மாருதி ஜிம்னி எஸ்யூவியின் அறிமுகம் குறித்து புதிய தகவல் வெளியானது!
ஆஃப்ரோடு கார் பிரியர்களின் ஆவலைத் தூண்டி இருக்கும் மாருதி ஜிம்னி எஸ்யூவியின் அறிமுகம் குறித்து புதிய தகவல் வெளியாகி இருக்கிறது.

உலக அளவில் ஆஃப்ரோடு பிரியர்களிடம் சுஸுகி ஜிம்னி எஸ்யூவி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற மாடலாக இருந்து வருகிறது. அடக்கமான டிசைன், குறைவான பட்ஜெட், ஆஃப்ரோடு தகவமைப்பு மற்றும் தொழில்நுட்ப அம்சங்கள் இந்த எஸ்யூவிக்கு பெரிய வர்த்தகத்தை கொடுத்துள்ளது.

இந்தநிலையில், இந்தியாவிலும் சுஸுகி ஜிம்னி எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதற்கு முன்னோட்டமாக கடந்த ஆண்டு நடந்த ஆட்டோ எக்ஸ்போவில் சுஸுகி ஜிம்னி எஸ்யூவி பார்வைக்கு வைக்கப்பட்டு இருந்தது.

மேலும், சில மாதங்களுக்கு முன் இந்தியாவில் உள்ள மாருதி சுஸுகி ஆலையில் உற்பத்தி துவங்கப்பட்டு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஆனால், இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுவது குறித்த எந்த தகவலும் இல்லை.

இந்த நிலையில், கொரோனா பிரச்னை இந்தியாவில் விஸ்வரூபம் எடுத்துள்ளதால், பல புதிய கார் மாடல்களின் அறிமுகம் ஒத்தி வைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், ஜிம்னி எஸ்யூவியின் அறிமுகமும் தள்ளி போய் உள்ளதாக தெரிகிறது.

இதன்படி, அடுத்த ஆண்டு ஜூலை மாதம் புதிய ஜிம்னி எஸ்யூவி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக இந்தியன் கார் நியூஸ் தளத்தின் செய்தி தெரிவிக்கிறது. மேலும், வரும் 2022ம் ஆண்டு நடைபெற இருக்கும் இந்திய ஆட்டோ எக்ஸ்போவில் 5 டோர் ஜிம்னி எஸ்யூவி பொது பார்வைக்கு கொண்டு வரப்படும் என்றும் அந்த செய்தி தெரிவிக்கிறது.

மேலும், ஜிம்னி எஸ்யூவியின் 3 டோர் மற்றும் 5 டோர் மாடல்களில் ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்படும் என்றும், 5 டோர் மாடலின் உருவாக்கப் பணிகள் நடந்து வருவதாகவும் தகவல்கள் கூறுகின்றன. ஏனெனில், இந்தியாவில் 5 டோர் மாடல்தான் வர்த்தக ரீதியில் வெற்றி பெறும் என்பதால், அதன் உருவாக்கப் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

எனினும், மஹிந்திரா தார் எஸ்யூவி 3 டோர் மாடலில் விற்பனை செய்யப்படுவதுடன், அதிக வரவேற்பை பெற்றுள்ளதால், வாடிக்கையாளர்களுக்கு இரண்டு தேர்வுகளை வழங்கும் விதத்தில் ஜிம்னி எஸ்யூவி 3 டோர் மற்றும் 5 டோர் மாடல்களில் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

புதிய ஜிம்னி எஸ்யூவி குஜராத் மாநிலத்தில் உள்ள சுஸுகி நிறுவனத்தின் கார் ஆலையில் உற்பத்தி செய்யப்படுகிறது. ஏற்கனவே, கொலம்பியா மற்றும் பெரு உள்ளிட்ட லத்தீன் அமெரிக்க நாடுகளுக்கு இங்கிருந்து ஏற்றுமதி செய்யப்படுகிறது.

மாருதி சுஸுகி அறிமுகம் செய்ய இருக்கும் ஜிம்னி எஸ்யூவியில் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கும். இந்த எஞ்சின் அதிகபட்சமாக 101 பிஎச்பி பவரையும், 130 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லதாக இருக்கும். 5 ஸ்பீடு மேனுவல் அல்லது 4 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளில் கிடைக்கும்.


Click it and Unblock the Notifications








