கார் ஏற்றுமதியில் புதிய மைல்கல்லை தொட்டு மாருதி அசத்தல்!
கார் ஏற்றுமதியில் மாருதி சுஸுகி கார் நிறுவனம் புதிய மைல்கல்லை தொட்டு அசத்தி இருக்கிறது. அதன் விபரங்களை தொடர்ந்து பார்க்கலாம்.

நாட்டின் மிகப்பெரிய கார் உற்பத்தி நிறுவனமாக மாருதி சுஸுகி உள்ளது. இந்திய கார் சந்தையில் கிட்டத்தட்ட 50 சதவீத பங்களிப்பை தன் வசம் வைத்துள்ளது மாருதி சுஸுகி. உள்நாட்டு விற்பனையில் யாரும் தொட முடியாத இடத்தில் இருந்து வரும் மாருதி நிறுவனம் ஏற்றுமதியிலும் கவனம் செலுத்தி வருகிறது. இந்த நிலையில், கார் ஏற்றுமதியில் புதிய மைல்கல்லை மாருதி சுஸுகி தொட்டுள்ளது.

அதாவது, கார் ஏற்றுமதி துவங்கப்பட்டு இதுவரை 2 மில்லியன் கார்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

கடந்த 1986-87 நிதி ஆண்டில் மாருதி கார் நிறுவனம் இந்தியாவிலிருந்து கார் ஏற்றுமதியை துவங்கியது. கடந்த 1987ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 500 கார்களை ஹங்கேரி நாட்டிற்கு மாருதி ஏற்றுமதி செய்தது.

இதைத்தொடர்ந்து, உலகின் பல்வேறு நாடுகளுக்கும் கார் ஏற்றுமதியை விரிவுப்படுத்தியது. கடந்த 2021-13ம் நிதி ஆண்டு காலக்கட்டத்தில் ஏற்றுமதியில் 1 மில்லியன் கார்கள் என்ற சாதனையை படைத்தது.

இதைதொடர்ந்து, அடுத்து மிக குறுகிய காலத்தில், அடுத்த ஒரு மில்லியன் கார்களை ஏற்றுமதி செய்து புதிய மைல்கல்லை தொட்டுள்ளது. கடைசியாக எஸ் பிரெஸ்ஸா, ஸ்விஃப்ட் மற்றும் விட்டாரா பிரெஸ்ஸா கார்கள் தென் ஆப்ரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. இதனுடன் கார் ஏற்றுமதியில் 20 லட்சம் என்ற புதிய மைல்கல்லை தொட்டுள்ளது.

தற்போது மாருதி கார் நிறுவனம் லத்தீன் அமெரிக்கா, ஆப்ரிக்கா மற்றும் ஆசிய பிராந்தியத்தில் உள்ள பல்வேறு நாடுகளுக்கு கார்களை ஏற்றுமதி செய்து வருகிறது. சிலி, இந்தோனேஷியா, தென் ஆப்ரிக்கா, இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு குறிப்பிடத்தக்க அளவில் கார் ஏற்றுமதி செய்து வருகிறது.

இந்தியா போன்றே, பிற நாடுகளிலும் மாருதி சுஸுகி நிறுவனத்தின் ஆல்ட்டோ, பலேனோ, டிசையர், ஸ்விஃப்ட் ஆகிய கார்கள் பிரபலமானதாகவும், வாடிக்கையாளர்களை கவர்ந்த மாடல்களாகவும் உள்ளன. கடந்த மாதம் இந்தியாவில் இருந்து ஜிம்னி எஸ்யூவியை ஏற்றுமதி செய்யும் பணிகளை மாருதி சுஸுகி துவங்கியது நினைவிருக்கலாம்.


Click it and Unblock the Notifications







