மாருதி கார் புக்கிங் பண்ணியிருக்கீங்களா? உங்களுக்கு ஒரு குட் நியூஸ்!
கொரோனா பரவல் இந்தியாவில் கோரத்தாண்டவம் ஆடி வரும் நிலையில், வாகன உற்பத்தியில் பெரும் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில், மாருதி கார் புக்கிங் செய்தவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் செய்தி ஒன்று வெளியாகி இருக்கிறது.

கொரோனா இரண்டாவது அலை தீவிரமடைந்துள்ளதால், நாடு முழுவதும் பல பகுதிகளில் மக்களின் இயல்பு நிலை பெரும் அவஸ்தையையும், அச்சுறுத்தலையும் சந்தித்து வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக, பல இடங்களில் லாக்டவுன் மற்றும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால், வர்த்தக நிறுவனங்கள் இழப்பை சந்தித்து வருகின்றன.

மேலும், கொரோனா பரவல் மீண்டும் ஆட்டோமொபைல் துறைக்கு தலைவலியை ஏற்படுத்தி உள்ளது. பல முன்னணி நிறுவனங்கள் தங்களது வாகன ஆலைகளை தற்காலிகமாக மூடி வைத்து வருகின்றன. இதனால், புதிய கார், இருசக்கர வாகனங்கள் உள்ளிட்ட புதிய வாகனங்களை புக்கிங் செய்தவர்களுக்கு டெலிவிரி குறித்த நேரத்தில் கிடைப்பதில் சிக்கல் எழுந்துள்ளது.

இந்த நிலையில், நாட்டின் மிகப்பெரிய வாகன உற்பத்தி நிறுவனமான மாருதி சுஸுகி வாடிக்கையாளர்களுக்கு ஒரு நல்ல செய்தியை பகிர்ந்து கொண்டுள்ளது. மாருதி நிறுவனத்தின் தலைவர் ஆர்.சி.பர்கவா நேற்று செய்தியாளர்களிடம் ஆன்லைன் மூலமாக பேசினார்.

அப்போது,"நாம் இப்போது முழுமையான லாக்டவுனில் இல்லை. கடந்த ஆண்டு போல தேசிய அளவிலான லாக்டவுன் அமலில் இல்லை. ஒரு சில மாநிலங்களில் மட்டுமே லாக்டவுன் அமல்படுத்தப்பட்டுள்ளது. அதேநேரத்தில், சில விலக்குகளும் கொடுக்கப்பட்டுள்ளது.

இதனால், எங்களது கார் ஆலைகளில் உற்பத்திப் பணிகள் இதுவரை எந்த பாதிப்பும் இல்லை. உதிரிபாகங்கள் சப்ளை மற்றும் பணியாளர்களின் வருகையில் பாதிப்பு இல்லாததால், அனைத்து ஆலைகளிலும் 100 சதவீதம் அளவுக்கு உற்பத்தி நடந்து வருகிறது," என்று தெரிவித்துள்ளார்.

இந்த தகவலால் புதிய மாருதி கார்களை புக்கிங் செய்த வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். அதாவது, குறித்த நேரத்தில் கார்களை டெலிவிரி பெறும் வாய்ப்பு தொடர்ந்து இருக்கிறது.

ஹரியானா மாநிலம் குர்கான் மற்றும் மானேசரில் மாருதி கார் ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. அங்கு முழுமையான லாக்டவுன் எதுவும் அமல்படுத்தப்படவில்லை. அதேபோன்று, குஜராத்தில் உள்ள சுஸுகி கார் ஆலை செயல்படும் பகுதியிலும் லாக்டவுன் போன்ற கடுமையான விதிகள் அமல் செய்யப்படவில்லை. இதனால், உற்பத்தி தொடர்ந்து நடைபெற்று வருவது தெரிய வந்துள்ளது.


Click it and Unblock the Notifications








