மஹிந்திரா மின்சார கார்களின் அறிமுகம் எப்போது?.. நீண்ட நாட்களாக எதிர்பார்த்த தகவல் வெளியானது!!
மஹிந்திரா இகேயூவி100 மற்றும் இஎக்ஸ்யூவி300 ஆகிய மின்சார கார்களின் அறிமுகம் எப்போது என்கிற தகவல் இணையத்தில் வெளியாகியுள்ளது. இதுகுறித்த கூடுதல் முக்கிய விபரங்களை இப்பதிவில் காணலாம்.

மஹிந்திரா நிறுவனத்தின் மிக முக்கியமான தயாரிப்புகளில் கேயூவி100 மற்றும் எக்ஸ்யூவி300 கார்களும் அடங்கும். இந்த இரு மாடல்களிலேயே தனது மின்சார காரை நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது.

ஆமாங்க, தற்போது எரிபொருள் எஞ்ஜின் கொண்ட தேர்வில் மட்டுமே விற்பனைக்குக் கிடைக்கும் கேயூவி100 மற்றும் எக்ஸ்யூவி300 ஆகிய மாடல்களை மின்சார வெர்ஷனிலும் விரைவில் விற்பனைக்குக் கொண்டு வர இருக்கிறது, மஹிந்திரா. இது எப்போது நடைபெறும் என்கின்ற தகவலே தற்போது வெளியாகியுள்ளது.

அதாவது, இகேயூவி100 மற்றும் இஎக்ஸ்யூவி300 என்ற பெயர்களில் உருவாகியிருக்கும் மின்சார கார்களின் அறிமுகம் எப்போது என்ற தகவல்கள் இணையத்தின் வாயிலாக வெளி வந்திருக்கின்றன. வரும் 2022ம் ஆண்டின் தொடக்கத்தில் அல்லது மத்திக்குள் இரு மின்சார கார்களும் அறிமுகமாக இருப்பதாக தற்போது வெளியாகியிருக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்த தகவலை கார்வேல் ஆங்கில செய்தி தளம் உறுதிப்படுத்தியுள்ளது. ஆனால், இதுகுறித்த எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலையும் மஹிந்திரா வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது. அதேசமயம், அறிக்கை வாயிலாக மிக விரைவில் இரு மின்சார கார்களின் அறிமுகம்குறித்த தகவலை நிறுவனம் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மஹிந்திரா நிறுவனம் இகேயூவி100 மற்றும் இஎக்ஸ்யூவி300 ஆகிய இரு கார்களையும் முதல் முறையாக இந்தியாவில் கடந்த 2020ம் ஆண்டில் நடைபெற்ற ஆட்டோ எக்ஸ்போவிலேயே காட்சிப்படுத்தியது. இதில், இகேயூவி100 மின்சார எஸ்யூவி கார் ரூ. 8.25 லட்சம் என்ற பட்ஜெட் விலையில் விற்பனைக்கு வர இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆகையால், இஎக்ஸ்யூவி 300 காரைக் காட்டிலும் இகேயூவி100 காருக்கு இந்தியாவில் அதிக எதிர்பார்ப்பு நிலவி வருகின்றது. இந்த மாதிரியான சூழ்நிலையிலேயே இரு கார்களின் அறிமுகம் குறித்த தகவல் இணையத்தின் வாயிலாக கசிந்திருக்கின்றது.

தற்போது வரை இந்தியாவில் மிக குறைந்த விலையில் விற்பனைக்குக் கிடைக்கும் மின்சார காராக நெக்ஸான் இவி இருக்கின்றது. இதற்கு டஃப் கொடுக்கும் வகையிலேயே மஹிந்திரா இகேயூவி100 இந்திய வர இருக்கின்றது. இக்காரில் 40கிலோவாட் திறன் கொண்ட மின் மோட்டாரே இடம் பெற இருக்கின்றது.

இதற்கு தேவையான மின்சார திறனை 15.9kWh லித்தியம் அயன் பேட்டரி வழங்கும். இப்பேட்டரியை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 120கிமீ தூரம் வரை பயணிக்க முடியுமாம். இந்த தகவல் ஒட்டுமொத்த மின் வாகன ஆர்வலர்களையும் கவரும் வகையில் அமைந்துள்ளது.

இதுபோன்ற இன்னும் பல சுவாரஷ்யமான அம்சங்கள் இக்காரில் இடம்பெற இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், அவை குறித்த துள்ளியமான தகவல் இதுவரை வெளியாகவில்லை. இதேபோன்று இஎக்ஸ்யூவி300 மின்சார கார்குறித்த முக்கிய தகவல்களும் ரகசியம் காக்கப்பட்டு வருகின்றன. இவை அனைத்தும் அறிமுகத்திற்கும் முன்னர் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


Click it and Unblock the Notifications








