இனி சென்னையிலும் மாருதி சுசுகியின் மாத சந்தா திட்டம்.. முன்பணம், பராமரிப்பு, காப்பீடு என எந்த தலைவலியும் இல்ல!
மாருதி சுசுகியின் சந்தா திட்டம் சென்னையிலும் தொடங்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

நாட்டின் மிக முக்கியமான வாகன உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான மாருதி சுசுகி, புதிய வாகனங்களின் விற்பனையில் மட்டுமின்றி மாத சந்தா திட்டத்தின் மூலம் வாகனங்களை வழங்கும் சேவையிலும் ஈடுபட்டு வருகின்றது. நாட்டின் குறிப்பிட்ட நகரங்களில் மட்டுமே இச்சேவை வழங்கப்பட்டு வருகின்றது.

இந்த நிலையில், கூடுதலாக சில நகரங்களிலும் தனது மாத சந்தா சேவையை வழங்கும் நோக்கில் விரிவாக்கம் பணியில் மாருதி சுசுகி ஈடுபட்டு வருகின்றது. அந்தவகையில், கூடுதலாக 9 நகரங்களில் தனது சேவையை நீட்டித்திருப்பதாக நிறுவனம் தற்போது தகவல் வெளியிட்டுள்ளது.

இதில், சென்னையும் அடங்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது. இதுமட்டுமின்றி, டெல்லி என்சிஆர், பெங்களூரு, ஹைதராபாத், புனே, மும்பை, கொச்சின் மற்றும் அஹமதாபாத் ஆகிய நகரங்களிலும் புதிய பட்டியலில் அடங்கும். இந்த சேவைக்காக மாருதி, ஏஎல்டி ஆட்டோமோட்டிவ் இந்தியா எனும் நிறுவனத்துடன் கூட்டணியைத் தொடங்கியிருக்கின்றது.

இவர்கள் இருவரும் இணைந்தே தற்போது புதிதாக அறிவிக்கப்பட்டிருக்கும் நகரங்களில் சந்தா வாகன திட்டத்தை செயல்படுத்த இருக்கின்றனர். இந்த நிறுவனம் மட்டுமின்றி ஓரிக்ஸ் ஆட்டோ மற்றும் மைல்ஸ் ஆட்டோமோட்டிவ் ஆகிய நிறுவனங்களுடனும் மாருதி கூட்டணியைத் தொடங்கியிருக்கின்றது.

அரெனா ஷோரூம்கள் வாயிலாக விற்பனைக்குக் கிடைக்கும் வேகன்ஆர், ஸ்விஃப்ட், டிசையர், விட்டாரா ப்ரெஸ்ஸா, எர்டிகா ஆகிய மாடல்களையும், நெக்ஸா ஷோரூம்கள் வாயிலாக விற்பனைக்குக் கிடைத்து வரும் இக்னிஸ், பலினோ, சியாஸ், எக்ஸ்எல் 6 மற்றும் எஸ்கிராஸ் கார் மாடல்களையும் மாருதி இச்சேவையின்கீழ் வழங்கி வருவது குறிப்பிடத்தகுந்தது.

இதுமட்டுமின்றி 12, 24, 36 மற்றும் 48 ஆகிய மாத திட்டங்களின் அடிப்படையிலும் இச்சேவையினை மாருதி வழங்கி வருகின்றது. இதில், ஆரம்பநிலை திட்டமாக மாருதி வேகன் ஆர் காருக்கான சந்தா திட்டம் இருக்கின்றது. இக்காரினை மாத சந்தா திட்டத்தின்கீழ் எடுக்கவேண்டும் என்றால் ரூ. 12,513 என்ற கட்டணத்தை செலுத்த வேண்டியிருக்கும்.

இந்த சிறப்பு சேவைக்கு நாடு முழுவதும் நல்ல வரவேற்பு கிடைத்து வருவதாக நிறுவனம் தகவல் வெளியிட்டிருக்கின்றது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் சுமார் 15,500க்கும் அதிகமானோர் இச்சேவைக் குறித்து மிக குறைந்த காலத்தில் விசாரித்திருக்கின்றனர்.

இத்தகைய டிமாண்டைத் தொடர்ந்தே தற்போது நாடு முழுவதும் இச்சேவையினை விரிவாக்கம் செய்யும் பணியில் மாருதி ஈடுபட்டு வருகின்றது. இந்த சேவையுடன் சேர்த்து 24X7 ரோட்சைடு அசிஸ்டன்ட்ஸ், இன்சூரன்ஸ் ஆகியவற்றையம் முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகின்றது. ஆகையால், பராமரிப்பு செலவு என்பதே இல்லாத ஓர் பயண அனுபவத்தை இதன்மூலம் பெற முடியும்.


Click it and Unblock the Notifications








