மக்களை எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மாற வைக்க அதிரடி... ஒன்றிய அரசு செய்த தரமான சம்பவம்... என்னனு தெரியுமா?
மக்களை எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மாற வைப்பதற்காக ஒன்றிய அரசு தரமான சம்பவத்தை செய்துள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்து வருவதால், எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மாறுவதற்கு பலர் முடிவு செய்துள்ளனர். ஆனால் பெட்ரோல் பங்க்குகளை போல், இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான சார்ஜிங் ஸ்டேஷன்கள் போதிய அளவில் இல்லாமல் இருப்பது ஒரு குறையாக பார்க்கப்படுகிறது.

ஆனால் இந்த குறையை போக்க ஒன்றிய அரசு தற்போது தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஃபேம் இந்தியா திட்டத்தின் கீழ், கடந்த ஜூலை 6ம் தேதி நிலவரப்படி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் 350 சார்ஜிங் ஸ்டேஷன்கள் செயல்பட்டு வருவதாக நாடாளுமன்றத்தில் ஒன்றிய அரசு தற்போது தகவல் தெரிவித்துள்ளது.

டெல்லி (94), ஜெய்ப்பூர் (49), சண்டிகர் (48), ராஞ்சி (29) மற்றும் ஆக்ரா (10) உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் இந்த சார்ஜிங் ஸ்டேஷன்கள் செயல்பட்டு வருகின்றன. அத்துடன் ஃபேம் இந்தியா திட்டம் கடந்த 2015ம் ஆண்டு ஏப்ரல் மாதம் அமலுக்கு வந்தது முதல் கடந்த ஜூலை 9ம் தேதி வரை 3.61 லட்சம் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு 600 கோடி ரூபாய் மானியமாக வழங்கப்பட்டுள்ளது.

இது ஃபேம் இந்தியா திட்டத்தின் முதல் கட்டம் மற்றும் தற்போது நடைமுறையில் உள்ள இரண்டாவது கட்டம் ஆகியவற்றின் கீழ் ஒட்டுமொத்தமாக மானியம் வழங்கப்பட்ட எலெக்ட்ரிக் வாகனங்களின் எண்ணிக்கையாகும். கனரக தொழில்துறை அமைச்சர் கிருஷ்ணன் பால் குர்ஜார் இந்த தகவல்களை தெரிவித்துள்ளார்.

ஃபேம் இந்தியா திட்டத்தின் இரண்டாவது கட்டம் கடந்த 2019ம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி அமலுக்கு வந்தது. மொத்தம் 5 ஆண்டுகளுக்கு ஃபேம் இந்தியா திட்டத்தின் இரண்டாவது கட்டம் அமலில் இருக்கும். இதற்காக 10 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அமைச்சர் கிருஷ்ணன் பால் குர்ஜார் மக்களவையில் இந்த தகவலை எழுத்துப்பூர்வமாக தெரிவித்துள்ளார்.

ஃபேம் இந்தியா திட்டத்தின் கீழ் ஒன்றிய அரசு மட்டுமல்லாது, பல்வேறு மாநில அரசுகளும் தங்களது எலெக்ட்ரிக் வாகன கொள்கையின் கீழ் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மானியங்களை வழங்கி கொண்டுள்ளன. மாநில அரசுகள் வழங்கும் சலுகைகளுடன், ஒன்றிய அரசின் சலுகைகளையும் எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்குபவர்கள் பயன்படுத்தி கொள்ள முடியும்.

எனவே எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்குவது பெரிய சுமையாக இருக்காது. பொதுவாக பெட்ரோல், டீசல் வாகனங்களுடன் ஒப்பிடுகையில் எலெக்ட்ரிக் வாகனங்களின் விலை அதிகம். இதன் காரணமாகவும் எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்குவதற்கு மக்கள் தயங்குகின்றனர். ஆனால் ஒன்றிய, மாநில அரசுகளின் சலுகைகள் மூலமாக எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்குபவர்களுக்கு ஏற்படும் சுமை குறையும்.

இதுபோன்ற திட்டங்கள் மூலம் இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிப்பதுதான் ஒன்றிய, மாநில அரசுகளின் எண்ணம். இதன் மூலமாக கச்சா எண்ணெய் இறக்குமதி மற்றும் காற்று மாசுபாடு ஆகியவற்றை குறைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. வரும் காலங்களில் இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாடு வெகுவாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








