மாருதி எலெக்ட்ரிக் காருக்காக வெயிட் பண்றீங்களா? தயவு செய்து முடிவ மாத்திக்கோங்க! அவங்க வேற பிளான்ல இருக்காங்க!
மாருதி சுசுகி நிறுவனம் அதன் எலெக்ட்ரிக் காரை எப்போது அறிமுகம் செய்யும் என்பது பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலைக் கீழே காணலாம், வாங்க.

இந்தியாவில் மின் வாகன விற்பனை மட்டுமல்ல புதுமுக எலெக்ட்ரிக் வாகனங்களின் அறிமுகமும் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. புதிய மின்சார வாகன மாடல்களின் அறிமுகம் இந்தியாவில் தொடர்ச்சியாக அரங்கேறிய வண்ணம் இருக்கின்றன. ஆரம்ப நிலை வாகன உற்பத்தி நிறுவனங்கள் தொடங்கி முன்னணி வாகன உற்பத்தி நிறுவனங்கள் வரை பல இதில் தீவிரம் காட்டி வருகின்றன.

அதேநேரத்தில் சில முன்னணி வாகன நிறுவனங்கள் இந்த நேரத்திலும் அவர்களின் எலெக்ட்ரிக் வாகனங்களை அறிமுகம் செய்வதில் தயக்கம் காட்டி வருகின்றன. இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களின் விற்பனை தொடர்ச்சியாக அதிகரித்து வருகின்ற இந்த சூழ்நிலையில் மின் வாகனத்தை அறிமுகம் செய்வதில் தயக்கம் காட்டும் ஓர் நிறுவனமான மாருதி சுசுகி இருக்கின்றது.

இந்த நிறுவனத்தின் மின் வாகன தயாரிப்பிற்காக காத்திருப்போர் பலர் இருக்கின்ற நிலையில் இந்நிறுவனம் இப்போதைக்கு எலெக்ட்ரிக் வாகனங்களை விற்பனைக்குக் கொண்டு வராது என்கிற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இது மாருதி சுசுகியின் பேட்டரி வாகனங்களின் வரவை எதிர்நோக்கிக் காத்துக் கொண்டிருக்கும் அந்நிறுவனத்தின் பிரியர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை வழங்கியிருக்கின்றது.

மாருதி சுசுகி 2025ம் ஆண்டிற்கு பின்னரே எலெக்ட்ரிக் வாகனங்களைக் களமிறக்கும் என இப்போது வெளியாகியிருக்கும் புதிய தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கு முன்னதாக, அதாவது, 2025ம் ஆண்டிற்கு முன்னதாக மாருதியின் இ-வாகனங்கள் விற்பனைக்கு வராது என உறுதியாக தகவல்கள் கூறுகின்றன.

மாருதி சுஸுகியின் காலாண்டு நிதிநிலை அறிக்கை அண்மையில் வெளியிடப்பட்டது. இந்த அறிக்கை வெளியான பின்னர் நிறுவனத்தின் தலைவர் ஆர்சி பார்கவா சில முக்கிய தகவல்களை வெளியிட்டார். அவர், "இந்திய சந்தையில் எலக்ட்ரிக் மாடல்களை வெளியிடுவதற்கு முன் மின் வாகனங்களுக்கான தேவை நாட்டில் அதிகளவில் இருக்க வேண்டும் என்பதை விரும்புவதாகக் கூறினார்.

மேலும் அவர், "நாங்கள் 1,000 போன்ற ஒற்றைப்படை கார்களை விற்றால் மகிழ்ச்சியாக இருக்க மாட்டோம். தற்போது மில்லியன் கணக்கில் நாங்கள் கார்களை விற்பனைச் செய்து வருகின்றோம். ஆகையால், ஆண்டிற்கு ஆயிரம் கணக்கில் மின் வாகனங்கள் விற்பனையாவதை எங்களால் ஏற்றுக் கொள்ள முடியாது. இதற்கான டிமாண்ட் அதிகரித்திருக்க வேண்டும்" என்றார்.

ஆகையால் நிறுவனத்தின் மின் வாகனங்கள் இப்போது விற்பனைக்கு வருவது சாத்தியமற்றது என்பது தெரிய வந்திருக்கின்றது. இதை உறுதிப்படுத்தும் வகையில் நிறுவனம் 2025ம் ஆண்டிற்கு பின்னரே எலெக்ட்ரிக் வாகனங்களை விற்பனைக்குக் கொண்டு வரும் என்பது தெரிய வந்திருக்கின்றது.

அதேநேரத்தில் நிறுவனம் ஹைபிரிட் எஞ்ஜின் மற்றும் ஃப்ளெக்ஸ் ஃப்யூவல் எஞ்ஜின் வசதிக் கொண்ட கார்களைக் களமிறக்குவதில் ஆர்வமாக இருப்பது தெரிய வந்திருக்கின்றது. ஃப்ளெக்ஸ் ஃப்யூவல் வாகனம் என்பது இரண்டு அல்லது அதற்கும் மேற்பட்ட எரிபொருளில் இயங்கும் திறனைக் கொண்டது என்பது அர்த்தமாகும்.

இதேபோல், ஹைபிரிட் வாகனங்களானது வழக்கமான பெட்ரோல், டீசல் (ஐசிஇ எஞ்ஜின் கொண்ட) வாகனங்களைக் காட்டிலும் அதிக சிறப்பு வாய்ந்தது. இது, மின்சார மோட்டார் மற்றும் பெட்ரோல் மோட்டார் ஆகிய இரண்டாலும் இயங்கும். ஆகையால், வழக்கமான எரிபொருள் எஞ்ஜின் கொண்ட வாகனங்களைக் காட்டிலும் இது தனி சிறப்பு கொண்ட வாகனமாக பார்க்கப்படுகின்றது.

இத்தகைய வாகன தயாரிப்பிலேயே மாருதி சுசுகி நிறுவனம் அதிக தீவிரம் காட்டி வருகின்றது. ஆகையால், மின் வாகனங்களுக்கு நிறுவனம் ஃப்ளெக்ஸ் ஃப்யூவல் மற்றும் ஹைபிரிட் வாகனங்களை மிக விரைவில் அதிகளவில் விற்பனைக்குக் கொண்டு வரும் என்பது தெரிய வந்திருக்கின்றது.

அதேநேரத்தில் மாருதி சுசுகி நிறுவனம் தற்போது சிஎன்ஜியால் இயங்கும் வாகனங்களையும் அதிகளவில் விற்பனைக்குக் களமிறக்கி வருகின்றது. நாட்டின் பிற முன்னணி நிறுவனங்களைக் காட்டிலும் மாருதி சுசுகியே இந்த பிரிவில் அதிகளவில் வாகன தேர்வுகளை விற்பனைக்கு வழங்கி வருகின்றது.


Click it and Unblock the Notifications








