கொரோனாவிற்கு மத்தியில் லம்போர்கினி கார்களை வாங்கி குவித்துள்ள இந்தியர்கள்!! அம்பலப்படுத்திய புள்ளிவிபரம்
கொரோனா வைரஸ் பரவலினால் மற்ற சொகுசு லக்சரி கார் தயாரிப்பு நிறுவனங்களின் விற்பனை கடந்த 2021 நிதியாண்டில் கணிசமாக குறைந்த உள்ள நிலையில், லம்போர்கினி நிறுவனத்தின் இந்திய விற்பனை எண்ணிக்கை மட்டும் இரட்டிப்பாகியுள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

ஃபடா (FADA) எனப்படும் ஆட்டோமொபைல் டீலர்ஸ் சங்கங்களின் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள வாகன பதிவு தரவுகளின்படி, இத்தாலியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் லம்போர்கினி 2020 ஏப்ரலில் இருந்து 2021 மார்ச் மாதம் முடிவதற்கு உள்ளாக மொத்தம் 26 கார்களை இந்தியாவில் விற்பனை செய்துள்ளது.

இது இதற்கு முந்தைய 2020 நிதியாண்டுடன் ஒப்பிடுகையில் இரட்டிப்பாகும். ஏனெனில் 2019 ஏப்ரலில் இருந்து 2020 மார்ச் 31ஆம் தேதி வரையில் 13 லம்போர்கினி கார்களே விற்பனை செய்யப்பட்டு இருந்தன. மேலும் இதன் மூலமாக சொகுசு கார் விற்பனையில் ஃபெராரி, பெண்ட்லீ உள்ளிட்ட நிறுவனங்களையும் லம்போர்கினி முந்தியுள்ளது.

மற்ற சொகுசு கார் தயாரிப்பு நிறுவனங்களை காட்டிலும் சிறப்பாக செயல்பட்டு வருவதாக லம்போர்கினி இந்தியா நிறுவனத்தின் முதன்மை அதிகாரி ஷராத் அகர்வால் இதுகுறித்து பெருமிதம் கொண்டுள்ளார். லம்போர்கினியின் இந்த 100 சதவீத முன்னேற்றத்திற்கு அதன் உருஸ் எஸ்யூவி காருக்கு கிடைத்து வரும் தீவிரமான தேவையே முக்கிய காரணமாகும்.

ஏனெனில் சூப்பர்கார்களுக்கு உண்டான செயல்திறன் மற்றும் அன்றாட பயன்பாட்டிற்கு ஏற்ற உடலமைப்பை லம்போர்கினி உருஸ் பெற்றுள்ளது. இதனாலேயே அன்றாட அலுவலக பயன்பாட்டிற்கான வாகனமாக பணக்காரர்களின் கவனம் உருஸின் பக்கம் செல்கிறது.

அதுமட்டுமின்றி எஸ்யூவி ரக தோற்றத்தில் சொகுசு காரை யாருக்குத்தான் பிடிக்காமல் இருக்கும். லம்போர்கினியின் இந்த சொகுசு எஸ்யூவி காரின் எக்ஸ்ஷோரூம் விலை ரூ.3.15 கோடியாக உள்ளது. உருஸை வாங்கும் பலர் முதல் லம்போர்கினி கார் உரிமையாளர்களாக இருப்பது கூடுதல் சிறப்பு.

உருஸ் கார்களின் விற்பனை குறித்து கருத்து தெரிவித்த ஷராத் அகர்வால், எங்களது இந்திய வணிகத்தில் உருஸ் முக்கிய மாடலாக விளங்கி வருகிறது. அதேநேரம் மற்ற சூப்பர் ஸ்போர்ட்ஸ் கார்களின் விற்பனையையும் இந்திய சந்தையில் அதிகரிக்க தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம் என்றார்.

லம்போர்கினியின் இந்திய சூப்பர் ஸ்போர்ட்ஸ் கார்கள் பிரிவில் அவெண்டேட்டார் மற்றும் ஹூராக்கன் மாடல்கள் உள்ளன. லம்போர்கினி நிறுவனம் புதியதாக தயாரிக்கும் கார்கள் முதலில் அறிமுகப்படுத்தப்படும் ஐந்து நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக உள்ளது.

இதனால் தாயக நாடான இத்தாலியில் அறிமுகப்படுத்தப்படும் லம்போர்கினி கார்கள் இந்தியாவிலும் மிக விரைவாகவே அறிமுகமாகிவிடுகின்றன. ஆனால் ஹூராக்கன் எவோ பின்சக்கர ட்ரைவ் ஸ்பைடர் மட்டும் கொரோனா பரவலால் உலகளாவிய வெளியீட்டிற்கு கிட்டத்தட்ட 1 வருடத்திற்கு பிறகே இந்தியாவில் களமிறக்கப்பட்டது.

கொரோனா முதல் அலைக்கு பிறகு தங்களது கார்களின் விற்பனை இந்தியாவில் சூடுப்பிடித்ததாக லம்போர்கினி நிறுவனம் கூறினாலும், மற்ற நிறுவனங்களை போன்று கொரோனா இரண்டாவது அலையால் லம்போர்கினி கார்களின் விற்பனையும் சரிந்தது என்பது உண்மையே.


Click it and Unblock the Notifications








