மஹிந்திரா கார்களின் விலைகள் ரூ.30,000 வரையில் அதிகரிப்பு- முதல்முறையாக விலையுயர்வை பெற்ற பொலிரோ நியோ
குறிப்பிட்ட மஹிந்திரா கார்களின் விலைகள் அதிரடியாக ரூ.30,000 வரையில் உயர்த்தப்பட்டுள்ளன. இதுகுறித்த கூடுதல் விபரங்களை தொடர்ந்து பார்க்கலாம்.

வருடத்திற்கு வருடம் கணிசமாக அதிகரித்து வரும் வாகன தயாரிப்பு பாகங்களின் விலைகளினால் ஆட்டோமொபைல் நிறுவனங்கள் அவற்றின் கார்களின் விலைகளை அவ்வப்போது உயர்த்துவது வழக்கம். இந்த வகையில் தான் தற்போது இந்தியாவின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனங்களுள் ஒன்றாக விளங்கும் மஹிந்திரா அதன் குறிப்பிட்ட சில கார்களின் விலைகளை உயர்த்தியுள்ளது.

இந்த வகையில் விலை உயர்வை பெற்றுள்ள மஹிந்திரா மராஸ்ஸோ எம்பிவி கார் ஏழு மற்றும் எட்டு இருக்கை தேர்வுகளில் விற்பனைக்கு கிடைக்கிறது. அதேநேரம் எம்2, எம்4 ப்ளஸ் மற்றும் எம்6 ப்ளஸ் என்ற மூன்று விதமான வேரியண்ட்களில் இந்த எம்பிவி காரை வாங்கலாம்.

இதில் ஆரம்ப நிலை எம்2 வேரியண்ட்டின் விலை குறைந்தப்பட்சமாக ரூ.12,000 உயர்த்தப்பட்டுள்ளது. மறுபக்கம் எம்4 ப்ளஸ் வேரியண்ட்டின் விலை ரூ.13,000மும், எம்6 ப்ளஸ் வேரியண்ட்டின் விலை ரூ.14,000மும் அதிகரிக்கப்பட்டுள்ளன. இந்த விலை அதிகரிப்பிற்கு முன்னர் மராஸ்ஸோ எம்பிவி காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.12.41 லட்சத்தில் இருந்து ரூ.14.43 லட்சம் வரையில் நிர்ணயிக்கப்பட்டு இருந்தன.

சமீபத்தில் மஹிந்திரா பிராண்டில் இருந்து களமிறக்கப்பட்ட பொலிரோ நியோ தனது முதல் விலை உயர்வை அறிமுகத்திற்கு பிறகு பெற்றுள்ளது. பொலிரோ நியோ வேரியண்ட்களின் விலைகள் ரூ.28,000-இல் இருந்து ரூ.30,000 வரையில் வேரியண்ட்களை பொறுத்து உயர்த்தப்பட்டுள்ளன.

மஹிந்திரா நிறுவனம் மற்ற அனைத்து கார்களையும் விட பொலிரோ நியோவின் விலையினை தான் அதிகமாக (ரூ.30,000 வரையில்) தற்போது அதிகரித்துள்ளது. முன்பு விற்பனையில் இருந்த டியூவி300 மாடலின் ஃபேஸ்லிஃப்ட் வெர்சனாக பொலிரோ நியோ என்கிற பெயரில் கொண்டுவரப்பட்டுள்ள இந்த புதிய மஹிந்திரா எஸ்யூவி வாகனத்தில் 1.5 லிட்டர், டீசல் என்ஜின் பொருத்தப்படுகிறது.

அதிகப்பட்சமாக 100 பிஎச்பி மற்றும் 260 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜின் உடன் 5-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் இணைக்கப்படுகிறது. பொலிரோ நியோவின் அறிமுக விலைகள் ரூ.8.48 லட்சத்தில் இருந்து ரூ.10.69 லட்சம் வரையில் நிர்ணயிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்த வரிசையில் மூன்றாவதாக விலை உயர்வை பெற்றுள்ள மஹிந்திரா வாகனம், இந்தியர்கள் மத்தியில் பிரபலமான ஸ்கார்பியோ எஸ்யூவி ஆகும். இந்திய சந்தையில் எஸ்3 ப்ளஸ், எஸ்5, எஸ்7, எஸ்9 மற்றும் எஸ்11 என்ற ஐந்து விதமான ட்ரிம் நிலைகளில் இந்த எஸ்யூவி கார் விற்பனை செய்யப்படுகிறது.

இவற்றின் விலைகள் ரூ.18,000-இல் இருந்து ரூ.22,000 வரையில் அதிகரிக்கப்பட்டுள்ளன. பிஎஸ்6-க்கு இணக்கமான 2.2 லிட்டர் எம்ஹாவ்க் டீசல் என்ஜின் தேர்வில் மட்டுமே தற்போதைக்கு விற்பனைக்கு கிடைக்கும் இந்த நம்பகமான மஹிந்திரா வாகனத்தின் விலைகள் இந்த விலை உயர்வுக்கு முன் ரூ.12.66 லட்சத்தில் இருந்து ரூ.17.47 லட்சம் வரையில் இருந்தன.

மஹிந்திரா நிறுவனம் நடப்பு 2021ஆம் ஆண்டில் கொண்டுவரும் நான்காவது விலை அதிகரிப்பு இதுவாகும். மராஸ்ஸோ எம்பிவி, பொலிரோ நியோ மற்றும் ஸ்கார்பியோ என்ற மூன்று மாடல்களில் மட்டும் தற்போதைக்கு கொண்டுவரப்பட்டுள்ள இந்த விலை உயர்வு இந்த செப்டம்பர் மாதத்தில் இருந்து அமலுக்கு வருகிறது.

மஹிந்திரா பிராண்டில் இருந்து அடுத்ததாக எக்ஸ்யூவி700 விற்பனைக்கு வரவுள்ளது. எக்ஸ்யூவி500 எஸ்யூவி மாடலின் அடுத்த தலைமுறை வெர்சனாக பார்க்கப்படும் இது வருகிற அக்டோபர் மாதத்தில் இருந்து விற்பனைக்கு கொண்டுவரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில் சமீபத்தில் இந்த புதிய எஸ்யூவி காருக்கு வழங்கப்பட உள்ள 5 நிறத்தேர்வுகளை மஹிந்திரா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இந்த ஐந்து விதமான நிறங்களில் சிவப்பு, மிட்நைட் கருப்பு, எவரெஸ்ட்டின் வெள்ளை, எலக்ட்ரிக் நீலம் மற்றும் கவர்ச்சிக்கரமான சில்வர் என்பவை அடங்குகின்றன.

புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி700 மிக நீளமான வேரியண்ட்கள் லிஸ்ட்டை பெற்றுவரவுள்ளதாக இதுவரையில் நமக்கு கிடைத்துள்ள செய்திகள் கூறுகின்றன. மொத்தம் 34 விதமான ட்ரிம் நிலைகளில் இந்த எஸ்யூவி வாகனம் விற்பனை செய்யப்பட உள்ளதாம். என்ஜின் தேர்வுகளாக இதில் 2.0 லிட்டர், டர்போ-பெட்ரோல் மற்றும் 2.2 லிட்டர் டீசல் என்ஜின்கள் வழங்கப்பட உள்ளன.


Click it and Unblock the Notifications








