புதிய மஹிந்திரா தார் எஸ்யூவிக்கு 'சம்பவம்' நிகழ்த்த வரும் புதிய சுஸுகி ஜிம்னி எஸ்யூவி... அறிமுக விபரம்
சுஸுகி ஜிம்னி எஸ்யூவி இந்திய அறிமுகம் குறித்து வெளியாகி இருக்கும் புதிய தகவல் இந்திய ஆஃப்ரோடு எஸ்யூவி பிரியர்கள் மத்தியில் ஆவலை ஏற்படுத்தி உள்ளது.

சிறிய வகை ஆஃப்ரோடு எஸ்யூவி மார்க்கெட்டில் சுஸுகி ஜிம்னி எஸ்யூவி உலக அளவில் வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்ற மாடலாக இருந்து வருகிறது. இந்த புதிய எஸ்யூவியை எதிர்பார்த்து இந்தியர்களும் மிக நீண்ட காலமாக எதிர்பார்த்து காத்துக் கிடக்கின்றனர்.

அவ்வப்போது, இந்த எஸ்யூவி இந்திய அறிமுகம் குறித்து வெளியாகும் தகவல்கள் மகிழ்ச்சியை ஏற்படுத்தினாலும், அந்த தகவல் அப்படியே நீர்த்து போவது வாடிக்கையாகி விட்டது.

இந்த நிலையில், அடுத்த ஆண்டு ஜூலை மாதம் புதிய ஜிம்னி எஸ்யூவி மாருதி பிராண்டில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக டீம் பிஎச்பி தளம் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுஸுகி ஜிம்னி எஸ்யூவியானது இந்தியாவில் 5 டோர் மாடலாக அறிமுகம் செய்ய மாருதி சுஸுகி நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்த புதிய மாடலை உருவாக்கும் பணிகளில் மாருதி சுஸுகி ஈடுபட்டுள்ளது.

இந்த புதிய 5 டோர் ஜிம்னி எஸ்யூவி YWD என்ற குறியீட்டுப் பெயரில் உருவாக்கப்பட்டு வருகிறது. இந்த 5 டோர் மாடலானது இந்திய சந்தையில் மட்டுமே விற்பனை செய்யப்படும். இதற்கான ஆரம்ப கட்டப் பணிகள் நிறைவு பெற்று, சப்ளையர்களிடம் இருந்து உதிரிபாகங்களை சப்ளை செய்வதற்கான வாய்ப்புகள் குறித்து மாருதி கருத்து கேட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து, இந்த புதிய எஸ்யூவியை உருவாக்குவதற்கான அடுத்தக் கட்டப் பணிகள் தொடங்கும். ஜனவரிக்குள் சப்ளையர்களிடம் இருந்து உதிரிபாகங்களுக்கான விலை விபரக் குறிப்பு குறித்த தகவல்களை அளிக்க மாருதி கேட்டுக் கொண்டுள்ளது.

மேலும், அடுத்த ஆண்டு ஜூலையில் விற்பனைக்கு கொண்டு வரும் வகையில் இந்த உருவாக்கப் பணிகளை நிறைவு செய்வதற்கும் மாருதி திட்டமிட்டுள்ளது. இந்த புதிய சுஸுஜி ஜிம்னி எஸ்யூவியில் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பயன்படுத்தப்படும்.

ஏற்கனவே சுஸுஜி ஜிம்னி எஸ்யூவியை இந்தியாவில் உற்பத்தி செய்யும் பணிகளில் மாருதி சுஸுகி சில மாதங்களாக ஈடுபட்டுள்ளது. மாதத்திற்கு 1,200 முதல் 1,500 யூனிட்டுகள் உற்பத்தி செய்யப்படுவதாக தெரிய வந்துள்ளது. இவை 3 டோர் மாடலாக ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன.

இந்த மாடலை இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வருவதற்கு மாருதி விரும்பவில்லை. எனவே, சுஸுகி ஜிம்னி எஸ்யூவி 5 டோர் மாடலாக இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது.
புதிய ஜிம்னி எஸ்யூவி மஹிந்திரா தார் எஸ்யூவிக்கு நேரடி போட்டியாக நிலைநிறுத்தப்படும். அதேநேரத்தில், தார் எஸ்யூவியைவிட விலை குறைவான ஆஃப்ரோடு எஸ்யூவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, அதிக வர்த்தக வாய்ப்பு இருப்பதாக மாருதி கருதுகிறது. எனவே, இன்னும் ஒன்றரை ஆண்டுகளில் அனைத்து பணிகளையும் முடித்து ஜிம்னி எஸ்யூவியை இந்திய சந்தையில் விற்பனைக்கு களமிறக்க மாருதி சுஸுகி திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.


Click it and Unblock the Notifications







