காப்பீடு, பதிவு கட்டணம் என எந்த தொல்லையும் இல்லை... மேலும் 4 நகரங்களில் மாருதி மாத சந்தா திட்டம் அறிமுகம்
மாருதி சுஸுகி நிறுவனத்தின் மாத சந்தா திட்டம் மேலும் 4 நகரங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

மாருதி சுஸுகி நிறுவனம் தனது மாத சந்தா திட்டத்தை மேலும் நான்கு நகரங்களுக்கு விரிவுபடுத்தியுள்ளது. இதன்படி ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர், மத்திய பிரதேச மாநிலம் இந்தூர் மற்றும் கர்நாடக மாநிலம் மங்களூர் மற்றும் மைசூர் ஆகிய 4 நகரங்களிலும் மாருதி சுஸுகி நிறுவன கார்களை இனி மாத சந்தா திட்டத்தின் கீழ் பயன்படுத்த முடியும்.

தற்போது இந்தியா முழுவதும் ஒட்டுமொத்தமாக 19 நகரங்களில் மாருதி சுஸுகி நிறுவனத்தின் மாத சந்தா திட்டம் பயன்பாட்டில் உள்ளது. இந்தியா முழுவதும் படிப்படியாக மாத சந்தா திட்டத்தை மாருதி சுஸுகி நிறுவனம் விரிவுபடுத்தி வருகிறது. இந்த வரிசையில் தற்போது 4 நகரங்கள் புதியதாக இணைக்கப்பட்டுள்ளன.

மாத சந்தா சேவையை வழங்குவதற்காக, ஓரிக்ஸ் ஆட்டோ, ஏஎல்டி ஆட்டோமோட்டிவ் மற்றும் மைலெஸ் ஆட்டோமேட்டிவ் ஆகிய நிறுவனங்களுடன் மாருதி சுஸுகி நிறுவனம் கூட்டணி அமைத்துள்ளது. மாருதி சுஸுகி நிறுவனத்தின் மாத சந்தா திட்டத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இதன் காரணமாக மாருதி சுஸுகி நிறுவனம் தொடர்ந்து இந்த திட்டத்தை விரிவுபடுத்தி வருகிறது.

இதுகுறித்து மாருதி சுஸுகி இந்தியா நிறுவனத்தின் மார்க்கெட்டிங் மற்றும் சேல்ஸ் பிரிவின் மூத்த நிர்வாக இயக்குனர் சசாங்க் ஸ்ரீவஸ்தவா கூறுகையில், ''இந்திய சந்தையில் கார்களுக்கான மாத சந்தா திட்டம் புதியதாகும். வாடிக்கையாளர்கள் தெரிவிக்கும் கருத்துக்களின் அடிப்படையில், எங்களது மாத சந்தா திட்டத்தை நாங்கள் தொடர்ந்து மேம்படுத்தி வருகிறோம்'' என்றார்.

மாருதி சுஸுகி நிறுவனத்தின் மாத சந்தா திட்டம் கடந்த 2020ம் ஆண்டு ஜூலை மாதம் அறிமுகமானது. இந்த திட்டத்தின் கீழ், மாருதி சுஸுகி இந்தியா நிறுவனத்தின் காரை வாடிக்கையாளர்கள் தேர்வு செய்து, குறிப்பிட்ட காலத்திற்கு பயன்படுத்தலாம். இதற்கு ஒவ்வொரு மாதமும் மாத சந்தாவை மட்டும் வாடிக்கையாளர்கள் செலுத்தினால் போதுமானது.

வாகனத்தை பயன்படுத்துவதற்கான கட்டணம், பதிவு கட்டணம், பராமரிப்பு செலவுகள் மற்றும் காப்பீடு என அனைத்து செலவுகளும் இந்த மாத சந்தா கட்டணத்தில் அடங்கி விடும். நீங்கள் தேர்வு செய்த காலம் முடிந்த பின்னர், உங்களுக்கு இரண்டு வாய்ப்புகள் வழங்கப்படும். ஒன்று, நீங்கள் புதிய காருக்கு மாறி கொள்ளலாம். அல்லது மாத சந்தாவில் தேர்வு செய்த காரை சொந்தமாக்கி கொள்ளலாம்.

இதற்கிடையே நடப்பு நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் (ஜூலை-செப்டம்பர்), கார்களின் விலையை உயர்த்தவுள்ளதாக மாருதி சுஸுகி நிறுவனம் அறிவித்துள்ளது. மாத சந்தா திட்டத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், கார்களின் விலையை உயர்த்தும் மாருதி சுஸுகி நிறுவனத்தின் முடிவு வாடிக்கையாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இத்தனைக்கும் மாருதி சுஸுகி நிறுவனம் நடப்பாண்டில் மூன்றாவது முறையாக தனது கார்களின் விலையை உயர்த்தப்போகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்னதாக கடந்த ஜனவரி மற்றும் ஏப்ரல் ஆகிய மாதங்களில் மாருதி சுஸுகி கார்களின் விலைகள் உயர்த்தப்பட்டிருந்தன. தற்போது நடப்பாண்டில் மூன்றாவது முறையாக கார்களின் விலை உயரவுள்ளது.


Click it and Unblock the Notifications








