இந்தியாவில் 3வது உற்பத்தி ஆலையை அமைக்கும் பிரபல கார் நிறுவனம்! பல மடங்கு ஆதிக்கம் பெருக போகுது!
பிரபல கார் உற்பத்தி நிறுவனம் ஏற்கனவே நாட்டில் இரு கார் தயாரிப்பு ஆலைகளை செயல்படுத்தி வரும் நிலையில் மேலும் ஓர் ஆலையை உருவாக்க அனுமதி பெற்றிருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் தகவலைக் கீழே காணலாம், வாங்க.

நாட்டின் முன்னணி வாகன உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான மாருதி சுசுகி நிறுவனம் இந்தியாவில் அதன் மூன்றாவது பெரிய வாகன உற்பத்தி ஆலையை அமைக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஹர்யானா மாநிலத்திலேயே அதன் புதிய தயாரிப்பு ஆலை அமைய இருக்கின்றது. இதற்கான விண்ணப்பத்தை நிறுவனம் சமர்பித்து இருந்த நிலையில் தற்போது அதனை ஹரியானா அரசு அங்கீகரித்திருக்கின்றது.

இதற்கான ஒப்புதலை மாநிலத்தின் முதலமைச்சர் மனோஹர் லால் கத்தர் கடந்த சனிக்கிழமை வழங்கியிருக்கின்றார். இதைத் தொடர்ந்து, தற்போது மூன்றாவது உற்பத்தி ஆலையை அமைக்கும் பணியில் வாகன உற்பத்தியாளர் களமிறங்கியிருக்கின்றார். இதற்காக ஹரியானாவின் சோனிபாத் மாவட்டத்தில் உள்ல கார்கோடா பகுதியில் 900 ஏக்கர் பரப்பளவில் நிலம் ஒதுக்கப்பட்டிருக்கின்றது.

இப்புதிய கார் உற்பத்தி ஆலை பரந்த அளவு வேலை வாய்ப்பிற்கு வழி வகுக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஏற்கனவே நிறுவனத்தின் இரு உற்பத்தி ஆலைகளும் ஹர்யானா மாநிலத்திலேயே உள்ளன. குருகிராம் மற்றும் மனேசர் பகுதியில் அவை உள்ளன. இந்த நிலையிலேயே மூன்று பெரிய தயாரிப்பு ஆலையை நிறுவனம் கார்கோடா பகுதியில் அமைக்க திட்டமிட்டுள்ளது.

இந்த ஆலை மாருதி சுசுகி நிறுவனத்தின் உற்பத்தியை பன்மடங்கு உயர்த்த உதவும். ஆகையால், வேலை வாய்ப்பிற்கு மட்டுமின்றி பல நிலைகளில் இந்த ஆலை உதவும் என நம்பப்படுகின்றது. குறிப்பாக, அதிகளவில் ஏற்றுமதி மற்றும் தற்போது நிலவும் நீண்ட நாட்கள் காத்திருப்பு காலத்தை குறைக்க இது உதவ இருக்கின்றது.

மாருதி சுசுகி நிறுவனம் தற்போது இந்திய சந்தையை சிஎன்ஜி மற்றும் ப்யூவல் ஃபெளக்ஸ் எஞ்ஜின் கொண்ட வாகனங்களால் அலங்கரிக்கத் திட்டமிட்டிருக்கின்றது. நிறுவனத்தின் இந்த கொள்கைக்கு புதிதாக உருவாக உள்ள உற்பத்தி ஆலை பெருமளவில் உதவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இத்துடன், புதிய தலைமுறை மற்றும் எதிர்கால வாகனங்களைத் தயாரிக்கவும் இந்த ஆலை பயன்படுத்தப்படும் யூகிக்கப்படுகின்றது. குறிப்பாக, தற்போது சந்தையில் மாருதி சுசுகி நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு நிலவும் அதிக காத்திருப்பு காலத்தைக் குறைக்கவும் இந்த ஆலை உதவ இருக்கின்றது.

மாருதி சுசுகி நிறுவனம் அண்மையில் புதிய செலிரியோ ஹேட்ச்பேக் காரை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. இந்த பெட்ரோல் எஞ்ஜின் தேர்வில் விற்பனைக்குக் கிடைக்கும். இது லிட்டர் ஒன்றிற்கு 26.68 லிட்டர் வரை மைலேஜ் தரும். இக்காருக்கு இந்திய மதிப்பில் ரூ. 4.99 லட்சம் என்ற விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இளம் தலைமுறையினர் மற்றும் முதல் முறையாக காரை வாங்க விரும்புவோரைக் கவரும் வகையில் இக்காரை மாருதி சுசுகி இந்தியாவில் களமிறக்கி இருக்கின்றது. இதனடிப்படையிலேயே மிகவும் குறைவான விலையில் பன்முக சிறப்பம்சங்களை நிறுவனம் இக்காரில் வாரி வழங்கியிருக்கின்றது.

முந்தைய மாடலைக் காட்டிலும் அதிக கவர்ச்சியான தோற்றம், மைலேஜ் மற்றும் சிறப்பு தொழில்நுட்ப வசதிகள் என பலவற்றை நிறுவனம் வழங்கியிருக்கின்றது. இத்துடன், இக்காரை கூடுதலாக அலங்கரிக்கும் வகையில் பிரத்யேக அணிகலன்களையும் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. மேலும், இந்த காரை நிறுவனம் சிஎன்ஜி தேர்வில் விரைவில் விற்பனைக்குக் கொண்டு வர இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.


Click it and Unblock the Notifications








