காரை இப்போ வாங்கிக்கோங்க, காசு பொறுமையா கட்டுங்க... மஹிந்திராவின் சிறப்பு திட்டம் அறிமுகம்...
கோவிட்-19 காலத்தில் விற்பனையை அதிகரிக்க சிறப்பு திட்டம் ஒன்றை மஹிந்திரா அறிமுகம் செய்துள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலைக் கீழே காணலாம்.

இந்தியாவை மையமாகக் கொண்டு இயங்கும் பிரபல கார் உற்பத்தி நிறுவனமான மஹிந்திரா, இந்தியர்கள் மத்தியில் வரவேற்பை பெற வேண்டும் என்பதற்காக சிறப்பு திட்டம் ஒன்றை அறிவித்துள்ளது. அதவாது, காரை முன்னரே வழங்கிவிட்டு பின்னர் அதற்கான தொகையை மாத தவணையாக பெறும் திட்டத்தை நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

தற்போது கோவிட்-19 வைரஸ் இரண்டாம் அலை பரவல் இந்தியாவில் கோர தாண்டவமாட்டம் ஆடி வருகின்றது. இதனால், நாட்டின் பல்வேறு பகுதிகளில் முழு முடக்கம் அல்லது பகுதி நேர முடக்கம் அமலுக்குக் கொண்டு வரப்பட்டிருக்கின்றது. இந்த நிலையால் வாகன விற்பனை மிகக் கடுமையாகச் சரிந்துள்ளது.

எனவே விற்பனையைத் தூக்கி நிறுத்தும் நோக்கில் மஹிந்திரா நிறுவனம் இந்த சிறப்பு திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. 'இப்போ வாங்கிக்கோங்க, அப்புறமா பணம் கட்டுங்க' (own now, pay later) எனும் திட்டத்தை இதற்காக மஹிந்திரா அறிமுகப்படுத்தியுள்ளது.

இத்திட்டத்தின்கீழ் மஹிந்திரா வாகனத்தை வாங்கும் வாடிக்கையாளர்கள் 90 நாட்களுக்கு பிறகு இஎம்ஐ-க்கான தொகையைச் செலுத்தினால் போதும். அதாவது, வாங்கிய நாளில் இருந்து 90 நாட்களுக்கு பின்னர் காருக்கான மாத தவணையைச் செலுத்தினால் போதும். இத்திட்டம் நிறுவனத்தின் அனைத்து தயாரிப்புகளுக்கும் பொருந்தும் என கூறப்படுகின்றது.

ஆகையால், நிறுவனத்தின் எந்த தயாரிப்பின்மீது உங்களுக்கு விருப்பம் இருக்கின்றதோ அதை சுலப மாத தவணை திட்டத்தின்கீழ் நீங்கள் வாங்கலாம். இது வணிக பிரிவில் விற்பனைக்குக் கிடைக்கும் வாகனங்களுக்கும் பொருந்தும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

பல தரப்பட்ட வாடிக்கையாளர்களைக் கவரும் நோக்கில் இந்த திட்டத்தை மஹிந்திரா நாட்டில் அறிவித்திருக்கின்றது. தொடர்ந்து, மாதத் தவணையில் கேஷ்பேக் மற்றும் கவர்ச்சிகரமான வட்டி விகிதங்கள் உள்ளிட்ட சலுகைகளையும் மஹிந்திரா தற்போது அறிவித்துள்ளது.

இத்திட்டம் குறித்த மேலும் தகவல்களை அறிந்துகொள்ள அல்லது இதன்கீழ் வாகனங்களை வாங்க விரும்பினால் தங்களின் அதிகாரப்பூர்வ வலைதள பக்கத்தை அணுக மஹிந்திரா அறிவுறுத்தியுள்ளது. இல்லையெனில் ஷோரூம்களுக்கு விசிட் கொடுக்கலாம் என்றும் அது கூறியுள்ளது.

கடந்த 2021 மே மாத வாகன விற்பனை நிலவரம் தற்போது வெளி வந்த வண்ணம் இருக்கின்றன. இதன்படி, மஹிந்திரா நிறுவனம் கடந்த மாதம் கடும் விற்பனைச் சரிவைச் சந்திருப்பது தெரிய வந்துள்ளது. நிறுவனம், 2020 மே மாதத்தைக் காட்டிலும் 56 சதவீதம் விற்பனை வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது.

8,004 யூனிட் வாகனங்களை மட்டுமே மஹிந்திரா கடந்த மாதம் உள்ளூர் சந்தையில் விற்பனைச் செய்திருக்கின்றது. இதற்கு முந்தைய மாதமான ஏப்ரல் மாதத்தில் இந்நிறுவனம் 18,285 யூனிட் வாகனங்களை விற்பனைச் செய்திருப்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த திடீர் விற்பனை சரிவிற்கு நாட்டையே புரட்டி போட்டு வரும் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை பரவலே முக்கிய காரணம் ஆகும்.

இந்த நிலையிலேயே விற்பனையை அதிகரிக்கச் செய்யும் நோக்கில் மஹிந்திரா நிறுவனம் சிறப்பு திட்டமான, இப்போது வாங்குங்கள், பொறுமையாக தொகையை செலுத்துங்கள் எனும் திட்டத்தை நாட்டில் அறிமுகப்படுத்தியுள்ளது. இது இந்தியர்கள் நல்ல வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


Click it and Unblock the Notifications








