நடப்பாண்டில் இரண்டாவது முறை... கார்களின் விலையை மீண்டும் உயர்த்த போகிறது மாருதி சுஸுகி...
இந்தியாவில் மாருதி சுஸுகி கார்களின் விலை அதிரடியாக உயரவுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

மாருதி சுஸுகி நிறுவனம் கார்களின் விலையை அதிரடியாக உயர்த்தவுள்ளது. இந்த விலை உயர்வு வரும் ஏப்ரல் மாதம் அமலுக்கு வரவுள்ளதாக மாருதி சுஸுகி நிறுவனம் தெரிவித்துள்ளது. 2021ம் ஆண்டில் மாருதி சுஸுகி நிறுவனம் இரண்டாவது முறையாக கார்களின் விலையை உயர்த்துகிறது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

உற்பத்தி செலவு உயர்ந்து வருவதன் காரணமாக முன்னணி நிறுவனங்கள் பலவும் கடந்த ஜனவரி மாதம் கார்களின் விலையை உயர்த்தின. இதில், மாருதி சுஸுகி நிறுவனமும் ஒன்று. மஹிந்திரா நிறுவனம் கடந்த ஜனவரி மாதம் தனது பயணிகள் மற்றும் வர்த்தக வாகனங்களின் விலையை 1.9 சதவீதம் அதிரடியாக உயர்த்தியது.

அதே சமயம் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது பயணிகள் வாகனங்களின் விலையை 26 ஆயிரம் ரூபாய் வரை உயர்த்தியது. இந்த வரிசையில் மாருதி சுஸுகி நிறுவனமும் கடந்த ஜனவரியில் ஒரு சில கார்களின் விலையை 34 ஆயிரம் ரூபாய் வரை உயர்த்துவதாக அறிவித்தது. இதை தொடர்ந்து நடப்பாண்டில் இரண்டாவது முறையாக வரும் ஏப்ரலில் மாருதி சுஸுகி நிறுவனம் விலையை உயர்த்தவுள்ளது.

ஆனால் இம்முறை கார்களின் விலையை எவ்வளவு ரூபாய் வரை உயர்த்துவதற்கு மாருதி சுஸுகி நிறுவனம் திட்டமிட்டுள்ளது? என்பது குறித்த அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. ஆனால் கார் மாடல்களை பொறுத்து விலை உயர்வு வேறுபடுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. மாருதி சுஸுகி காரை வாங்குவதற்கு திட்டமிட்டுள்ளவர்கள் மத்தியில் இந்த செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மாருதி சுஸுகி நிறுவனத்தை தொடர்ந்து மற்ற முன்னணி நிறுவனங்களும் மீண்டும் கார் விலையை உயர்த்துமா? என்பது தெரியவில்லை. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை என்றாலும், உற்பத்தி செலவு உயர்ந்து வருவதன் காரணமாக, மற்ற நிறுவனங்களும் கார்களின் விலையை உயர்த்துவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

எனவே புதிய கார்களை வாங்க திட்டமிட்டுள்ளவர்கள் இதற்கு ஏற்ப முடிவு செய்து கொள்வது நல்லது. ஏற்கனவே பெட்ரோல், டீசல் விலை உயர்வு காரணமாக கார் வைத்திருப்பவர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இந்த சூழலில் கார்களின் விலை மீண்டும் உயரலாம் என்ற செய்தி, புதிய கார்களை வாங்க திட்டமிட்டுள்ளவர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.

பெட்ரோல், டீசல் விலை உயர்வு மற்றும் கார் விலை உயர்வு ஆகிய காரணங்களால் கார்களின் விற்பனை பாதிக்குமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஆனால் இந்திய சந்தையில் இந்த இரண்டும் அம்சங்களும் கார் விற்பனையில் தாக்கத்தை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகள் ஏராளமாகவே இருக்கின்றன.

இந்தியாவில் கடந்த 2020ம் ஆண்டு பிப்ரவரி மாதத்திற்கு பிறகு கொரோனா வைரஸ் பிரச்னை காரணமாக கார் விற்பனை சரிவடைந்தது. பின்னர் பண்டிகை காலத்தில்தான் கார் விற்பனை மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பியது. தற்போது கார் விற்பனை ஓரளவிற்கு நல்ல நிலையில் உள்ளது. ஆனால் விலை உயர்வால் விற்பனை பாதிக்கப்பட்டால், அதனை கார் நிறுவனங்கள் எப்படி எதிர்கொள்ள போகின்றன? என்பது தெரியவில்லை.


Click it and Unblock the Notifications