மீண்டும் டீசல் என்ஜின்களின் பக்கம் செல்லும் மாருதி சுஸுகி!! 2022ல் மறு அறிமுகம்?
மாருதி சுஸுகி நிறுவனம் அதன் 1.5 லிட்டர் டீசல் என்ஜினை அடுத்த 2022ஆம் ஆண்டின் துவக்கத்தில் மீண்டும் அறிமுகப்படுத்தவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

ஹிந்து பிஸ்னஸ் லைன் என்ற செய்திதளத்தில் வெளியிடப்பட்டுள்ள இதுகுறித்த விபரங்களில் பிஎஸ்6-க்கு இணக்கமான 1.5 லிட்டர் டீசல் என்ஜின் முதலாவதாக மாருதியின் எக்ஸ்எல்6 மாடலில் மறு அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனை தொடர்ந்து மற்ற மாருதி சுஸுகி கார்களான விட்டாரா பிரெஸ்ஸா, எர்டிகா மற்றும் சியாஸில் இந்த பிஎஸ்6 டீசல் என்ஜின் கொண்டுவரப்படலாம். குறிப்பாக எக்ஸ்.எல்6 காருக்கு அடுத்து காம்பெக்ட் எஸ்யூவி பிரிவில் ஆதிக்கம் செலுத்தி வரும் விட்டாரா பிரெஸ்ஸாவில் தான் பிஎஸ்6 டீசல் என்ஜின் தேர்வு வழங்கப்படும்.

ஏனெனில் தற்போதைக்கு டீசல் என்ஜின் தேர்வின் தேவை விட்டாரா பிரெஸ்ஸாவில் தான் அதிகளவில் உள்ளது. ஹரியானாவில் உள்ள மானேசர் தொழிற்சாலையில் கிட்டத்தட்ட கடந்த ஒரு வருடமாக புதிய டீசல் என்ஜினை தயாரிக்கும் பணியில் ஈடுப்பட்டு வருவதாக மாருதி நிறுவனமும் தெரிவித்துள்ளது.

விட்டாரா பிரெஸ்ஸா டீசல் கார் 2022 பிப்ரவரியில் ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகப்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 1.5 லிட்டர் டிடிஐஎஸ் 225 டீசல் என்ஜின் ஒன்றும் மாருதி நிறுவனத்திற்கு புதியது கிடையாது.

சுஸுகி வடிவமைத்த இந்த என்ஜின் 2018ல் சியாஸ் மற்றும் எர்டிகாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் அதன்பின் கடந்த 2020ஆம் ஆண்டு ஏப்ரலில் பிஎஸ்4 என்ஜினை பிஎஸ்6-க்கு இணக்கமானதாக மாற்ற வேண்டிய கட்டாயம் உருவானதால் டீசல் என்ஜின்களை தற்காலிகமாக மாருதி சுஸுகி நிறுத்தியது.

ஏனெனில் பிஎஸ்6 டீசல் என்ஜினினால் கார்களின் விலைகளை உயர்த்த வேண்டிய கட்டாயம் இந்த நிறுவனத்திற்கு ஏற்பட்டது. ஆனால் அதை மாருதி சுஸுகி விரும்பவில்லை. இருப்பினும் எத்தனை நாட்களுக்கு டீசல் என்ஜின் தேர்வை வழங்காமல் கார்களை விற்க முடியும்?.

கார்களை வாங்கும் வாடிக்கையாளர்களில் பலர் டீசல் என்ஜினை பெறவே விரும்புகின்றனர். இந்த குறையை சரிசெய்ய சிஎன்ஜி என்ஜின் போன்ற மாற்று வழிகளை மாருதி நிறுவனம் யோசித்து வருகிறது, சில கார்களில் சிஎன்ஜி தேர்வுகளை வழங்கியும் உள்ளது.

இருப்பினும் அதேநேரம் 1.5 லிட்டர் டீசல் என்ஜினை பிஎஸ்6 தரத்தில் மீண்டும் கொண்டுவரவும் இந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது. கடந்த ஆண்டில் கூட டீசல் என்ஜின் உடன் மாருதி எர்டிகா கார் ஒன்று சோதனை ஓட்டத்தில் உட்படுத்தப்பட்டிருந்தது.

இதனால் பலேனோ, டிசைர் போன்ற சிறிய கார்களில் வழங்கப்படுவதற்கு வாய்ப்புகள் மிகவும் குறைவு என்றாலும், எக்ஸ்.எல்6, எர்டிகா, சியாஸ் போன்ற பெரிய கார்களில் மீண்டும் டீசல் என்ஜின் தேர்வை மாருதி நிறுவனம் கொண்டுவரலாம்.

இவ்வாறு செய்தி வெளியாகியுள்ள நிலையில் இதுகுறித்து மாருதி சுஸுகி இந்தியா நிறுவனத்தின் நிர்வாகி ஒருவரிடம் கேட்டறிந்ததில், தயாரிப்புகள் குறித்து எந்தவொரு முன்னோக்கு வழிகாட்டலையும் நாங்கள் வழங்கவில்லை என எதிர்மறையாக தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications







