இனி எந்த விவசாயியும் பாதிக்க கூடாது... விவசாயிகளுக்கான தரமான திட்டத்தை அறிவித்தது மஹிந்திரா!
இக்கட்டான சூழ்நிலையில் இருந்து விவசாயிகளைப் பாதுகாக்கும் வகையில் தரமான திட்டத்தை மஹிந்திரா நிறுவனம் அறிவித்திருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் தகவலைக் கீழே காணலாம்.

கொரோனா வைரஸ் இரண்டாம் அலை பரவல் குழந்தைகள், சிறியவர்கள், பெரியவர்கள், இளைஞர்கள் என வயது வித்தியாசம் பாராமல் அனைவரையும் வாரி சுருட்டி எடுத்துச் சென்றுக் கொண்டிருக்கின்றது. இதனால், நாளுக்கு நாள் இந்தியாவில் கொரோனாவால் ஏற்படும் உயிர் பலியின் எண்ணிக்கை புதிய உச்சத்தைத் தொட்டு வருகின்றது.

இந்த மாதிரியான சூழ்நிலையில் விவசாயிகளுக்கான பாதுகாப்பு திட்டத்தை மஹிந்திரா நிறுவனம் அறிவித்துள்ளது. இதுகுறித்து கடந்த ஞாயிறன்று வெளியிட்ட அறிக்கையில், தனது டிராக்டர்களை புதிதாக வாங்கும் விவசாயி வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக காப்பீடு திட்டத்தை வழங்க இருப்பதாக கூறியுள்ளது.

முன்னதாக, முதல் அலை வைரஸ் பரவலின்போதும் இச்சிறப்பு திட்டத்தை நிறுவனம் அறிமுகப்படுத்தியது. தற்போது மீண்டும் காப்பீடு திட்டத்தை நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. மீண்டும் கொரோனா வைரஸ் பரவல் மிக தீவிரமாகி பரவி வருகின்ற வேலையில் இச்சலுகை மீண்டும் நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்டிருக்கின்றது.

'எம்-ப்ரொடெக்ட் கோவிட் பிளான்' எனும் திட்டத்தின் வாயிலாக இக்காப்பீட்டு திட்டத்தை நிறுவனம் நாட்டில் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் வாயிலாக சுமார் 1 லட்சம் ரூபாய் வரையிலான பலனை விவசாயிகள் பெற்றுக் கொள்ள முடியும்.

மிக இக்கட்டான மற்றும் சோதனைக் காலத்தில் இத்திட்டம் நிச்சயம் விவசாயிகளுக்கு பலனளிக்கும் என நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது. இத்திட்டம் விவசாயிகளை மட்டுமின்றி அவரது குடும்பத்தினரையும் பாதுகாக்க உதவும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

தொடர்ந்து, கடன் பெற்ற விவசாயி ஏதேனும் ஓர் காரணத்தால் உயிரிழக்க நேரிட்டால் அவரின் வாகனத்திற்கான கடன் முழுமையாக ரத்து செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 'மஹிந்திர கடன் சுரக்ஷா' திட்டத்தின் வாயிலாக இதனை செய்ய நிறுவனம் திட்டமிட்டிருக்கின்றது.

கொரோனா வைரஸ் பரவல் மிக தீவிரமாக காணப்படுகின்றது. இதனால், வாகன உற்பத்தி மற்றும் விற்பனை முழுமையாக பாதிப்படைந்திருக்கின்றது. இந்த மாதிரியான சூழ்நிலையிலும் வாகன நிறுவனங்கள் இந்தியாவிற்கு உதவிக் கரங்களை நீட்டி வருகின்றது.

நிவாரண நிதி, மருத்துவ உபகரண உதவி மற்றும் ஆக்சிஜன் தயாரிப்பில் ஈடுபடுதல் உள்ளிட்ட நடவடிக்கைகளை நிறுவனங்கள் மேற்கொண்டு வருகின்றன. இத்துடன், அரசுக்கும் உதவும் வகையில் எண்ணற்ற சிறப்பு உதவிகளை வாகன சார்ந்து இயங்கும் நிறுவனங்கள் செய்து வருகின்றன.


Click it and Unblock the Notifications








