ப்ளீஸ் கொஞ்சம் ஹெல்ப் பண்ணுங்க... ஹோட்டல் துறைக்கு அரசு திடீர் வேண்டுகோள்... என்னனு தெரியுமா?
ஹோட்டல் துறைக்கு மாநில அரசு வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவில் தற்போது எலெக்ட்ரிக் வாகனங்கள் வேகமாக பிரபலமடைந்து வருகின்றன. கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைப்பதற்காகவும், பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களால் ஏற்பட்டு வரும் காற்று மாசுபாடு பிரச்னையில் இருந்து தப்புவதற்காகவும் எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை ஒன்றிய அரசும், பல்வேறு மாநில அரசுகளும் ஊக்குவித்து வருகின்றன.

இதற்காக பல்வேறு மாநில அரசுகள் எலெக்ட்ரிக் வாகன கொள்கையை வெளியிட்டுள்ளன. இதன் கீழ் எலெக்ட்ரிக் வாகனங்களின் உற்பத்தி மற்றும் விற்பனை ஊக்குவிக்கப்பட்டு வருகிறது. அதாவது எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மானியம், எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான சார்ஜிங் ஸ்டேஷன்களை ஏற்படுத்துதல் போன்ற பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தங்களது மாநிலத்திற்கு என பிரத்யேகமாக எலெக்ட்ரிக் வாகன கொள்கையை வெளியிட்டுள்ள அரசுகளில் மஹாராஷ்டிராவும் ஒன்று. மஹாராஷ்டிரா மாநில அரசின் எலெக்ட்ரிக் வாகன கொள்கை கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது. கடந்த ஜூலை 23ம் தேதியில் இருந்து மஹாராஷ்டிரா மாநில அரசின் எலெக்ட்ரிக் வாகன கொள்கை அமலுக்கு கொண்டு வரப்பட்டது.

இந்த கொள்கையின் கீழ், மஹாராஷ்டிரா மாநில சாலை போக்குவரத்து கழகத்தின் 15 சதவீத பேருந்துகளை வரும் 2025ம் ஆண்டிற்குள் பூஜ்ஜிய உமிழ்வு வாகனங்களாக மாற்றம் செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த சூழலில் மஹாராஷ்டிரா மாநிலத்தின் ஹோட்டல் துறைக்கு அம்மாநில அரசு தற்போது வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளது.

மஹாராஷ்டிரா மாநில அரசின் எலெக்ட்ரிக் வாகன கொள்கையை சிறப்பாக அமல்படுத்துவதற்கு உதவி செய்ய முன்வரும்படி ஹோட்டல் துறைக்கு இந்த வேண்டுகோளில் கேட்டு கொள்ளப்பட்டுள்ளது. மஹாராஷ்டிரா மாநிலத்தின் சுற்றுலா மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சரான ஆதித்யா உத்தவ் தாக்கரே இது தொடர்பான வேண்டுகோளை விடுத்துள்ளார்.

எலெக்ட்ரிக் வாகன கொள்கையை முழுமையாக அமலுக்கு கொண்டு வர வேண்டியது மிகவும் முக்கியமானது என தெரிவித்துள்ள ஆதித்யா உத்தவ் தாக்கரே, தனியார் துறையின் பங்களிப்பு இல்லாமல் இதனை வெற்றிகரமாக செயல்படுத்த முடியாது எனவும் கூறியுள்ளார். மஹாராஷ்டிரா மாநிலத்தின் ஹோட்டல் துறையினருடன் ஆதித்யா உத்தவ் தாக்கரே கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டார்.

அப்போது மஹாராஷ்டிரா மாநிலத்தின் எலெக்ட்ரிக் வாகன கொள்கையை சிறப்பாக அமல்படுத்துவதற்கு உதவும்படி அவர்களிடம் கேட்டு கொள்ளப்பட்டது. முன்னதாக அம்மாநில ஹோட்டல் துறை தங்களது வாகனங்களை 100 சதவீதம் எலெக்ட்ரிக் வாகனங்களாக மாற்றுவதற்கு உறுதியளித்துள்ளது. இதுதவிர மற்றொரு முக்கியமான வாக்குறுதியையும் ஹோட்டல் துறையினர் வழங்கியுள்ளனர்.

இதன்படி அனைத்து ஹோட்டல்கள் மற்றும் இது தொடர்பான வர்த்தக அலுவலகங்களில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான சார்ஜிங் ஸ்டேஷன்களை அமைப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். இதன் மூலம் மஹாராஷ்டிரா மாநிலத்தில் எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாடு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நாங்கள் மேலே கூறியுள்ள பேருந்துகளுக்கான இலக்கு தவிர, எலெக்ட்ரிக் வாகன கொள்கையின் கீழ், இன்னும் பல்வேறு இலக்குகளை மஹாராஷ்டிரா மாநில அரசு நிர்ணயம் செய்துள்ளது. இதன்படி வரும் 2025ம் ஆண்டிற்குள், மஹாராஷ்டிரா மாநிலத்தில் பதிவு செய்யப்படும் ஒட்டுமொத்த புதிய வாகனங்களின் எண்ணிக்கையில், எலெக்ட்ரிக் வாகனங்களின் பங்களிப்பு 10 சதவீதமாக இருக்க வேண்டும் எனவும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த இலக்குகளை அடைவதற்கான முயற்சிகளை மஹாராஷ்டிரா மாநில அரசு தற்போது தீவிரப்படுத்தியுள்ளது. மஹாராஷ்டிரா மட்டுமல்லாது இன்னும் பல்வேறு மாநில அரசுகளும் எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை தீவிரமாக ஊக்குவித்து வருகின்றன. இதில், தலைநகர் டெல்லி மிகவும் முக்கியமானது.

அங்கு பெட்ரோல், டீசல் வாகனங்களால் காற்று மிக கடுமையாக மாசடைந்துள்ள நிலையில், இந்த பிரச்னையை குறைப்பதற்காக எலெக்ட்ரிக் வாகனங்கள் அதிக அளவில் ஊக்குவிக்கப்பட்டு வருகின்றன. தலைநகர் டெல்லியை இந்தியாவின் எலெக்ட்ரிக் வாகனங்களின் தலைநகராகவும் மாற்றுவதற்கான முயற்சிகள் தற்போது மேற்கொள்ளப்படுகின்றன.

இந்தியாவிலேயே டெல்லி மாநில அரசின் எலெக்ட்ரிக் வாகன கொள்கை, மிகவும் சிறப்பான எலெக்ட்ரிக் வாகன கொள்கைகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. மாநில அரசுகள் மட்டுமல்லாது, ஒன்றிய அரசும் ஃபேம் இந்தியா திட்டத்தின் கீழ் எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவித்து வருகிறது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








