மின்சார வாகனங்கள் தயாரிப்புக்காக ரூ.3,000 கோடி... போட்டியாளர்களை மிரள வைக்கும் மஹிந்திரா!
சந்தையில் முன்னிலை பெறுவதற்காக, மின்சார வாகன துறையில் பல ஆயிரம் கோடியை முதலீடு செய்ய மஹிந்திரா திட்டமிட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் தொடர்ந்து பார்க்கலாம்.

இந்திய எலெக்ட்ரிக் வாகன சந்தையில் மஹிந்திரா முன்னோடி நிறுவனங்களில் ஒன்றாக இருந்து வருகிறது. மின்சார வாகனங்களுக்கான சந்தை துளியும் இல்லாத நேரத்தில், துணிச்சலாக பல முடிவுகளையும், முதலீடுகளையும் செய்தது. இந்த சூழலில், தற்போது மின்சார வாகனங்களுக்கான சந்தை குறிப்பிடத்தக்க வளர்ச்சியில் பயணித்து வரும் நிலையில், பெரிய அளவிலான முதலீடுகளை செய்வதற்கு அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

புதிய வாகனங்கள் உருவாக்கப் பணிகள் மற்றும் தொழில்நுட்ப ஆராய்ச்சிப் பணிகளுக்காக ரூ.9,000 கோடியை முதலீடு செய்ய மஹிந்திரா திட்டமிட்டுள்ளது. இந்த நிலையில், மின்சார வாகனங்களுக்காகவும் பெரிய அளவிலான முதலீட்டு திட்டத்தை செயல்படுத்த உள்ளது.

இதன்படி, புதிய மின்சார வாகனங்களை உருவாக்குவதற்காக அடுத்த மூன்று ஆண்டுகளில் ரூ.3,000 கோடியை முதலீடு செய்ய மஹிந்திரா திட்டமிட்டுள்ளது. மின்சார வாகன சந்தையில் மிக முக்கிய இடத்தை தக்க வைக்கும் நோக்குடன் தயக்கமின்றி, இந்த பெரிய அளவிலான முதலீட்டை செய்ய முடிவு செய்துள்ளது.

ஏற்கனவே, மின்சார வாகனங்களை உருவாக்குவதற்காக ரூ.500 கோடி முதலீட்டில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தை மஹிந்திரா நிறுவி இருக்கிறது. அத்துடன், ரூ.1,700 கோடி அளவுக்கு முதலீடும் செய்துள்ளது.

உலக அளவில் பல்வேறு நிறுவனங்களுடன் இணைந்து புதிய மின்சார வாகனங்களை உருவாக்குவதற்கான திட்டங்களுக்கு இந்த புதிய முதலீடு பயன்படுத்தப்படும்.

மேலும், பெங்களூரில் உள்ள ஆலையில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான பேட்டரி, மின்னணு சாதனங்கள் மற்றும் மின் மோட்டார் உற்பத்தி செய்யப்படுகிறது. மஹாராஷ்டிர மாநிலம் சகனில் உள்ள ஆலையில் மின்சார வாகனங்களை உற்பத்தி செய்யும் வகையில் மேம்பாட்டு பணிகள் செய்யப்பட்டு இருக்கிறது.

இந்த புதிய முதலீடு மற்றும் செயலாக்கத் திட்டங்கள் மூலமாக வரும் 2025ம் ஆண்டில் மின்சார வாகன சந்தையில் மிக முக்கிய நிறுவனமாக தன்னை நிலைநிறுத்திக் கெள்ள மஹிந்திரா திட்டமிட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








