மராஸ்ஸோ, கேயூவி100 கார்களை கழற்றிவிட மஹிந்திரா முடிவு?
விற்பனை எதிர்பார்த்த அளவு இல்லாத மராஸ்ஸோ மற்றும் கேயூவி100 ஆகிய கார் மாடல்களை விற்பனையில் இருந்து விலக்குவதற்கு மஹிந்திரா நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக செய்தி வெளியாகி இருக்கிறது.

சந்தைப் போட்டி அதிகரித்துள்ளதை கருத்தில்கொண்டு புத்தம் புதிய கார் மாடல்களை மஹிந்திரா நிறுவனம் அறிமுகம் செய்ய உள்ளது. டிசைன், தொழில்நுட்ப அம்சங்களில் சிறப்பானதாகவும், சரியான விலையில் வரும் என்பதால் வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில், புதிய கார் மாடல்களை கொண்டு வருவது மட்டுமின்றி, விற்பனையில் சோபிக்காமல் இருந்து வரும் கார் மாடல்களையும் கழற்றி விட மஹிந்திரா திட்டமிட்டுள்ளது.

அந்த வகையில், மராஸ்ஸோ எம்பிவி காரையும், கேயூவி100 எஸ்யூவியையும் விற்பனையில் இருந்து விலக்க மஹிந்திரா முடிவு செய்துள்ளதாக ஆட்டோ கார் இந்தியா தள செய்தி தெரிவிக்கிறது.

டொயோட்டா இன்னோவா மற்றும் மாருதி எர்டிகா கார்களுக்கு இடையிலான ரகத்தில் போதுமான இடவசதி மற்றும் சிறப்பம்சங்களுடன் மஹிந்திரா மராஸ்ஸோ கார் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு வரை விற்பனையில் தாக்குப்பிடித்து வந்த மராஸ்ஸோ காரின் விற்பனை கடந்த சில மாதங்களாக மிக மோசமாக பதிவாகி வருகிறது.

அதாவது, கடந்த நான்கு மாதங்களில் 711 மராஸ்ஸோ கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டுள்ளது. எதிர்பார்த்த அளவு விற்பனை இல்லாத நிலையில், மராஸ்ஸோ காரை விற்பனையில் இருந்து கழற்றி விட மஹிந்திரா முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

அதேபோன்று, கேயூவி100 எஸ்யூவியும் விற்பனையில் எதிர்பார்ப்பை பதிவு செய்யவில்லை. எனவே, இந்த காரும் விற்பனையில் இருந்து நீக்கப்பட உள்ளதாக அந்த செய்தி தெரிவிக்கிறது. அதாவது, கடந்த நான்கு மாதங்களாக வெறும 21 கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டுள்ளன.

இதனால், இரண்டு கார்களுக்கும் கல்தா கொடுக்க மஹிந்திரா திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. எனினும், புதிய மாடல்களுடன் தனது வர்த்தகத்தை வலுவாக கொண்டு செல்வதற்கான திட்டங்களையும் வகுத்து செயல்பட்டு வருகிறது.


Click it and Unblock the Notifications








