப்பட்டிருக்கின்றது.

கொல்கத்தா காவல்துறை:
தற்போது கொல்கத்தா காவல்துறையின் பயன்பாட்டில் 4 ஆயிரத்திற்கும் அதிகமான வாகனங்கள் பயன்பாட்டில் இருக்கின்றன. இருசக்கர வாகனங்களுடன் சேர்த்து அளவிடப்பட்ட எண்ணிக்கை இதுவாகும். இதில், 200க்கும் அதிகமான வாகனங்கள் 15 ஆண்டுகளுக்கும் அதிகமான வயதுடைய வாகனங்கள் ஆகும்.

இவற்றால் மாசுபாடும் அதிகம், அரசுக்கு எரிபொருள் செலவும் அதிகம். இதனைக் குறைக்கும் பொருட்டே தற்போது டாடா நெக்ஸான் இவி காருக்கு ஆர்டர் கொடுக்கப்பட்டிருக்கின்றது. இது ஓர் அதிக பிரீமியம் தர வசதிகள் கொண்ட எலெக்ட்ரிக் வாகனம் மட்டுமல்ல, நல்ல பாதுகாப்பு அம்சங்கள் கொண்ட காராகவும் இருக்கின்றது. இத்தகைய காரணத்தினால்தான் மக்கள் தொடங்கி அரசு துறைகள் என அனைத்து பக்கங்களிலும் இக்கார் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது.


Click it and Unblock the Notifications








