கடன்ல கார் வாங்க போறீங்களா? வாகன லோன்களுக்கு சிறப்பு சலுகைகள் அறிவிப்பு! வாடிக்கையாளர்களை கவர Mahindra அதிரடி!
கடனில் காரை வாங்குவோருக்கு சிறப்பு சலுகை வழங்க இருப்பதாக பிரபல கார் உற்பத்தி நிறுவனமான மஹிந்திரா (Mahindra) அறிவித்துள்ளது. நிறுவனத்தின் சலுகைக் குறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

பிரபல கார் உற்பத்தி நிறுவனமான மஹிந்திரா (Mahindra) வரும் பண்டிகைக் காலத்தில் மக்களை தங்களின் தயாரிப்புகளின் பக்கம் ஈர்க்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றது. இதன் அடிப்படையில் புதிய வாகனங்களை வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகளை வழங்க இருப்பதாக அறிவித்திருக்கின்றது.

தொடர்ந்து, மேலும் சிறப்பு சலுகையாக கடனில் வாகனங்களை வாங்குவோர்க்கு கூடுதல் சிறப்பு சலுகைகளை நிறுவனம் அறிவித்திருக்கின்றது. 'சுப் உத்சவ்' (Shubh Utsav) எனும் பெயரில் வாகன கடன்களுக்கான சலுகை அறிவிக்கப்பட்டிருக்கின்றது. இந்த திட்டம் வரும் நவம்பர் மாதம் இறுதி வரை செயல்பாட்டில் இருக்கும் என நிறுவனம் தெரிவித்திருக்கின்றது.

சலுகை பற்றிய விபரம்:
சுப் உத்சவ் பிரத்யேகமாக கடனில் புதிய வாகனத்தை வாங்கும் வாடிக்கையாளர்களுக்காகவே அறிமுகம் செய்யப்பட்டிருக்கின்றது. ஏழு வருடம் வரை இஎம்ஐ திட்டம், 50 சதவீதம் புராசஸிங் கட்டணம் தள்ளுபடி, 100 சதவீதம் கடன் மற்றும் எஸ்யூவி கார்களுக்கு 7.35 சதவீதம் வட்டி உள்ளிட்ட சலுகைகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன.

இந்த கடன் சலுகையானது பயணிகள் வாகனங்களுக்கு மட்டும் என நினைத்துக் கொள்ள வேண்டாம். மஹிந்திராவின் வர்த்தக வாகனங்களுக்கும் இது பொருந்தும். ஆம், ட்ரக், மினி வேன் மற்றும் டிராக்டர் ஆகிய வாகனங்களை கடன் திட்டத்தில் வாங்க விரும்பும் வாடிக்கையாளர்களுக்கும் சுப் உத்சவ் சலுகை வழங்கப்பட இருக்கின்றது.

இந்த சிறப்பு கடன் சலுகை திட்டத்தை தனது மற்றுமொரு அங்கமான 'மஹிந்திரா ஃபைனான்ஸ்' (Mahindra Finance) நிறுவனத்தின் வாயிலாக வழங்க இருப்பதாக மஹிந்திரா நிறுவனம் தெரிவித்திருக்கின்றது. மஹிந்திரா ஃபைனான்ஸ் ஓர் நிதி நிறுவனம் ஆகும். இது பன்முக கடன் திட்டங்களை வழங்கி வருவது குறிப்பிடத்தகுந்தது.

மஹிந்திரா நிறுவனம், அண்மையில் எக்ஸ்யூவி700 காரை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. இந்த காருக்கு இந்தியர்கள் மத்தியில் மிக அமோகமான வரவேற்பு நிலவி வருகின்றது. இக்காருக்கான புக்கிங் பணிகள் தொடங்கப்பட்ட வெறும் 2 நாட்களில் 50 ஆயிரம் யூனிட்டுகளுக்கான புக்கிங்கைப் பெற்றது.

மிக தெளிவாகக் கூற வேண்டுமானால் புக்கிங் தொடங்கிய முதல் நாள் முதல் ஒரு மணி நேரத்திற்கு உள்ளாக (57 நிமிடங்களுக்குள்) 25 ஆயிரம் யூனிட்டுகளுக்கான புக்கிங்கையும், இரண்டாம் நாள் 2 மணி நேரம் 3 நிமிடங்களுக்குள் மற்றுமொரு 25 ஆயிரம் யூனிட்டுகளுக்ககான புக்கிங்கையும் பெற்றது.

இந்திய வாகன சந்தை வரலாற்றிலேயே புதிய சாதனை படைக்கும் வகையில் இந்த புக்கிங் பதிவுகள் அமைந்தன. மஹிந்திரா எக்ஸ்யூவி 700 ஓர் பிரீமியம் தர காராகும். இந்த கார் ஐந்திருக்கை மற்றும் ஏழு இருக்கை தேர்வில் கிடைக்கும். இத்துடன், அதிநவீன தொழில்நுட்ப வசதியான அடாஸ் அசிஸ்டன்ட் வசதி வழங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, ஸ்மார்ட் கதவு பிடிகள், இன்டலிஜென்ட் காக்பிட், ஸ்கைரூஃப் வசதி, துள்ளியமான பார்வை திறனை வழங்கக் கூடிய எல்இடி ஹெட்லேம்ப் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களுடன் எக்ஸ்யூவி 700 அறிமுகமாகியுள்ளது.

இந்த மாதிரியான அதிக சிறப்பு வாய்ந்த கார் மற்றும் பிற வாகனங்களின் பக்கம் வாடிக்கையாளர்களைக் கவரும் பொருட்டே சுப் உத்சவ் எனும் கடன்களுக்கான சிறப்பு சலுகை திட்டத்தை மஹிந்திரா அறிமுகப்படுத்தியுள்ளது. மஹிந்திரா நேற்றை தினம் ஒரே நாளில் மூன்று புதிய டிராக்டர்களை நாட்டில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது.

யுவோ டெக்-ப்ளஸ் (Yuvo Tech+) எனும் டிராக்டர் வரிசையிலேயே 3 புதிய டிராக்டர்கள் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டிருக்கின்றன. யுவோ டெக்-ப்ளஸ் 275 (Yuvo Tech+ 275), யுவோ டெக்-ப்ளஸ் 405 (Yuvo Tech+ 405) மற்றும் யுவோ டெக்-ப்ளஸ் 415 (Yuvo Tech+ 415) ஆகிய மாடல் டிராக்டர்களே நாட்டில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கின்றது. இது நாட்டின் உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்திஸ்கர், பிஹார், ஜார்கண்ட் மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களில் மட்டுமே முதல் கட்டமாக விற்பனைக்கு வந்திருக்கின்றது.


Click it and Unblock the Notifications








