ஜிம்னி எஸ்யூவிக்கு இந்தியாவில் எக்கச்சக்க வர்த்தக வாய்ப்பு... மீண்டும் தீவிர முயற்சியில் இறங்கிய மாருதி!
ஜிம்னி எஸ்யூவிக்கு இந்தியாவில் சிறந்த வர்த்தக வாய்ப்பு இருப்பதாக கருதப்படும் நிலையில், அதனை உறுதி செய்வதற்கான முயற்சிகளில் மாருதி கார் நிறுவனம் இறங்கி இருக்கிறது.

இந்தியாவில் எஸ்யூவி கார்களுக்கான வரவேற்பு உலக அறிந்த விஷயம். இந்திய நிறுவனங்களும், வெளிநாட்டு நிறுவனங்களும் எஸ்யூவி ரக கார்களை களமிறக்குவதில் அதிக தீவிரம் காட்டி வருகின்றன. இந்த நிலையில், காம்பேக்ட் ரக கார் மார்க்கெட்டில் ஜாம்பவானாக விளங்கும் மாருதி நிறுவனம் எஸ்யூவி மார்க்கெட்டிலும் கவனம் செலுத்தி வருகிறது.

இந்தியாவில் எந்த வகையான எஸ்யூவியாக இருந்தாலும் சிறப்பான வர்த்தக வாய்ப்பு இருக்கிறது. இதனை மனதில் வைத்து ஜிம்னி எஸ்யூவியை இந்தியாவில் களமிறக்கும் முயற்சிகளில் மாருதி கார் நிறுவனம் மீண்டும் இறங்கி இருக்கிறது.

மஹிந்திரா தார் எஸ்யூவி பிரிமீயம் ரகம் அம்சங்களுடன் பட்ஜெட் ரூ.10 லட்சத்திற்கு மேல் சென்றுள்ள நிலையில், ஜிம்னி எஸ்யூவி ரூ.10 லட்சத்தில் களமிறக்கினால் அதிக வர்த்தக வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது. எனவே,மாருதி நிறுவனம் மீண்டும் ஜிம்னி எஸ்யூவியின் அறிமுகம் செய்வதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.

இதுகுறித்து பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்துள்ள மாருதி கார் நிறுவனத்தின் விற்பனைப் பிரிவு மூத்த அதிகாரி ஷசாங்க் ஸ்ரீவத்சவா கூறுகையில்,"ஜிம்னி எஸ்யூவியை விற்பனைக்கு கொண்டு வருவது குறித்து வாடிக்கையாளர்களிடம் கருத்து கேட்டோம். இதில், நேர்மறையான கருத்துக்கள் கிடைத்துள்ளன. ஜிம்னி எஸ்யூவியை அறிமுகம் செய்வது குறித்து வாடிக்கையாளர்களின் கருத்துக்களை ஆய்வு செய்து முடிவு செய்வோம்," என்று தெரிவித்துள்ளார்.

மாருதி நிறுவனத்தின் தாய் நிறுவனமான சுஸுகி பிராண்டில் விற்பனை செய்யப்படும் ஜிம்னி எஸ்யூவிக்கு உலக அளவில் சிறந்த வரவேற்பு உள்ளதுடன், விற்பனையிலும் சக்கை போடு போட்டு வருகிறது. கடந்த 50 ஆண்டு கால பாரம்பரியத்துடன் தற்போது நவீன யுக வாடிக்கையாளர்களை கவரும் அம்சங்களுடன் விற்பனையில் வைக்கப்பட்டுள்ளது.

மேலும், மிக குறைவான ரகத்திலான ஆஃப்ரோடு பயன்பாட்டு அம்சங்கள் கொண்ட எஸ்யூவி என்பதே ஜிம்னி எஸ்யூவிக்கு மிகப்பெரிய வரவேற்பு இருப்பதற்கான காரணமாக கூறலாம்.

கடந்த ஆண்டு இந்திய ஆட்டோ எக்ஸ்போவில் ஜிம்னி எஸ்யூவி பார்வைக்கு வைக்கப்பட்டதால், எப்படியும் இரண்டு ஆண்டுகளுக்குள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு விடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், மாருதி நிறுவனம் இந்த எஸ்யூவிக்கு போதிய வரவேற்பு கிடைக்குமா என்பதில் இன்னமும் குழப்பத்திலேயே இருக்கிறது.

இத்தனைக்கும் சில மாதங்களுக்கு முன் ஜிம்னி எஸ்யூவியின் உற்பத்தி இந்தியாவில் துவங்கப்பட்டுவிட்டது. ஆனால், வெளிநாடுகளுக்கு மட்டும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டால், 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் தேர்வு வழங்கப்படும்.

இந்த எஞ்சின் அதிகபட்சமாக 105 பிஎச்பி பவரையும், 138 என்எம் டார்க் திறனையும் வழங்கும். மேனுவல் கியர்பாக்ஸ் சிஸ்டம் எதிர்பார்க்கலாம். 4 வீல் டிரைவ் சிஸ்டம்தான் ஜிம்னி எஸ்யூவியின் முக்கிய அம்சமாக இருந்தாலும், இந்தியாவில் 2 வீல் டிரைவ் சிஸ்டம் கொண்ட மாடலில்தான் கொண்டு வரப்படும் என்று தெரிகிறது. விலையை கட்டுக்குள் வைக்க இந்த யுக்தியை மாருதி கையாளக்கூடும். ஆனால், வாடிக்கையாளரிடம் ஏற்படும் வரவேற்பை பொறுத்து முடிவு எடுக்கும்.

ஜிம்னி எஸ்யூவி ரூ.10 லட்சத்தையொட்டிய ஆன்ரோடு விலையில் விற்பனைக்கு வந்தால், அது நிச்சயம் நல்ல வரவேற்பை பெறும் வாய்ப்பு இருக்கிறது. டாடா பன்ச் உள்ளிட்ட பட்ஜெட் எஸ்யூவிகளுக்கும், மஹிந்திரா தார் உள்ளிட்ட மாடல்களுக்கும் இடையிலான ரகத்தில் ஜிம்னி நிலைநிறுத்தப்படும் வாய்ப்பு இருக்கிறது.


Click it and Unblock the Notifications








