எக்ஸ்யூவி400 என்ற பெயரில் மஹிந்திரா எலக்ட்ரிக் எஸ்யூவி காரா!! 2023இல் விற்பனைக்கு வரவுள்ளதாம்!
மஹிந்திரா நிறுவனம் தற்சமயம் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்த ஏகப்பட்ட புதிய கார்களின் வடிவமைப்பு பணிகளில் ஈடுப்பட்டு வருகிறது. அடுத்த ஐந்து ஆண்டிற்குள் அறிமுகப்படுத்தவுள்ள கார்களை ஏற்கனவே திட்டமிட்டுவிட்டது என்றுதான் நினைக்கிறோம்.

இந்த புதிய வாகனங்களில் புதிய பிரிவுகளுக்கானவை மட்டுமல்லாமல், ஏற்கனவே விற்பனையில் இருக்கும் மாடல்களின் ஆயுட்காலத்தை அதிகரிக்கும் வகையில் அவற்றில் கொண்டுவரப்படும் புதிய தலைமுறைகளும் அடங்குகின்றன. இவற்றின் மூலம் இந்திய சந்தையில் தனது பங்கை அதிகரிக்க வேண்டும் என்பது மஹிந்திராவின் விருப்பமாகும்.

புதிய பிரிவுகளுக்கான மஹிந்திராவின் புதிய வாகனங்கள் என்றால் அவற்றில் எலக்ட்ரிக் கார்களும் அடங்குகின்றன. ஏனெனில் மஹிந்திரா சமீபத்திய ஆட்டோ எக்ஸ்போ கண்காட்சிகளில் அதன் எலக்ட்ரிக் கார் கான்செப்ட்களை காட்சிப்படுத்தி இருந்தது. மஹிந்திரா திட்டமிட்டுள்ளதன்படி நடந்தால் அடுத்த 5 ஆண்டுகளில் 13 புதிய மஹிந்திரா கார்கள் விற்பனைக்கு வரவுள்ளன.

இதில் கிட்டத்தட்ட 8 மாடல்கள் எலக்ட்ரிக் ஆகும். விற்பனையில் இருக்கும் மஹிந்திரா கேயூவி நெக்ஸ்ட் மாடலின் எலக்ட்ரிக் வெர்சனில் இருந்து இந்த லிஸ்ட் ஆரம்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் சந்தையில் அறிமுகமான எக்ஸ்யூவி700 மாடலின் எலக்ட்ரிக் வெர்சனும் இன்னும் சில ஆண்டுகளில் விற்பனைக்கு வரவுள்ளது.

இந்த நிலையில் தற்போது, மஹிந்திரா பிராண்டில் இருந்து விற்பனைக்கு வரவுள்ள எலக்ட்ரிக் காம்பெக்ட் எஸ்யூவி கார் எக்ஸ்யூவி400 என அழைக்கப்படலாம் என சமீபத்திய பேட்டி ஒன்றில் மஹிந்திரா க்ரூப்பின் ஆட்டோ & பண்ணை பிரிவின் நிர்வாக இயக்குனர் ராஜேஷ் ஜெஜூரிகர் தெரிவித்துள்ளார். இருப்பினும் இந்த பெயர் இன்னமும் இறுதி செய்யப்படவில்லை எனவும், ஆதலால் எக்ஸ்யூவி400 என்ற பெயர் இல்லாமல் போவதற்கும் வாய்ப்புள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.

இவரது கூற்றை வைத்து பார்க்கும்போது, எக்ஸ்யூவி400 என்பதை தற்போதைக்கு, உருவாக்கப்படும் இந்த எலக்ட்ரிக் காம்பெக்ட் எஸ்யூவிக்கு குறியீட்டு பெயராக மஹிந்திரா பயன்படுத்தி கொண்டிருக்கலாம். மஹிந்திரா எக்ஸ்யூவி400 ஆனது கேயூவி நெக்ஸ்ட் மற்றும் எக்ஸ்யூவி700 மாடல்களின் எலக்ட்ரிக் வெர்சன்களுக்கு இடையில் அறிமுகப்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

பெயரை வைத்தே இது விற்பனையில் உள்ள எக்ஸ்யூவி300 காம்பெக்ட் எஸ்யூவியின் எலக்ட்ரிக் வெர்சன் என்பதை தெளிவாக அறிய முடிகிறது. மஹிந்திரா ஏற்கனவே கடந்த 2020 ஆட்டோ எக்ஸ்போவில் இ-எக்ஸ்யூவி300 என்ற கிட்டத்தட்ட தயாரிப்பு பணிகள் அனைத்தையும் நிறைவு செய்த நிலையில் எலக்ட்ரிக் காம்பெக்ட் எஸ்யூவி மாடல் ஒன்றை நிறுத்தி வைத்திருந்தது.

ஒருவேளை எக்ஸ்யூவி400 என்ற பெயரில் எலக்ட்ரிக் நடுத்தர-அளவு எஸ்யூவி கார் கொண்டுவரப்பட்டால், அது 4.3 மீட்டர்கள் நீளமானதாக இருக்கும். தோற்றத்தில் எக்ஸ்யூவி300-ஐ காட்டிலும் நிச்சயமாக பெரியதாக இருக்கும். ஆனால் சமீபத்தில் விற்பனை நிறுத்தப்பட்ட எக்ஸ்யூவி500 எஸ்யூவியை காட்டிலும் சற்று சிறியதாக காட்சியளிக்கும்.

எஸ்204 என்கிற குறியீட்டு பெயரால் அழைக்கப்பட்டு வந்த எக்ஸ்யூவி500 கார்களை ஃபோர்டு நிறுவனத்துடனான கூட்டணியில் மஹிந்திரா உருவாக்கி வந்தது. ஃபோர்டு இந்திய சந்தையை விட்டு வெளியேறுவதாக சில மாதங்களுக்கு முன் அறிவித்ததை தொடர்ந்து சில நாட்களுக்கு பிறகு எக்ஸ்யூவி500 கார்களின் விற்பனை நிறுத்தி கொள்ளப்பட்டது. இதற்கு மாற்றாகவே எக்ஸ்யூவி700 கொண்டுவரப்பட்டுள்ளது.

சரி மீண்டும் மஹிந்திராவின் எலக்ட்ரிக் காம்பெக்ட் எஸ்யூவி கார் விஷயத்திற்கு வருவோம். மெஸ்மா (MESMA) என சுருக்கமாக அழைக்கப்படும் மஹிந்திரா எலக்ட்ரிக் அளவிடக்கூடிய மற்றும் மாடுலர் கட்டமைப்பின் அடிப்படையில் வடிவமைக்கப்படும் இந்த எலக்ட்ரிக் காம்பெக்ட் எஸ்யூவி கார் மஹிந்திரா பிராண்டில் இருந்து முதலாவதாக வெளிவரவுள்ள எலக்ட்ரிக் கார்களுள் ஒன்றாக இருக்கும்.

எக்ஸ்யூவி400 அல்லது இகேயூவி300 என அழைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படும் இந்த மஹிந்திரா எலக்ட்ரிக் கார் சந்தையில் விற்பனைக்கு வருவதற்குள் எப்படியிருந்தாலும் 2023ஆம் வருடம் வந்துவிடும். தோற்றத்தில் வழக்கமான எக்ஸ்யூவி300 உடன் ஒப்பிடுகையில் சில வேறுப்பாடுகளை கொண்டிருக்கும் என்பது உறுதி.

இரு விதமான பேட்டரி தேர்வுகளுடன் இந்த எலக்ட்ரிக் காரினை மஹிந்திரா வடிவமைக்கலாம். இதில் ஒன்று நேரடியாக டாடா நெக்ஸான் இவி-ஐ எதிர்கொள்ளும் வகையில் இருக்கும். மற்றொன்றை அதிக திறன் கொண்ட பேட்டரிகளுடன் அதிக ரேஞ்சை வழங்கக்கூடியதாக எதிர்பார்க்கலாம். இருப்பினும் மஹிந்திரா இகேயூவி300க்கு டாடா நெக்ஸான் தான் நேரடி போட்டி மாடலாக இருக்கும்.


Click it and Unblock the Notifications








