அடுத்த மாசம் விலை உயர்வது கன்ஃபார்ம்... எந்தெந்த நிறுவனங்களின் வாகனங்களின் விலை உயர போகுது தெரியுமா?
2022ம் ஆண்டு முதல் எந்தெந்த நிறுவனங்களின் வாகனங்களின் விலை உயர இருக்கின்றது என்பது பற்றிய முக்கி விபரத்தை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

புத்தாண்டு பரிசாக வாகன உற்பத்தி நிறுவனங்கள் விலை உயர்வை வழங்க இருக்கின்றன. இதுகுறித்த தகவலே அண்மைக் காலங்களாக வாகன உலகின் தலைப்பு செய்தியாக வெளியாகி வருகின்றன. தொடர்ச்சியாக முன்னணி வாகன உற்பத்தி நிறுவனங்கள் இதுகுறித்த தகவலை வெளியிட்டு வருவதனால் இதுகுறித்த செய்திகள் தலைப்பு செய்திகளாக வெளியாகி வருகின்றன.

அந்தவகையில், 2022ஆம் ஆண்டின் தொடக்கத்தில் (ஜனவரி மாதம்) எந்தெந்த நிறுவனங்கள் வாகனங்களின் விலையை உயர்த்த இருக்கின்றன என்பது பற்றிய தகவலையே இந்த பதிவில் நாம் பார்க்க இருக்கின்றோம். இதுவரை விலை உயர்வு பற்றி அறிவித்திருக்கும் அனைத்து இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகன உற்பத்தி நிறுவனங்கள் பற்றியே இந்த பதிவில் வழங்கியிருக்கின்றோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

டாடா மோட்டார்ஸ் (Tata Motors)
நாட்டின் வாகன உலகின் ஜாம்பவான் நிறுவனமான டாடா மோட்டார்ஸ், அதன் பயணிகள் வாகன பிரிவில் விற்பனைக்குக் கிடைக்கும் வாகனங்களின் விலையை உயர்த்த திட்டமிட்டிருக்கின்றது. ஏற்கனவே நிறுவனம் அதன் வணிக பிரிவில் விற்பனைக்குக் கிடைக்கும் வாகனங்களின் விலையை உயர்த்தியிருப்பது குறிப்பிடத்தகுந்தது. இதனைத் தொடர்ந்தே பயணிகள் வாகனங்களின் விலையையும் நிறுவனம் திட்டமிட்டிருக்கின்றது. ஆகையால், 2022 ஜனவரியில் டாடா கார்கள் புதிய விலையிலேயே விற்பனைக்குக் கிடைக்கும். எலெக்ட்ரிக் மற்றும் மின்சார கார்கள் அனைத்தின் விலையும் உயர இருக்கின்றது.

மாருதி சுசுகி (Maruti Suzuki)
மாருதி சுசுகி நிறுவனம் 2022ம் ஆண்டின் தொடக்கத்தில் விலை உயர்வையே அதன் வாடிக்கையாளர்களுக்கு பரிசாக வழங்க திட்டமிட்டுள்ளது. நிறுவனம் இதுகுறித்த முடிவை டிசம்பர் 2 எடுத்தது. நிறுவனத்தின் இந்த முடிவு மாருதி சுசுகி வாகன பிரியர்கள் மற்றும் அந்நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது. எத்தனை சதவீதம் விலை உயர்வு செய்யப்பட இருக்கின்றது என்பது பற்றிய தகவல் தெரிய வரவில்லை.

டொயோட்டா (Toyota)
ஜப்பான் நாட்டை மையமாகக் கொண்டு இயங்கும் டொயோட்டா நிறுவனமும் அடுத்த ஆண்டு முதல் அதன் தயாரிப்புகளை புதிய விலையில் விற்பனைச் செய்ய இருப்பதாக அறிவித்திருக்கின்றது. நிறுவனத்தின் தயாரிப்புகள் 2022 ஜனவரி 1ம் தேதி முதலிலிருந்தே புதிய உயர்த்தப்பட்ட விலையில் விற்பனைக்குக் கிடைக்க இருக்கின்றது. இதுகுறித்த அறிவிப்பை நிறுவனம் ஏற்கனவே அறிவித்துவிட்டது குறிப்பிடத்தகுந்தது.

ஆடி (Audi)
சொகுசு வாகன உற்பத்தி நிறுவனமான ஆடி, ஏற்கனவே மிக அதிக விலையில் விற்பனைக்குக் கிடைத்து வரும் தனது ஆடம்பர கார்களை கூடுதல் அதிக விலையில் விற்பனைச் செய்ய இருக்கின்றது. 2022 ஜனவரி மாதத்தில் இருந்து சொகுசு கார்கள் புதிய உயர்த்தப்பட்ட விலையில் விற்கப்பட இருக்ககின்றன. 3 சதவீத உயர்வில் நிறுவனத்தின் தயாரிப்புகள் விற்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஹீரோ மோட்டோகார்ப் (Hero MotoCorp)
இந்தியாவின் முன்னணி இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமாக ஹீரோ மோட்டேகார்ப் இருக்கின்றது. இந்நிறுவனம் அடுத்த ஆண்டு தொடக்கத்தை புதிய விலை உயர்வுடன் தொடங்க இருக்கின்றது. நிறுவனம் அதன் முன்னணி ஸ்கூட்டர் மற்றும் மோட்டார்சைக்கிள்களின் விலையை உயர்த்த இருக்கின்றது.

டுகாட்டி (Ducati)
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தைத் தொடர்ந்து இந்தியாவில் இருசக்கர வாகனங்களின் விலையை உயர்த்த இருப்பதாக அறிவித்திருக்கும் மற்றுமொரு நிறுவனமாக டுகாட்டி இருக்கின்றது. இந்நிறுவனம் அதன் தயாரிப்புகளின் விலையை ஜனவரி 1ம் தேதியில் இருந்து உயர்த்த இருப்பதாக அறிவித்திருக்கின்றது.

கவாஸாகி (Kawasaki)
பிரீமியம் தர இருசக்கர வாகன உற்பத்தியில் ஈடுபட்டு வரும் கவாஸாகி நிறுவனம் மிக விரைவில் அதன் இருசக்கர வாகனங்களின் விலையை உயர்த்த இருக்கின்றது. ஆம், ஜனவரி 1ம் தேதி முதலில் இருந்து இந்நிறுவனத்தின் தயாரிப்புகளும் உயர இருக்கின்றன. மிக மிக சமீபத்திலேயே இதுகுறித்த தகவலை நிறுவனம் அறிவித்தது.

கடந்த சில காலமாகவே வாகன உற்பத்தி நிறுவனங்கள் விலையுயர்வு பற்றிய தகவலை வெளியிட்டு வருகின்றன. இதற்கு உள்ளீட்டு செலவுகள் தொடர்ச்சியாக அதிகரித்து வருவதே முக்கிய காரணமாக இருக்கின்றது. செமி கன்டக்டர் சிப் பற்றாக்குறை, மூலப் பொருட்களின் விலை உயர்வு, சரக்குக் கொள்கலன்கள் கிடைக்காத காரணம், அதிக கப்பல் கட்டணங்கள் உள்ளிட்ட பல காரணங்களால் வாகன உலகம் பல்வேறு நெருக்கடிகளுக்கு ஆளாகி வருகின்றது.

இதன் விளைவாகவே விலை உயர்வு பற்றிய தகவல்கள் தொடர்ச்சியாக வெளி வந்த வண்ணம் இருக்கின்றன. மேலே பார்த்த நிறுவனங்கள் மட்டுமின்றி இன்னும் சில நிறுவனங்களும் அதன் வாகனங்களின் விலையை உயர்த்த இருக்கின்றன. அந்தவகையில், சிட்ரோன், ஸ்கோடா மற்றும் ஃபோக்ஸ்வேகன் உள்ளிட்ட நிறுவனங்களும் விலை உயர்வை செய்ய இருக்கின்றன.


Click it and Unblock the Notifications








