அடேங்கப்பா... இவ்வளவு கார்களா? மாருதி சுஸுகி நிறுவனத்தின் உற்பத்தி தொடர்ந்து 5வது மாதமாக உயர்வு
மாருதி சுஸுகி நிறுவன கார்களின் உற்பத்தி உயர்ந்துள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

மாருதி சுஸுகி நிறுவனம் கடந்த 2020ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஒட்டுமொத்தமாக 1,55,127 கார்களை உற்பத்தி செய்துள்ளது. கடந்த 2019ம் ஆண்டு டிசம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் இது 33.78 சதவீதம் அதிகமாகும். 2019ம் ஆண்டு டிசம்பர் மாதம் மாருதி சுஸுகி நிறுவனம் ஒட்டுமொத்தமாக 1,15,949 கார்களை மட்டுமே உற்பத்தி செய்திருந்தது.

ஆல்டோ, ஸ்விஃப்ட், பலேனோ மற்றும் டிசையர் போன்ற பிரபலமான கார்களின் உற்பத்தியாளரான மாருதி சுஸுகி தனது உற்பத்தியில் தொடர்ந்து 5வது மாதமாக வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. கடந்த 2019ம் ஆண்டு டிசம்பர் மாதம் 1,14,962 யூனிட்களாக இருந்த மாருதி சுஸுகி நிறுவனத்தின் பயணிகள் வாகன உற்பத்தி கடந்த 2020ம் ஆண்டு டிசம்பர் மாதம் 1,53,475 ஆக உயர்ந்துள்ளது.

இதேபோல் ஆல்டோ மற்றும் எஸ்-பிரெஸ்ஸோ ஆகிய கார்களை உள்ளடக்கிய மினி கார்கள் பிரிவிலும் உற்பத்தி 8.42 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்த பிரிவில் மாருதி சுஸுகி நிறுவனம் கடந்த 2020ம் ஆண்டு டிசம்பர் மாதம் 27,772 கார்களை உற்பத்தி செய்துள்ளது. ஆனால் கடந்த 2019ம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்த எண்ணிக்கை 25,613 ஆக மட்டுமே இருந்தது.

இதுதவிர வேகன் ஆர், செலிரியோ, இக்னிஸ், ஸ்விஃப்ட், பலேனோ மற்றும் டிசையர் உள்ளிட்ட கார்களை உள்ளடக்கிய காம்பேக்ட் கார்கள் பிரிவிலும் உற்பத்தி அதிகரித்துள்ளது. இந்த பிரிவில் மாருதி சுஸுகி நிறுவனம் கடந்த 2019ம் ஆண்டு டிசம்பர் மாதம் 62,488 கார்களை மட்டுமே உற்பத்தி செய்திருந்தது. இந்த எண்ணிக்கை 2020ம் ஆண்டு டிசம்பரில் 85,103 ஆக உயர்ந்துள்ளது.

இந்த வரிசையில் ஜிப்ஸி, எர்டிகா, எஸ்-க்ராஸ், பிரெஸ்ஸா மற்றும் எக்ஸ்எல்6 ஆகிய கார்களை உள்ளடக்கிய யுடிலிட்டி வாகனங்கள் பிரிவிலும் உற்பத்தி 21.7 சதவீதம் உயர்ந்துள்ளது. இந்த பிரிவில் மாருதி சுஸுகி நிறுவனம் கடந்த 2019ம் ஆண்டு டிசம்பர் மாதம் 19,825 கார்களை மட்டுமே உற்பத்தி செய்திருந்தது. ஆனால் 2020ம் ஆண்டு டிசம்பரில் இந்த எண்ணிக்கை 28,006 கார்களாக உயர்ந்துள்ளது.

இந்த வரிசையில் மாருதி சுஸுகி நிறுவனத்தின் இலகுரக வர்த்தக வாகனமான சூப்பர் கேரியின் உற்பத்தியும் உயர்ந்துள்ளது. கடந்த 2019ம் ஆண்டு டிசம்பர் மாதம் மாருதி சுஸுகி நிறுவனம் 987 சூப்பர் கேரி வாகனங்களை மட்டுமே உற்பத்தி செய்திருந்தது. ஆனால் 2020ம் ஆண்டு டிசம்பரில் இந்த எண்ணிக்கை 1,652ஆக உயர்ந்துள்ளது.

உற்பத்தி உயர்ந்துள்ள நிலையில், வேகன் ஆர் எலெக்ட்ரிக் காரை விற்பனைக்கு கொண்டு வரும் திட்டத்தை மாருதி சுஸுகி நிறுவனம் கைவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மாருதி சுஸுகி வேகன் ஆர் எலெக்ட்ரிக் கார் நடப்பாண்டு இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என தகவல் வெளிவந்தன.

அதற்கு ஏற்ப இந்தியா முழுவதும் பல்வேறு பகுதிகளில் மாருதி சுஸுகி வேகன் ஆர் எலெக்ட்ரிக் கார் சாலை சோதனைகளுக்கும் உட்படுத்தப்பட்டு வந்தது. ஆனால் வணிக ரீதியில் வெற்றி பெறுவதற்கான சாத்தியக்கூறுகள் குறைவாக இருப்பதால், வேகன் ஆர் எலெக்ட்ரிக் காரை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யும் திட்டத்தை மாருதி சுஸுகி கிடப்பில் போட்டுள்ளதாக கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications








