ஏற்கனவே ரொம்ப ஈசியா இருந்துது, இப்போ இன்னும் ரொம்ப ஈசியாயிடுச்சு! மாருதியின் புதிய ஸ்மார்ட் கார் கடன் திட்டம்!
மாருதி சுசுகி நிறுவனம் நாடு முழுவதும் புதிய ஸ்மார்ட் கார் கடன் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலைக் கீழே காணலாம், வாங்க.

நாட்டின் முன்னணி வாகன உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான மாருதி சுசுகி, புதிய வாடிக்கையாளர்களை ஈர்க்கும் முயற்சியில் களமிறங்கியிருக்கின்றது. கொரோனா வைரஸ் பரவலால் நாட்டில் உள்ள அனைத்து வாகன தயாரிப்பு நிறுவனங்களும் விற்பனையில் மிகப் பெரிய சரிவைச் சந்தித்து வருகின்றன.

இந்த நிலையில் இருந்து மீள்வதற்கான முயற்சியிலேயே வாகன உற்பத்தி நிறுவனங்கள் தற்போது களமிறங்கியிருக்கின்றன.
இதற்கான ஓர் முயற்சியாகவே மாருதி சுசுகி நிறுவனம், தனது கடன் வழங்கும் செயலை மேலும் சுலபமாக்கியுள்ளது. அதாவது, புதிய காருக்கான கடன் வழங்குவதை முழுக்க முழுக்க (end-to-end) இணைய வழி சேவையாக மாற்றியிருக்கின்றது.

'மாருதி சுசுகி ஸ்மார்ட் ஃபைனான்ஸ்' எனும் பெயரில் கார் உற்பத்தியாளர் இப்பணியை நாட்டில் தொடங்கியிருக்கின்றார். இதன் வாயிலாக எளிதில் புதிய வாடிக்கையாளர்களைக் கவர முடியும் என மாருதி சுசுகி நம்பிக்கைத் தெரிவித்திருக்கின்றது.

வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் தேர்வை வழங்க வேண்டும் என்பதற்காக, அதாவது, தனக்கான வங்கியை தானே தேர்வு செய்து வாடிக்கையாளர்கள் கடன் பெறுவதற்காக பல்வேறு நிதி நிறுவனங்களுடன் (வங்கிகளுடன்) மாருதி சுசுகி தற்போது கூட்டணி வைக்கத் தொடங்கியுள்ளது.

ஆகையால், புதிய காரை மட்டுமின்றி, எந்த நிதி நிறுவனம் தனக்கு பொருந்துகிறது என்பதை தாங்களே தேர்வு செய்து புதிய மாருதி காரை வாடிக்கையாளர்களால் வாங்கிக் கொள்ள முடியும். தொடர்ந்து, வாடிக்கையாளர்கள் தங்களின் பழைய காரை எக்ஸ்சேஞ்ஜ் செய்துகொள்ள ஏதுவாக, பழைய காரின் மதிப்பை அறிந்துக் கொள்ளும் வசதியும் நிறுவனத்தின் தளத்தில் வழங்கப்பட்டுள்ளது.

இவ்வசதியினை மாருதி சுசுகி நிறுவனம் அதன் அதிகாரப்பூர்வ வலைதளப்பக்கத்திலேயே வழங்கியிருக்கின்றது. கடன் வழங்குவதை முழுக்க முழுக்க (எண்ட்-டு-எண்ட்) ஆன்லைன் வழிக்கு மாற்றுவது இதுவே முதல் முறையாகும். இந்த பெறுமை தற்போது மாருதி சுசுகி நிறுவனத்திற்கு வந்து சேர்ந்திருக்கின்றது.

ஒட்டுமொத்தமாக 14 நிதி நிறுவனங்களுடன் மாருதி கூட்டணி வைத்திருக்கின்றது. மேலும், மாருதி சுசுகியின் இந்தஸ்மார்ட் ஃபைனான்ஸ் சேவை அரெனா மற்றும் நெக்ஸா ஆகிய இரு விற்பனையாளர்களுக்கும் பொருந்தும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இந்த திட்டத்தை மாருதி நிறுவனம் நாட்டின் குறிப்பிட்ட சில முக்கிய நகரங்களில் மட்டுமே சோதனையோட்டமாக தொடங்கியது. இதற்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்ததை அடுத்து தற்போது நாடு முழுவதிற்கும் இத்திட்டத்தை மாருதி விரிவாக்கம் செய்திருக்கின்றது.

ஆன்லைன் வாயிலாகவே தங்களின் கடன் விண்ணப்பத்தின் நிலையை அறிந்து கொள்ளும் வசதியையும் நிறுவனம் வழங்கியிருக்கின்றது. ஆகையால், எந்தவொரு காரணத்திற்காகவும் வாடிக்கையாளர்கள் ஷோரூமையோ அல்லது வாடிக்கையாளர் சேவை மையத்தையோ அணுக வேண்டிய நிலை இருக்காது என்பது தெரிகின்றது.

எச்டிஎஃப்சி வங்கி, ஐசிஐசிஐ வங்கி, யெஸ் வங்கி, எஸ்பிஐ வங்கி, இந்தூசியந்த் வங்கி, பேங்க் ஆஃப் பரோடா, கரூர் வைஸ்யா வங்கி, சோலமண்டலம் ஃபைனான்ஸ், ஏயு ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி, மஹிந்திரா ஃபைனான்ஸ், கோடக் மஹிந்திரா ப்ரைம், சுந்தரம் ஃபைனான்ஸ் மற்றும் எச்டிபி ஃபைனான்சியல் சர்வீஸ் ஆகிய வங்கிகளுடனேயே நிறுவனம் கூட்டணியை வைத்திருக்கின்றது.

இதன் வரிசையில் மேலும் சில வங்கிகளையும் சேர்க்க நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதற்கான பணிகளில் மிக தீவிரமாக நிறுவனம் களமிறங்கியிருக்கின்றது. கோவிட்-19 வைரஸ் காலத்தில் ஏற்பட்ட விற்பனை இழப்பை சரிகட்ட வேண்டும் என்பதில் வாகன உற்பத்தி நிறுவனங்கள் மிக தீவிரமாக களமிறங்கியிருக்கின்றன.

இதனடிப்படையிலேயே மாருதி சுசுகி நாட்டில் முதல் முறையாக கடன் சேவையை முழுக்க முழுக்க ஆன்லைன் வழிக்கு மாற்றியிருக்கின்றது. இதன் வாயிலாக ஏற்கனவே 25 லட்சம் வாடிக்கையாளர்கள் பயனடைந்துள்ளநிலையில், இன்னும் பலரை கவரும் முயற்சியில் மாருதி களமிறங்கியிருக்கின்றது.


Click it and Unblock the Notifications