எக்ஸ்யூவி700 கார்களை விரைவாக டெலிவிரி கொடுக்க மஹிந்திரா கையில் எடுக்கும் புதிய யுக்தி!! பலன் தருமா?
மஹிந்திரா எக்ஸ்யூவி700 எஸ்யூவி கார் கடந்த ஆண்டு செப்டம்பரில் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட்டது. முந்தைய எக்ஸ்யூவி500-இன் அடுத்த தலைமுறை மாடலாக கொண்டுவரப்பட்டுள்ள எக்ஸ்யூவி700-க்கு ஏகோபித்த வரவேற்பு வாடிக்கையாளர்கள் மத்தியில் கிடைத்து வருகிறது.

எந்த அளவிற்கு என்றால், தற்போது வரையில் மட்டும் 70,000 முன்பதிவுகள் எக்ஸ்யூவி700-இன் மீது மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மஹிந்திரா தெரிவித்துள்ளது. இவ்வாறு மஹிந்திரா எக்ஸ்யூவி700-க்கான தேவை ஒரு பக்கம் அதிகரித்து கொண்டிருக்க, மறுப்பக்கம் தேவைக்கு ஏற்ப இந்த புதிய அறிமுகத்தை தயாரிக்க முடியாமல் மஹிந்திரா திண்டாடி வருகிறது.

எக்ஸ்யூவி700-இன் தயாரிப்பு பணிகளில் ஏற்பட்டுள்ள இந்த இடையூறுக்கு காரணம் எல்லாருக்கும் தெரிந்ததுதான், உலகளாவிய குறைக்கடத்திகளுக்கான பற்றாக்குறை. மாருதி சுஸுகி போன்ற முன்னணி நிறுவனங்கள் கூட இத்தகைய பிரச்சனையில் சிக்கியுள்ள நிலையில், மஹிந்திரா இந்த பிரச்சனையை சரிக்கட்ட பல்வேறு வழிகளில் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

இதனால் எக்ஸ்யூவி700-இன் மலிவான, அதாவது குறைந்த வசதிகள் கொண்ட வேரியண்ட்களை முன்பதிவு செய்தவர்களுக்கே முதற்கட்டமாக டெலிவிரி கொடுக்க மஹிந்திரா திட்டமிட்டு வருவதாக செய்திகள் கூறுகின்றன. மேலும், இதற்காக சில வேரியண்ட்களில் தொழிற்நுட்ப வசதிகளை குறைக்கவும் மஹிந்திரா முயற்சித்து வருகிறது.

இத்தகைய வசதிகள்-குறைந்த வேரியண்ட்கள் வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் தேர்வாகவே வழங்கப்பட உள்ளன. வழக்கமான வேரியண்ட்களை காட்டிலும் சற்று குறைவான விலையில் கொண்டுவரப்பட உள்ள இந்த வேரியண்ட்கள், அதேநேரம் விரைவாகவே உரிமையாளர்களுக்கு டெலிவிரி கொடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆதலால் இதற்காகவே சில வாடிக்கையாளர்கள் மஹிந்திரா எக்ஸ்யூவி700-இன் இந்த குறை-வசதிகள் வேரியண்ட்டை முன்பதிவு செய்வர். மறுப்பக்கம் மஹிந்திரா நிறுவனத்தாலும் அதிகரித்துவரும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை சமாளிக்க முடியும். இதே பாணியை பிரபல சொகுசு கார் தயாரிப்பு நிறுவனமான பிஎம்டபிள்யூ-வும் கையில் எடுக்கவுள்ளதாக சமீபத்தில் அறிவித்திருந்தது.

இதன்படி சில குறிப்பிட்ட பிஎம்டபிள்யூ கார்களை குறைந்த விலையில், தொடுத்திரை இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் இல்லாமல் வாங்கலாம். இருப்பினும், பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் இந்த இன்ஃபோடெயின்மெண்ட் இல்லா கார்கள் முதலாவதாக அமெரிக்க சந்தையில் தான் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மஹிந்திரா எக்ஸ்யூவி700 காரின் டாப் வேரியண்ட்டில் சுமார் 170 குறைக்கடத்தி சிப்கள் பயன்படுத்தப்படுகின்றன. இதில் பெரும்பான்மையானவை அட்வான்ஸ்டு ஓட்டுனர் உதவி அமைப்பிற்கு (ADAS) பயன்படுத்தப்படுகின்றன. குறைக்கடத்திகளுக்கான பற்றாக்குறையால் எக்ஸ்யூவி700 காரில் இத்தகைய குறை-வசதிகள் தேர்வை வழங்கும் மஹிந்திரா நிறுவனத்தின் 2021 மூன்றாம் காலாண்டின் விற்பனை சுமார் 32,000 யூனிட்களாக குறைந்துள்ளன.

இதனால் மஹிந்திரா கார்களை முன்பதிவு செய்து காத்திருக்க வேண்டிய கால அளவு வேகமாக அதிகரித்து வருகிறது. எக்ஸ்யூவி700 உள்பட தற்போது வரையில் சுமார் 1.6 லட்ச முன்பதிவுகளுக்கு டெலிவிரி செய்ய வேண்டிய நிலையில் மஹிந்திரா உள்ளதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே கூறியதுதான், குறைக்கடத்திகளுக்கான பற்றாக்குறையால் மஹிந்திரா மட்டுமின்றி பெரும்பான்மையான முன்னணி நிறுவனங்களின் தயாரிப்பு பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

இந்த வகையில் இந்தியாவின் முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனமான மாருதி சுஸுகி கடந்த செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் தனது கார்கள் தயாரிப்பை வெகுவாக குறைத்திருந்தது. உலகளாவிய குறைக்கடத்திகளுக்கான பற்றாக்குறையில் பெரிய அளவில் பாதிப்படையாத நிறுவனம் என்று பார்த்தால், டாடா மோட்டார்ஸை சொல்லலாம்.

மாருதி சுஸுகி, ஹூண்டாய் நிறுவனங்களுக்கு அடுத்து இந்தியாவில் அதிகளவில் கார்களை விற்பனை செய்யும் மூன்றாவது நிறுவனமாக விளங்கும் டாடா மோட்டார்ஸ் செயலி-சார்ந்த சிப்களுக்கு மாற்றாக பொது-பயன்பாட்டு சிப்களை தனது விற்பனை மாடல்களில் பொருத்தி வருகிறது. இதன் காரணமாகவே டாடா நிறுவனத்திற்கு அதிகளவில் குறைக்கடத்திகள் தேவைப்படவில்லை.

ஆனால் எப்படி இருந்தாலும் எதிர்காலத்தில் முழுவதுமாக எலக்ட்ரிக் வாகன தயாரிப்பில் இறங்கும்போது டாடா மோட்டார்ஸ் நிறுவனத்திற்கும் சிப்-களின் தேவை அதிகரிக்கும். இதனை குறைக்கும் பொருட்டு டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அதன் பிரிட்டிஷ் கூட்டணிகளான ஜாகுவார் & லேண்ட் ரோவர் உடன் இணைந்து பணியாற்ற எப்போதோ துவங்கிவிட்டதாக தகவல்கள் கூறுகின்றன. வழக்கமான எரிபொருள் என்ஜின் வாகனங்களை காட்டிலும் எலக்ட்ரிக் வாகனங்களை தயாரிப்பதற்கு அதிக குறைக்கடத்திகள் தேவைப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








