20 வருடங்களுக்கு பிறகும் விற்பனையில் கெத்து காட்டும் மஹிந்திரா பொலிரோ... சேல்ஸ் எங்கயோ போயிருச்சு...
மஹிந்திரா நிறுவனத்தின் பொலிரோ கடந்த மார்ச் மாதம் விற்பனையில் சிறப்பான வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

மஹிந்திரா நிறுவனம் பொலிரோ காரை கடந்த 2000ம் ஆண்டில் இருந்து விற்பனை செய்து வருகிறது. கடந்த இரண்டு தசாப்தங்களாக மஹிந்திரா பொலிரோவின் விற்பனை மிகவும் சிறப்பாக உள்ளது. பொலிரோவும், ஸ்கார்பியோவும் ஒவ்வொரு மாதமும் மஹிந்திரா நிறுவனத்திற்கு சிறப்பான விற்பனை எண்ணிக்கையை ஈட்டி தந்து கொண்டுள்ளன. கடந்த மார்ச் மாதமும் அந்த காட்சிகள் மாறவில்லை.

மஹிந்திரா நிறுவனம் கடந்த மார்ச் மாதம் இந்தியாவில் 16,643 கார்களை விற்பனை செய்துள்ளது. இதன் மூலம் கடந்த மார்ச் மாதம் இந்தியாவில் அதிக கார்களை விற்பனை செய்த நிறுவனங்களின் பட்டியலில், மஹிந்திரா நிறுவனம் ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளது. அதே சமயம் கடந்த 2020ம் ஆண்டு மார்ச் மாதம் மஹிந்திரா நிறுவனம் வெறும் 3,171 கார்களை மட்டுமே விற்பனை செய்திருந்தது.

இதன் மூலம் 2020ம் ஆண்டு மார்ச் மாதத்துடன் ஒப்பிடுகையில், 2021ம் ஆண்டு மார்ச் மாதம் 425 சதவீத வளர்ச்சியையும் மஹிந்திரா பதிவு செய்துள்ளது. அதேபோல் நடப்பாண்டு பிப்ரவரி மாதத்துடன் ஒப்பிட்டாலும், மஹிந்திரா நிறுவனம் 8.2 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. ஏனெனில் நடப்பாண்டு பிப்ரவரி மாதம் மஹிந்திரா நிறுவனம் 15,380 கார்களை மட்டுமே விற்பனை செய்திருந்தது.

அதே நேரத்தில் மஹிந்திரா நிறுவனத்தின் பொலிரோ கடந்த மார்ச் மாதம் 328 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. மஹிந்திரா நிறுவனம் கடந்த மார்ச் மாதம் 8,905 பொலிரோ கார்களை விற்பனை செய்து அசத்தியுள்ளது. ஆனால் கடந்த 2020ம் ஆண்டு மார்ச் மாதத்தில் இந்த எண்ணிக்கை வெறும் 2,080 ஆக மட்டும்தான் இருந்தது.

மஹிந்திரா பொலிரோவின் விற்பனை எண்ணிக்கையை நடப்பாண்டு பிப்ரவரி மாதத்துடன் ஒப்பிட்டாலும், மிக சிறப்பான வளர்ச்சியை காண முடிகிறது. நடப்பாண்டு பிப்ரவரி மாதம் மஹிந்திரா நிறுவனம் 4,843 பொலிரோ கார்களை மட்டுமே விற்பனை செய்திருந்த நிலையில், 84 சதவீத வளர்ச்சி பதிவு செய்யப்பட்டுள்ளது.

மஹிந்திரா நிறுவனம் விற்பனையில் சிறப்பாக செயல்பட்டு வரும் நிலையில், செமி கண்டக்டர்கள் பற்றாக்குறை பிரச்னையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. செல்போன், லேப்டாப்கள் ஆகியவற்றுக்கான தேவை உயர்வு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் செமி கண்டக்டர்களுக்கு தற்போது உலகளவில் பெரிய பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

எனவே உலகின் முன்னணி வாகன உற்பத்தி நிறுவனங்கள் பலவும் பாதிக்கப்பட்டுள்ளன. மஹிந்திரா நிறுவனத்தை பொறுத்தவரை, இந்த பிரச்னையால் புதிய தலைமுறை தார் எஸ்யூவியின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக புதிய தலைமுறை தார் எஸ்யூவிக்கான காத்திருப்பு காலம் அதிகமாக இருந்து வருகிறது.

செமி கண்டக்டர்கள் நவீன கார்களின் மூளையாக கருதப்படுகின்றன. அதற்கு ஏற்பட்டுள்ள பற்றாக்குறையால், உலகின் பல்வேறு நிறுவனங்களும் உற்பத்தியை குறைத்தல், தொழிற்சாலைகளை தற்காலிகமாக மூடுதல் உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. கார்களின் விலை உயர்விற்கும் இந்த பிரச்னை ஒரு காரணமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








