ரோமியோக்களே உஷார்! பெண்கள்கிட்ட வாலாட்டினா வாழ்நாள் முழுசும் வாகனம் ஓட்ட முடியாது... அதிரடி உத்தரவிட்ட மாநிலம்
நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்களைத் தடுக்க புதிய விதி ஒன்றை மாநில அரசு அறிவித்திருக்கின்றது. இது என்ன என்பதை இப்பதிவில் காணலாம்.

பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கின்றன. குறிப்பாக, முன்பைக் காட்டிலும் கடந்த சில ஆண்டுகளாக பாலியல் சார்ந்த குற்ற சம்பவங்கள் அதிக எண்ணிக்கையில் அரங்கேறிய வண்ணம் இருக்கின்றன. இதனை வேறோடு அழிக்க வேண்டும் என்பதில் மத்திய, மாநில அரசுகள் திவீரமாக செயல்பட்டு வருகின்றன.

இருப்பினும், பெண்களுக்கு எதிரான அத்துமீறல்கள் குறைந்தபாடில்லை. இந்நிலையிலேயே அனைத்து விதமான குற்றச் சம்வங்களையும் கட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்பதற்காக விநோதமான விதி ஒன்றை ஓர் மாநில அரசு உருவாக்கியிருக்கின்றது.

அதாவது, ஓட்டுநர் உரிமம் பெற வேண்டும் என்றால் நன்னடத்தைச் சான்று (character certificate) சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. மத்திய பிரதேச மாநிலமே இந்த விநோத விதியை தனது மாநிலத்தில் கொண்டு வந்திருக்கின்றது. மாநிலத்தில் அரங்கேறி வரும் குற்றச் சம்பவங்களை களையெடுக்கும் விதமாக இந்த புதிய விதியை மாநிலத்தின் முதலமைச்சர் சிஷ்ராஜ் சிங் சவுஹன் அறிவித்தார்.

குறிப்பாக, பெண்களுக்கு எதிரான குற்றத்தை மேற்கொள்வோர்க்கு எந்தவொரு கருணையுமின்றி அவர்களைத் தண்டிக்க வேண்டும் மற்றும் ஓட்டுநர் உரிமம் வழங்கக் கூடாது என கூறியிருக்கின்றார். இந்த புதிய விதி புதிதாக ஓட்டுநர் உரிமத்திற்கு விண்ணப்பிப்போர்க்கு மட்டுமின்றி ஏற்கனவே ஓட்டுநர் உரிமத்தை வைத்திருப்போருக்கும் பொருந்தும் என கூறப்பட்டுள்ளது.

ஆகையால், பெண்களுக்கு எதிரான குற்ற சம்பவத்தில் ஓர் நபர் ஈடுபடுவரானால் அவரின் ஓட்டுநர் உரிமம் உடனடியாக ரத்து செய்யப்படும். தொடர்ந்து எதிர்காலத்தில் உரிமத்திற்கு விண்ணிப்பிக்கவே முடியாத வகையிலும் நடவடிக்கை எடுக்கப்பட இருக்கின்றது. இதற்கான புதிய அறிவிப்பான மாநிலத்தின் அனைத்து போக்குவரத்து வட்டார அலுவலகம் மற்றும் காவல்நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கேரக்டர் சான்று:
கேரக்டர் சான்று என்பது உள்ளூர் காவல்நிலையத்தின் வாயிலாக வழங்கக் கூடிய ஒன்று. இதற்காக விண்ணப்பிக்கும்போது, விண்ணப்பதாரர் மீது ஏதேனும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதா அல்லது நபர் குற்றப் பின்னணி உடையவரா என காவலர்கள் அலசி ஆராய்ந்து பின்னர் சான்று வழங்குபவர். இந்த சான்றில், விண்ணப்பதாரர் நல்லவர் என்ற அங்கீகாரம் கிடைத்தால் மட்டுமே அவருக்கு ஓட்டுநர் உரிமத்தை ஆர்டிஓ அலுவலர்கள் வழங்குவர்.

காவலர்கள் வழங்கும் சான்றில் விண்ணப்பதாரர் தகுதியற்றவர் என்பது கண்டறியப்பட்டால் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும். ஆனால், இந்த புதிய விதி பெரியளவில் தாக்கத்தை ஏற்படுத்தாது என சமூக நல ஆர்வலரான ரோலி சிவஹரே கூறுகின்றார். மேலும், இந்த புதிய விதி காவல்துறையினர் சிலர் ஊழல் மேற்கொள்ள வழிவகுக்கும் எனவும் சிலர் கருத்து தெரிவித்திருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications








