வாடிக்கையாளர்களுக்கு பெரிய ஷாக் கொடுத்த மாருதி சுஸுகி!! கார்களின் விலைகள் ரூ.22,500 வரையில் அதிகரிப்பு!
குறிப்பிட்ட சில மாடல்களின் விலைகளை ரூ.22,500 வரையில் மாருதி சுஸுகி நிறுவனம் அதிகரித்துள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை தொடர்ந்து பார்ப்போம்.

இந்தியாவின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமாக விளங்கும் மாருதி சுஸுகி நேற்று (ஏப்ரல் 16) அதன் குறிப்பிட்ட சில கார் மாடல்களின் விலைகளை ரூ.22,500 வரையில் அதிகரித்துள்ளதாக அறிவித்துள்ளது.

இதற்கான காரணமாக, வாகன தயாரிப்பு பணிகளுக்கும் ஆகும் செலவை மாருதி சுஸுகி நிறுவனம் சுட்டிக்காட்டி உள்ளது. அதுவும் உண்மை தான், அலுமினியம், இரும்பு மற்றும் பிளாஸ்டிக் உள்ளிட்டவைகளின் மதிப்பு வருடந்தோறும் அதிகரித்து வருகிறது.

மேலும், கொரோனா வைரஸின் இரண்டாவது அலையினால் நாடு முழுவதும் அசாதாரண சூழல் நிலவி வருகிறது. இதுவும் ஆட்டோமொபைல் நிறுவனங்களுக்கு சில விதங்களில் பண செலவு மற்றும் நேர செலவுகளை ஏற்படுத்துகிறது.

விலை அதிகரிப்பு அனைத்து மாடல்களிலும் 1.6 சதவீதம் என்ற அளவில் கொண்டுவரப்பட்டுள்ளது. அதேபோல் மாருதியின் இந்த விலை அதிகரிப்பு நடவடிக்கையில் நிறுவனத்தின் செலிரியோ மற்றும் ஸ்விஃப்ட்டை தவிர்த்து மற்ற மாடல்கள் அனைத்தும் அடங்குகின்றன.

மாருதி சுஸுகி கார்கள் அரேனா ஷோரூம்களிலும், நெக்ஸா ப்ரீமியம் டீலர்ஷிப்களிலும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. அரேனா ஷோரூம்களில் விற்கப்படும் ஆல்டோ, வேகன்ஆர், டிசைர் மற்றும் எர்டிகா உள்ளிட்டவற்றின் விலைகள் உயர்த்தப்பட்டுள்ளன.

அதேபோல் நெக்ஸா ப்ரீமியம் டீலர்ஷிப்களில் விற்பனை செய்யப்படும் பலேனோ, எஸ்-க்ராஸ், சியாஸ் மற்றும் எக்ஸ்எல்6 கார்களின் விலைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன. அதிகப்பட்சமாக இவற்றின் விலை ரூ.22,500 வரையில் உயர்த்தப்பட்டுள்ளது என்று மட்டுமே செய்திகள் வெளிவருகின்றன.

மற்றப்படி ஒவ்வொரு மாருதி காரின் விலையும் எவ்வளவு அதிகரிக்கப்பட்டுள்ளது என்பது தொடர்பான விரிவாக தகவல்கள் எதுவும் தற்போது அறிவிக்கப்படவில்லை. மிக விரைவில் அறிவிக்கப்படலாம்.

மாருதி நிறுவனம், கடந்த நிதியாண்டில் அதிகளவில் விற்பனை செய்த கார்கள் குறித்த விபரங்களை சமீபத்தில் வெளியிட்டு இருந்தது. இதில் ஸ்விஃப்ட், பலேனோ, வேகன்ஆர், ஆல்டோ மற்றும் டிசைர் உள்ளிட்டவை முதல் ஐந்து இடங்களில் உள்ளன.

இந்திய சந்தையில் வேகமாக வளர்ந்து வரும் காம்பெக்ட் எஸ்யூவி பிரிவில் மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸாவின் கை கடந்த பொருளாதார ஆண்டில் ஓங்கியுள்ளது. இத்தனைக்கும் விட்டாரா பிரெஸ்ஸா பெட்ரோல் என்ஜின் உடன் மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது.

கடைசியாக கடந்த ஜனவரி மாதம் 18ஆம் தேதி இதே காரணத்திற்காக மாருதி கார்களின் விலைகள் ரூ.34,000 வரையில் உயர்த்தப்பட்டு இருந்தன. இந்த புதிய விலை அதிகரிப்பு இந்த ஏப்ரல் 16ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்தது.


Click it and Unblock the Notifications








