தொடங்கிய 6 வருடங்களில் 14லட்சம் கார்கள் விற்பனை... மாருதியின் பிரீமியம் பிராண்டிற்கு கிடைத்த அமோக வரவேற்பு!
மாருதி சுசுகி நிறுவனம் தனது பிரீமியம் தர கார் விற்பனையகமான நெக்ஸா வாயிலாக இதுவரை 14 லட்சம் கார்களை விற்றிருப்பதாக ஆச்சரியமளிக்கும் தகவலை வெளியிட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலைக் கீழே காணலாம்.

மாருதி சசுகி நிறுவனம் அதன் பிரீமியம் தர வாகனங்களை நெக்ஸா ஷோரூம்கள் வாயிலாக விற்பனைச் செய்து வருகின்றது. இந்த ஷோரூமை நிறுவனம் தொடங்கி ஆறு வருடங்கள் ஆகின்றன. இந்தியாவில் முதல் நெக்ஸா ஷோரூம் 2015ம் ஆண்டு ஜூன் 23ம் தேதி தொடங்கப்பட்டது.

இந்த ஷோரூம்கள் வாயிலாக முதன் முதலாக எஸ்-கிராஸ் காரே விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டது. மக்கள் மத்தியில் கிடைத்த அமோக வரவேற்பினால் தற்போது இந்த ஷோரூம் ஓர் புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. ஆம், ஷோரூம் பயன்பாட்டிற்கு வந்து ஆறு வருடங்கள் மட்டுமே ஆகின்றநிலையில் தற்போது வரை 14 லட்சத்திற்கும் அதிகமான புதிய வாகனங்களை விற்பனைச் செய்து மாபெரும் வரலாற்றை அது படைத்துள்ளது.

நெக்ஸா ஷோரூம் வாயிலாக எஸ்-க்ராஸ் காரைத் தொடர்ந்து, பலினோ, இக்னிஸ், சியாஸ், எக்ஸ்எல்6 உள்ளிட்ட கார்கள் விற்பனைச் செய்யப்பட்டு வருகின்றன. உலகளாவிய கார் வாங்கும் அனுபவத்தை வழங்கும் நோக்கில் மாருதி சுசுகி நிறுவனம் இந்தியாவில் நெக்ஸா ஷோரூமை பயன்பாட்டிற்குக் கொண்டு வந்தது.

இந்தியா முழுவதும் தற்போது 380க்கும் மேற்பட்ட நெக்ஸா வாகன விற்பனையகங்கள் செயல்பாட்டில் உள்ளன. இதில் 234க்கும் மேற்பட்டவை நகரங்களை மையமாகக் கொண்டு இயங்கி வருகின்றன. இவற்றின் வாயிலாக பெரும்பாலும் இளைஞர்களே தங்களுக்கான வாகனங்களை வாங்கியிருக்கின்றனர்.

இதுகுறித்த மாருதி சுசுகி கூறுகையில், "நெக்ஸா ஷோரூமை அணுகியவர்களில் பெரும்பாலானோர் முதல் முறையாக கார் வாங்கியவர்கள் ஆவார்கள். ஒட்டுமொத்த விற்பனையில் 70 சதவீதம் பேர் முதல் முறையாக காரை வாங்கியவர்கள். இதில் பாதிக்கும் மேலாக 35 வயது கொண்டவர்கள் ஆவார்கள்" என தெரிவித்துள்ளது.

நெக்ஸாவின் பயணம்:
மேலே கூறியதைப் போல் நெக்ஸா ஷோரூம் வாயிலாக முதல் முறையாக விற்பனைக்குக் களமிறக்கப்பட்டது எஸ்-கிராஸ் மாடலே ஆகும். இது 2015ம் ஆண்டு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இதே ஆண்டில் பலினோ காரையும் நிறுவனம் அறிமுகம் செய்தது.

இதற்கு அடுத்தபடியாக 2017ம் ஆண்டில் இக்னிஸ் காரும், அதே ஆண்டில் மற்றுமொரு காராக சியாஸும் அறிமுகம் செய்யப்பட்டன. இதையடுத்து 2019ம் ஆண்டில் எக்ஸ்எல் 6 எம்பிவி காரும் இணைக்கப்பட்டது. இந்த கார் மாடல்களுக்கே இந்தியர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு நிலவி, தற்போது 1.4 மில்லியன் விற்பனை என்ற இலக்கை எட்ட உதவியிருக்கின்றது.

மிக விரைவில் நெக்ஸா வாயிலாக விற்பனையாக இருக்கும் கார்கள்
மாருதி சுசுகி மேலே பார்த்த கார் மாடல்களுடன் இன்னும் சில கார்களை நெக்ஸா ஷோரூம்கள் வாயிலாக விற்பனைச் செய்ய திட்டமிட்டுள்ளது. மிக விரைவில் எதிர்பார்க்கப்படும் வேகன்ஆர் இவி (எலெக்ட்ரிக் கார்), ஜிம்னி உள்ளிட்ட சில கார்கள் நெக்ஸா ஷோரூம் வாயிலாக விற்பனைச் செய்ய திட்டமிடப்பட்டுள்ளன. இவற்றுடன் எதிர்காலத்தில் இன்னும் சில கார்களும் சேர்க்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.


Click it and Unblock the Notifications







