மஹிந்திரா எக்ஸ்யூவி700 எஸ்யூவிக்கு பிரத்யேக இணையப் பக்கம் அறிமுகம்... விருப்பப் பதிவு செய்யவும் வாய்ப்பு!
பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி700 எஸ்யூவிக்கு பிரத்யேக இணையப் பக்கம் திறக்கப்பட்டுள்ளது. இந்த புத்தம் புதிய எஸ்யூவியை வாங்க விருப்பம் உள்ளோர், இந்த பக்கத்தில் பதிவு செய்வதற்கான வாய்ப்பும் வழங்கப்பட்டுள்ளது.

நம் நாட்டின் எஸ்யூவி ஸ்பெஷலிஸ்ட் என்ற பெயர் பெற்ற மஹிந்திரா நிறுவனம் தனது எஸ்யூவி தயாரிப்பு பொறியியல் திறனை அடுத்தக் கட்டத்திற்கு எடுத்தச் செல்ல இருக்கிறது. இதற்காக, மிகச் சிறந்த தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய புத்தம் புதிய எஸ்யூவி மாடலை உருவாக்கி இருக்கிறது.

பல்வேறு நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் இந்த புதிய 7 சீட்டர் எஸ்யூவியை மஹிந்திரா உருவாக்கி இருக்கிறது. W601 என்ற குறியீட்டுப் பெயரில் உருவாக்கப்பட்ட இந்த புதிய மாடலானது எக்ஸ்யூவி700 என்ற பெயரில் சந்தைக்கு வர இருக்கிறது.

இந்த புதிய எக்ஸ்யூவி700 எஸ்யூவிக்காக புதிய இணையப் பக்கத்தை மஹிந்திரா அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த புதிய எஸ்யூவியை வாங்க விரும்புவோர் இந்த இணையப் பக்கத்தில் தங்களது விருப்பத்தை பதிவு செய்து கொள்ளும் வாய்ப்பு கொடுக்கப்பட்டு இருக்கிறது.

புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி700 எஸ்யூவியில் 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் மற்றும் 2.2 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வுகளில் எதிர்பார்க்கப்படுகிறது. இதனுடன் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளில் விற்பனைக்கு வர இருக்கிறது. ஆல் வீல் டிரைவ் சிஸ்டமும் டாப் வேரியண்ட்டுகளில் கொடுக்கப்படும்.

இந்த புதிய எஸ்யூவியில் லெவல்-1 ஆட்டோனாமஸ் டிரைவிங் தொழில்நுட்பம் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. அதாவது, நெடுஞ்சாலைகளில் செல்லும்போது அடாப்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல் தொழில்நுட்பத்துடன், சாலையில் உள்ள போக்குவரத்து மற்றும் தடைகளை கணித்து தானியங்கி முறையில் இயங்கும் வசதியும் இந்த எஸ்யூவியில் இடம்பெற இருக்கிறது.

தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், கீ லெஸ் என்ட்ரி, க்ளைமேட் கன்ட்ரோல் ஏசி சிஸ்டம், புஷ் பட்டன் ஸ்டார்ட் உள்ளிட்ட வசதிகளுடன் கனெக்டெட் கார் தொழில்நுட்பமும் வழங்கப்படும்.

ஏர்பேக்குகள், முன்புற, பின்புறத்திற்கு பார்க்கிங் சென்சார்கள், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல் போன்ற பல நவீன பாதுகாப்பு தொழில்நுட்ப வசதிகளும் இடம்பெற்றிருக்கும்.

வரும் செப்டம்பர் மாதம் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது. அதாவது, பண்டிகை காலத்திற்கு புதிய கார் வாங்க திட்டமிடுவோருக்கு சிறந்த தேர்வாக இருக்கும். புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி700 எஸ்யூவி கார் எம்ஜி ஹெக்டர் ப்ளஸ், டாடா சஃபாரி மற்றும் விரைவில் வர இருக்கும் புதிய ஹூண்டாய் அல்கஸார் எஸ்யூவி மாடல்களுக்கு போட்டியாக இருக்கும்.

இதனிடையே, புதிய எக்ஸ்யூவி700 எஸ்யூவி விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட உடன் எக்ஸ்யூவி500 எஸ்யூவியின் விற்பனை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படும் என்று மஹிந்திரா அறிவித்துள்ளது. அதேநேரத்தில், இதனை 5 சீட்டர் மாடலாக கொண்டு வருவதற்கான வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.


Click it and Unblock the Notifications








