அடேங்கப்பா... விற்பனையில் 6600 சதவீத வளர்ச்சியை பதிவு செய்தது எக்ஸ்யூவி500... மஹிந்திரா அசத்தல்...
மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவி கார் விற்பனையில் இமாலய வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவி கடந்த 2011ம் ஆண்டு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. சுமார் 10 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், எக்ஸ்யூவி500 காரின் புதிய தலைமுறை மாடலை மஹிந்திரா நிறுவனம் விற்பனைக்கு கொண்டு வரவில்லை. இந்த சூழலில், எக்ஸ்யூவி700 என்ற பெயரில் புத்தம் புதிய எஸ்யூவி ஒன்றை விற்பனைக்கு கொண்டு வரவிருப்பதை மஹிந்திரா நிறுவனம் சமீபத்தில் உறுதி செய்தது.

அதே நேரத்தில் எக்ஸ்யூவி700 விற்பனைக்கு வந்த பின், எக்ஸ்யூவி500 எஸ்யூவி தற்காலிகமாக விற்பனையில் இருந்து விலக்கப்படும் எனவும் மஹிந்திரா நிறுவனம் அறிவித்துள்ளது. இருப்பினும் மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவி இன்னமும் வாடிக்கையாளர்களை கவர்ந்து இழுத்து வருகிறது. கடந்த மார்ச் மாதம் விற்பனையில் 6600 சதவீதம் என்ற மிக பிரம்மாண்டமான வளர்ச்சியை எக்ஸ்யூவி500 பதிவு செய்துள்ளது.

இந்திய சந்தையில் மஹிந்திரா நிறுவனம் கடந்த மார்ச் மாதம் 603 எக்ஸ்யூவி500 கார்களை விற்பனை செய்துள்ளது. ஆனால் கடந்த 2020ம் ஆண்டு மார்ச் மாதம் இந்த எண்ணிக்கை வெறும் 9 ஆக மட்டுமே இருந்தது. இதன் மூலம் விற்பனையில் மிக பிரம்மாண்டமான வளர்ச்சியை மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவி கார் பெற்றுள்ளது.

ஆனால் நடப்பாண்டு பிப்ரவரி மாதத்துடன் ஒப்பிட்டால், மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவி காரின் விற்பனை 27 சதவீதம் குறைந்துள்ளது. ஏனெனில் நடப்பாண்டு பிப்ரவரி மாதம் மஹிந்திரா நிறுவனம் 829 எக்ஸ்யூவி500 கார்களை விற்பனை செய்திருந்தது. தற்போதைய நிலையில் மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவி காரின் ஆரம்ப விலை 15.13 லட்ச ரூபாயாக உள்ளது.

அதே சமயம் டாப் வேரியண்ட்டின் விலை 19.56 லட்ச ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இவை இரண்டுமே எக்ஸ் ஷோரூம் விலையாகும். மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவி காரில், 2.2 லிட்டர் டீசல் இன்ஜின் தேர்வு வழங்கப்படுகிறது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 158 பிஎஸ் பவரையும், 360 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது.

இந்த எஸ்யூவி காரில், எல்இடி பகல் நேர விளக்குகள் உடன் ப்ரொஜெக்டர் ஹெட்லேம்ப்கள், எலெக்ட்ரிக் சன் ரூஃப் உள்பட பல்வேறு வசதிகள் வழங்கப்படுகின்றன. பாதுகாப்பை பொறுத்தவரை, 6 ஏர்பேக்குகள், இபிடி உடன் ஏபிஎஸ், ஹில் டெசண்ட் & ஹில் ஹோல்டு கண்ட்ரோல், நான்கு சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக்குகள், ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா, ரியர் பார்க்கிங் சென்சார்கள் உள்ளிட்ட வசதிகள் வழங்கப்படுகின்றன.

மஹிந்திரா நிறுவனம் எக்ஸ்யூவி700 மட்டுமல்லாது, ஸ்கார்பியோ எஸ்யூவி காரின் புதிய தலைமுறை மாடலை விற்பனைக்கு கொண்டு வரும் பணிகளிலும் ஈடுபட்டுள்ளது. முன்னதாக கடந்த ஆண்டு விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட புதிய தலைமுறை மஹிந்திரா தார் எஸ்யூவிக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

ஆனால் செமி கண்டக்டர்களுக்கு ஏற்பட்டுள்ள பற்றாக்குறையால், புதிய தலைமுறை மஹிந்திரா தார் எஸ்யூவியின் உற்பத்தி மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக காத்திருப்பு காலம் மிகவும் அதிகமாக உள்ளதால், புதிய தலைமுறை மஹிந்திரா தார் எஸ்யூவியை முன்பதிவு செய்துள்ள வாடிக்கையாளர்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.


Click it and Unblock the Notifications








