புதிய MarutiCelerio என்னென்ன நிறங்களில், எத்தனை ட்ரிம்மில் விற்பனைக்கு கிடைக்கும்? இதோ இணையத்தில் கசிந்த தகவல்
புதிய மாருதி சுசுகி செலிரியோ (Maruti Suzuki Celerio) என்னென்ன நிற தேர்வில் மற்றும் எத்தனை ட்ரிம்களில் விற்பனைக்குக் கிடைக்கும் என்பது போன்ற முக்கிய தகவல்கள் இணையத்தின் வாயிலாக கசிந்துள்ளன. இதுகுறித்த முக்கிய தகவல்களை இந்த பதிவில் காணலாம், வாங்க.

மாருதி சுசுகி (Maruti Suzuki) நிறுவனம் மிக விரைவில் புதிய தலைமுறை செலிரியோ (Celerio) ஹேட்ச்பேக் ரக காரை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருக்கின்றது. நவம்பர் 10ம் தேதி அன்று இக்காரை அறிமுகம் செய்ய இருப்பதாக மாருதி சுசுகி அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கின்றது. மேலும், இதன் அறிமுகத்தை முன்னிட்டு செலிரியோவிற்கான புக்கிங் பணிகளை மாருதி நிறுவனம் இந்தியாவில் தொடங்கியிருக்கின்றது.

ரூ. 11 ஆயிரம் முன்தொகையின் கீழ் செலிரியோவிற்கான புக்கிங்குகள் ஏற்கப்பட்டு வருகின்றன. அரேனா ஷோரூம் வாயிலாக புதிய செலிரியோ விற்பனைக்கு வழங்கப்பட இருக்கின்றது. இந்த நிலையில் செலிரியோ என்ன மாதிரியான நிற தேர்வு, வேரியண்ட் மற்றும் புதிய சிறப்பம்சங்கள் உடன் விற்பனைக்குக் கிடைக்க இருக்கின்றது என்பது பற்றிய தகவல் வெளியாகியிருக்கின்றது.

வேரியண்ட் மற்றும் நிற தேர்வுகள்:
பன்முக புதுப்பித்தல்களுடன் விரைவில் விற்பனைக்கான அறிமுகத்தைக் காண இருக்கும் மாருதி சுசுகி செலிரியோ நான்கு விதமான ட்ரிம்களில் விற்பனைக்குக் கிடைக்க இருக்கின்றது. எல்எக்ஸ்ஐ, விஎக்ஸ்ஐ, இசட்எக்ஸ்ஐ மற்றும் இசட்எக்ஸ்ஐ-ப்ளஸ் ஆகியவையே அந்த ட்ரிம்கள் ஆகும். இதிலேயே ஏழு விதமான தேர்வுகள் வழங்கப்பட இருக்கின்றன.

நான்கு மேனுவல் டிரான்ஸ்மிஷன் வசதியுடனும், மூன்று தானியங்கி கியர்பாக்ஸ் வசதியுடனும் விற்பனைக்கு வர இருக்கின்றன. இதில், எல்எக்ஸ்ஐ ட்ரிம் ஆரம்ப நிலை தேர்வுகளைக் கொண்டிருக்கின்றது. பிற மூன்றில்தான் தானியங்கி கியர்பாக்ஸ் வசதி வழங்கப்பட்டிருக்கின்றது.

Source: Motor Arena
இத்துடன், ஆறு விதமான நிற தேர்வுகளில் செலிரியோ விற்பனைக்குக் கிடைக்க இருக்கின்றது. ஆர்க்டிக் வெள்ளை (Arctic White), சில்கி சில்வர் (Silky Silver), க்ளிஸ்டெனிங் கிரே (Glistening Grey), சாலிட் ஃபையர் ரெட் (Solid Fire Red), ஸ்பீடி நீலம் (Speedy Blue) மற்றும் கேஃபைன் பிரவுன் (Caffeine Brown). அனைத்துமே ஒற்றை நிற தேர்வாகும்.

இதன் வாயிலாக செலிரியோ இரட்டை நிற தேர்வில் விற்பனைக்கு கிடைக்காது என்பது தெரிய வந்திருக்கின்றது. ஆனால் தற்போது வெளியாகியிருக்கும் தகவல்குறித்த எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் மாருதி சுசுகி இதுவரை வெளியிடவில்லை. வரும் 10ம் தேதி அன்றே இதுகுறித்த தகவல்களை நிறுவனம் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

எஞ்ஜின் மற்றும் சிறப்பம்சங்கள்
செலிரியோ காரில் 1.0 லிட்டர் கே10சி கே-சீரிஸ் ட்யூவல் ஜெட், ட்யூவல் விவிடி பெட்ரோல் எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது மிக அதிக மைலேஜை தரும் வகையில் ட்யூன்-அப் செய்யப்பட்டிருப்பதாக நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அண்மையில் அறிவிப்பு வெளியிட்டது. இந்த எஞ்ஜின் அதிகபட்சமாக 67 பிஎச்பி மற்றும் 90 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்டது.

5 ஸ்பீடு மேனுவல் மற்றும் 5 ஸ்பீடு தானியங்கி டிரான்ஸ்மிஷன் தேர்வுகள் வழங்கப்பட இருக்கின்றன. இத்துடன், இப்புதிய மோட்டாரில் ஐடில் ஸ்டார்ட் ஸ்டாப் வசதி (Idle Start Stop) வழங்கப்பட்டிருக்கின்றது. இது தானாகவே சிக்னல்களில் எஞ்ஜினை ஆஃப் செய்து எரிபொருள் சிக்கனத்தை வழங்கும். ஆகையால், நல்ல மைலேஜ் திறனை புதிய செலிரியோ வெளிப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இத்துடன், புதிய செலிரியோ காரில் ஃப்ளோட்டிங் ரக தொடு திரை வசதிக் கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் எதிர்பார்க்கப்படுகின்றது. இது ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே வசதியைக் கொண்டிருக்கும். இத்துடன், நடுத்தர டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், புஷ்-பட்டன் ஸ்டார்ட்/ஸ்டாப் மற்றும் பன்முக கன்ட்ரோல்கள் கொண்ட ஸ்டியரிங் வீல் ஆகிய சிறப்பு வசதிகளும் எதிர்பார்க்கப்படுகின்றன.

புதிய செலிரியோ டாடாவின் டிாயகோ, ஹூண்டாய் சேன்ட்ரோ மற்றும் மாருதி வேகன்ஆர் ஆகிய ஹேட்ச்பேக் ரக கார் மாடல்களுக்கு போட்டியாக விரைவில் இந்தியாவில் விற்பனைக்கு வர இருக்கின்றது. ரூ. 4.65 தொடங்கி ரூ. 6 லட்சம் வரையிலான விலையில் இக்கார் எதிர்பார்க்கப்படுகின்றது.

மாருதி சுசுகி நிறுவனம் இந்த காரின் அறிமுகத்தை கடந்த ஆண்டே செய்ய இருந்தது. ஆனால், கொரோனா வைரஸ் பரவல் இதனை தள்ளிப்போட வைத்துவிட்டது. இதைத் தொடர்ந்து செமிகன்டக்டர் பற்றாக்குறை பிரச்னையும் இதனைப் பார்க்கத் தொடங்கியது. இந்த மாதிரியான சூழ்நிலையிலேயே இறுதியாக வரும் 10ம் தேதி இக்கார் அறிமுகமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றது.


Click it and Unblock the Notifications








